செவ்வந்திநாத தேசிகர்
- தேசிகர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேசிகர் (பெயர் பட்டியல்)
செவ்வந்திநாத தேசிகர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
செவ்வந்திநாத தேசிகர் இலங்கை யாழ்ப்பாணம் கரணவாயில் திருஞானசம்பந்த தேசிகர்-சிவபாக்கியம் இணையருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த சில ஆண்டுகளில் தந்தையை இழந்தார். திருஞானசம்பந்த தேசிகரின் தம்பி நமசிவாய தேசிகர், இவரையும் இவருடைய தமையன் கயிலாயநாத தேசிகரையும் வளர்த்தார். செவ்வந்திநாத தேசிகர், நமசிவாய தேசிகரிடம் தமிழ், சமஸ்கிருதம் கற்றார். சுன்னாகம் பிராசீன பாடசாலையில் கல்வி கற்றார். சி. கணேசையரிடம் தமிழ் இலக்கணங்கள், சித்தாங்கள் பயின்றார்.
அமைப்புப் பணிகள்
செவ்வந்திநாத தேசிகர் இலங்கை கரணவாயில் 'வித்தியா விருத்திச் சங்கம்' என்ற சங்கத்தையும், ஒரு வித்தியாசாலையையும் நிறுவி நடத்தினார். அரசாங்க நன்கொடைகள் கிடைத்தன. வித்தியாசாலையில் தமிழ் விரிவுரைகளும் சைவ விரிவுரைகளும் நடைபெற்றன. பிறவூர்களிலும் சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இவர் விரிவுரைகள் பல இயற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
செவ்வந்திநாத தேசிகர் இளமையிலிருந்தே கவிதைகள் இயற்றினார். கவிதைகளை விளக்கிக் கூறும் திறம் பெற்றிருந்தார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். சின்னத்தம்பிப் புலவர் எழுதிய 'கரவை வேலன் கோவை' நூலை மெய்ப்பு நோக்கி அச்சேற்ற உதவினார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களின் பிரபந்தங்களைத் தொகுத்து அச்சேற்றினார்.
நூல் பட்டியல்
- மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணிமாலை
- நல்லூர்க் கந்தசுவாமி பேரில் கோவை
- தமிழ்மொழியாராய்ச்சி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-May-2023, 09:29:06 IST