under review

நீலகண்டன்(நாவல்)

From Tamil Wiki

நீலகண்டன் (1914) தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் ஒன்று. ஏ.எஸ்.ஏ ராமஸ்வாமி அய்யர் என்பவர் எழுதியது. சதி, மோசடி, திருப்பங்கள் ஆகியவற்றுடன் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய நாவல். தமிழில் புனைகதை உருவாகி வந்தமைக்கான தொடக்ககாலச் சான்றுகளில் ஒன்று

எழுத்து,பிரசுரம்

இந்நாவல் 1914-ல் எழுதப்பட்டது.

கதைச்சுருக்கம்

குழந்தைப்பருவத்திலேயே தாய்தந்தையரை இழந்த நீலகண்டன் மாமன் தயவில் வாழ்கிறான். மாமன் மறைந்தபின் சொத்துக்கள் நீலகண்டனுக்கு கிடைக்காமல் மாமனின் மைத்துனன் பூர்ணலிங்கம்பிள்ளை பொய்யான ஆவணங்கள் வழியாக தடுத்து அவற்றை எடுத்துக்கொள்கிறார். நண்பர்கள் உதவியால் நீலகண்டன் சொத்துக்களை மீட்கிறான். பூர்ணலிங்கம் பிள்ளையின் மகள் வசந்தாளை அவன் மணக்க விரும்புகிறான். பூர்ணலிங்கம் குடும்பம் நீலகண்டனை கொலைசெய்ய முயல்கிறது. கடலூரில் கெடிலம் நதியில் தள்ளப்படும் நீலகண்டனை சதாசிவபிள்ளை என்பவர் காப்பாற்றுகிறார். அவருடைய மகள் விஜயாவை நீலகண்டனுக்கு மணம்புரிய அவர் விரும்ப விஜயாவின் சகோதரியான புஷ்பாவதி நீலகண்டனை ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறாள். இன்னொரு ஜோடி கேசவன் சியாமளா. மாயவரம் துலாஸ்தானத்தில் அவர்கள் சந்திக்கிறார்கள். அவர்கள் இணையமுடியாமல் ஏகப்பட்ட சதிகள். இறுதியில் சதிகள் வெளிப்பட்டு இரண்டு ஜோடிகளும் இணைகிறார்கள்.

இலக்கிய இடம்

இந்நாவலில் தமிழில் யதார்த்தாவதம் சார்ந்த கதைசொல்லும் முறை நிலைபெற்றுவிட்டதை காணமுடிகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 'சியாமளா நாராயணியோடு சுமார் நாலுமணிக்கு கடைத்தெருப்பக்கமாக வந்தாள்.வானம் ஒரே மங்கலாக இருந்தது. ஒவ்வொருசமயம் நீர்த்திவலைகள் வானத்திலிருந்து பொலபொலவென உதிர்ந்தன. ஜனங்கள் கடைத்தெருவில் சாமான்கள் வாங்குவதும் அதைச் சுமக்கமாட்டாமல் சுமந்துசெல்வதுமாக இருந்தனர். ஏழைக்குடியானவர்களும் குடியான ஸ்த்ரீகளும் பட்டாணிக்கடலையை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய் வாயிலிட்டு கொறித்துக்கொண்டவர்களாய் தாங்கள் வாங்கிய மாரிக்காலத்து வாசனைப்பொருளாயுள்ள மருவு மருக்கொழுந்து முதலயுள்ளவைகளை ஸ்திரீகள் தலையிலும் புருஷர் காதுகளிலும் அலங்காரமாக வைத்துக்கொண்டவர்களாய் கருப்பங்கழிகளை தோளில் சாத்திக்கொண்டு சென்றனர்" என்பது இந்நாவலின் நடை

உசாத்துணை

தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம்


✅Finalised Page