under review

நந்திவர்மன் காதலி

From Tamil Wiki
நந்திவர்மன் காதலி

நந்திவர்மன் காதலி (1958 ) ஜெகசிற்பியன் எழுதிய சரித்திர மிகுபுனைவு நாவல். பொதுவாசகர்களுக்குரியது. நந்திவர்ம பல்லவன் அறம்பாடி கொல்லப்பட்டதை ஒட்டி எழுதப்பட்டது. அறம்பாடுதல் பற்றிய ஒரே தமிழ் நாவல்.

பார்க்க அறம்

எழுத்து,வெளியீடு

1958ல் இந்நாவலை ஜெகசிற்பியன் கல்கி இதழில் தொடராக எழுதினார். வானதி பதிப்பகம் வெளியிட்டது.

பின்னணி

தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பான நந்திக் கலம்பகம் உருவானதைப் பற்றி ஒரு தொன்மக்கதை உள்ளது. நந்திக்கலம்பகத்தின்பாட்டுடைத் தலைவன் பல்லவநாட்டை ஆட்சி செய்த மூன்றாம் நந்திவர்மன். அவன் எதிரிகள் அவனைக் கொல்ல ஒரு புலவரை அழைத்துவந்து அறம்பாடச்செய்தனர் என்றும், புலவர்சொல்லால் பழி கொண்ட நந்திவர்மன் தன் புகழ்காக்க சிதையேறினான் என்றும் கதை கூறுகிறது. இத்துடன் நந்திவர்மன் காதலையும் ஒட்டி எழுதப்பட்ட நாவல்.

கதைச்சுருக்கம்

பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன் நாவலின் நாயகன்.பல்லவ அரியணையைக் கைப்பற்ற நடக்கும் பங்காளிகள் சண்டையில் அவனைக் கொல்ல பங்காளிகள் ஒரு கலம்பகத்தை அரங்கேற்ற ஏற்பாடு செய்கிறார்கள். தொண்ணூறு பாடல்களில் நந்திவர்மனை புகழ்ந்து இறுதிப்பாடலில் அவனுக்கு அறம்பாடுவது திட்டம். அரசர்களுக்குவரையறையானதொண்ணூறு பாடல்கள் கொண்டகலம்பகத்தின் ஒவ்வொரு பாடல் அரங்கேறும் பொழுதும்நந்திவர்மன் ஒரு பந்தலில் அமர்ந்து அதைக் கேட்க வேண்டும் என்பது முறை. ஒவ்வொரு பாடலும் பாடி முடியும் பொழுது மன்னன் அமர்ந்திருக்கும் பந்தல் பற்றி எரியும். உடனே மன்னன் அடுத்த பந்தலில் அமர அது பற்றி எரிய அதற்கடுத்த பந்தல் என்று செல்லும் தொடர் வரிசையில்எண்பத்தொன்பதாவது பந்தலுக்கு அடுத்த தொண்ணூறாவது பந்தல் எரியும் பொழுது மன்னனை மாய்த்து விடலாம் என்பது ஏற்பாடு.

நந்திவர்மனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியுற்ற அவனது முதல் மூன்று சகோதரர்களும்பந்தல் கட்டுகிறவர்கள் போன்று மாறுவேடம் அணிந்து பந்தல்களைக் கொளுத்தி நந்திவர்மனை மாய்க்கத் திட்டமிடுகின்றனர்.நாலாவது சகோதரன் காடவன் கவிஞன். அவன் தான் கலம்பகம் இயற்றுகிறான்.ஆயினும் கடைசி கட்டத்தில் அவன் மனம் நெகிழ்ந்துஇந்தச் சூழ்ச்சியை நந்திவர்மனிடமே சொல்லிஅறம் பாட மாட்டேன் என்று மறுக்கிறான். ஆனால் தன் பெயரில் பாடப்பட்ட ஓர் அரிய நூல் அரங்கேறாமல் மறையக்கூடாது என்று எண்ணிய நந்தி வர்மன் கலம்பகக் காப்பியத்தை அரங்கேற்ற சிதையிலேறி உயிர்விடுகிறான்.

இந்நாவலில் பாண்டிய மன்னன் சீமாற சீவல்லபப் பாண்டியன் தன் பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள முயல்கிறான். அவன் தங்கை வாருணி தேவியும் இதற்கு கூட்டாக செயல்படுகிறாள்.இருப்பினும் வாருணி தேவி நந்திவர்மன் மீது காதல் கொள்கிறாள். நந்தி தீயில் எரியும்போது அவளும் தீயில் பாய்கிறாள்.

'வானுறு மதியம் அடைந்தது உன் வதனம்

 மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி

கான்உறு புலியை அடைதது உன் வீரம்

 கற்பகம் அடைந்தது உன் கால்கள்

தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்தது உன் தேகம்

நானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்?

நந்தியே நந்தயா பரனே!

என்னும் பாடலுடன் நாவல் முடிகிறது

இலக்கிய இடம்

நந்திக் கலம்பகம் எவர் பாடியது, எக்காலத்தையது என தெரியாத ஒரு படைப்பு. அதையொட்டிய தொன்மக்கதையை பல்வேறு அரண்மனைச் சதிகளுடன் கலந்து புனைந்த ஒரு பொதுவாசிப்புப் படைப்பு இது. அறம்பாடுதல் பற்றிய தமிழ் நாவல் என்னும் வகையில் முக்கியமானது

உசாத்துணை

பூவனம் ஜீவி. இணையப்பக்கம்


✅Finalised Page