under review

நடந்தாய் வாழி காவேரி!

From Tamil Wiki

To read the article in English: Nadanthaai vaazhi Kaveri. ‎

நடந்தாய் வாழி காவேரி

நடந்தாய் வாழி காவேரி (1971) சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும் இணைந்து எழுதிய பயண இலக்கியம். காவேரி ஆற்றின் ஊற்றுமுகம் முதல் கடலணைவு வரை கரையோரமாக பயணம் செய்து அவ்வனுபவங்களையும் அங்கே கண்ட வாழ்க்கைச்சித்திரங்களையும் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் பயண இலக்கிய நூல்களில் முன்னோடியான படைப்புகளில் ஒன்று இது

பதிப்பு

1971-ல் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்வட்டம் என்னும் நிறுவனம் இந்நூலை வெளியிட்டது. பின்னர் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது

பயணம்

இந்நாவல் வெளிவந்த காலத்தைக் கொண்டு பார்த்தால் 1970-க்கு முன் தி.ஜானகிராமனும் சிட்டியும் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இந்நூல் பயணக்கட்டுரைகளுக்கான முறைமைகள் எவற்றையும் கடைப்பிடிக்கவில்லை. இதில் அவர்கள் பயணம் மேற்கொண்ட தேதிகள், ஆண்டுகள் எவையுமே இல்லை. முன்னுரையிலும் ஜானகிராமன் குறிப்பிடவில்லை. மறுபதிப்புகளிலும் காலக்குறிப்புகள் இல்லை.

காரில் கொள்ளேகால் சென்று அங்கிருந்து தலைக்காவேரியை அடைந்து பயணத்தை தொடங்கும் சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும் தொடர்ச்சியாக இப்பயணத்தை மேற்கொள்ளவில்லை. நடுவே விட்டுவிட்டு மீண்டும் பயணத்தை நடத்தினார்கள். பூம்புகார் இருந்த இடத்தருகே கடலில் பயணம் முடிகிறது. பயணம் நிகழ்ந்த நாட்களின் எண்ணிக்கையையும் இந்நூலில் இருந்து ஊகிக்க முடிவதில்லை

இலக்கியமதிப்பீடு

பயண இலக்கியங்கள் அதிகமாக வராத காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் என்பதனால் அதற்குரிய தகவல் ஒழுங்கோ, காலக்குறிப்புகளோ இல்லாமல் புனைவுபோன்ற நடையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஆலயங்கள் பற்றிய தொல்லியல் செய்திகளும் வரலாற்றுச் செய்திகளும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் சிருங்கேரி, காஞ்சி மடங்கள் வெளியிட்டிருக்கும் பயணக்குறிப்புநூல்களையே ஜானகிராமன் சார்ந்திருக்கிறார். காவேரி குறித்த பண்பாட்டுச் செய்திகளும் செவிவழிக்கதைகளும் கூறப்பட்டுள்ளன

தி.ஜானகிராமன் என்னும் புனைவெழுத்தாளர் எழுதியது என்பதனால்தான் இது முக்கியமானது. ஜானகிராமனின் புனைவெழுத்து நடையும் மனிதர்களின் பேச்சுக்களை நுட்பமாகக் காட்டும் திறனும் இந்நூலில் உள்ளது. ஆனால் காட்சிச்சித்தரிப்புகள் விரிவானவை அல்ல.

உசாத்துணை


✅Finalised Page