சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சுங்கை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுங்கை (பெயர் பட்டியல்)
சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி.1936-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியின் பதிவெண் KBD 5054.
வரலாறு
சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு கோவிலில் அமைக்கப்பட்ட கூத்து மேடையில் இயங்கியது. அக்காலக்கட்டத்தில் இப்பள்ளியில் 35 மாணவர்கள் கல்வி பயின்றனர். ம. முத்துசாமி தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்தார்.
புதிய கட்டிடம்
1972-ல் அரசாங்க நிதியுதவியில் பொதுப்பணித்துறை சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டு மாடிகளைக்கொண்ட கட்டிடத்தைக் கட்டித் தந்தது. இக்கட்டிடத்தில் ஓர் அலுவலகம், தலைமையாசிரியர் அறை, ஆசிரியர் அறை, நூலகம், ஆசிரியர், மாணவர்களுக்கான கழிவறைகள் இருந்தன. பள்ளிக்கட்டிடத்தின் அருகில் சிற்றுண்டிச்சாலையும் அமைக்கப்பட்டது.
பள்ளி நிலம்
சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 0.488 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நிலம் SOCFIN Company எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 1971 முதல் 2000 வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு இந்நிலம் பள்ளிக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. 1998-ல் SOCFIN நிறுவனத்திடமிருந்து கெடா மாநில அரசின் துணை நிறுவனமான PKNK (கெடா மாநில வளர்ச்சிக்கழகம்) இந்நிலத்தை வாங்கியது. இந்நிறுவனம் 2021- க்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி இருப்புச் சான்றிதழைப் பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக்கு நிபந்தனை விதித்துள்ளது.
பள்ளியின் வளர்ச்சி
சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அருகில் பல புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நவம்பர் 2010-ல் பத்தாவது மலேசிய திட்டத்தின் கீழ் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய இணைக்கட்டிடத்திற்கு ரி.ம 2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. இணைக்கட்டிடம் கட்டும் பணி டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2012-ல் பூர்த்தியானது. மூன்று மாடிகளைக் கொண்ட இணைக்கட்டிடம் ஜூன் 2012-ல் அதிகார்வப்பூர்வமாகப் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் தலைமையாசிரியர் அறை, துணைத் தலைமையாசிரியர் அறை, ஆசிரியர் அறை, வாழ்வியல் திறன் அறை, அறிவியல் அறை, கணினி அறை, நான்கு வகுப்பறைகள், ஆசிரியர், மாணவர்களுக்கான கழிவறைகள், சிற்றுண்டிச்சாலை ஆகியவை உள்ளன. தற்போது புதிய இணைக்கட்டிடத்துடன் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகம் 1.070 ஏக்கரில் அமைந்துள்ளது.
பாலர் பள்ளி
2018-ல் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக்குழுவினரின் கண்காணிப்பில் பாலர் பள்ளி தொடங்கப்பட்டது. ஜனவரி 2020-ல் 25 மாணவர்களுடன் அரசாங்கப் பாலர் பள்ளி செயல்படத் தொடங்கியது.
தலைமையாசிரியர் பட்டியல்
| எண் | பெயர் | ஆண்டு |
| 1. | M. முத்துசாமி | 1935 - 1945 |
| 2. | M. சண்முகம் | 1945 - 1960 |
| 3. | A. சந்திரன் | 1960 - 1971 |
| 4. | N. முனுசாமி | 1971 - 1990 |
| 5. | S. ஆறுமுகம் | 1990 - 1999 |
| 6. | R. சுப்பிரமணியம் | 1999 - 2001 |
| 7. | இல. பெருமாள் | நவம்பர் 1, 2001 - மார்ச் 5, 2005 |
| 8. | கமலா தேவி முனியாண்டி | மே 8, 2005 - ஜூலை 10., 2014 |
| 9. | கமலவள்ளி செல்லப்பன் | ஜூலை 13, 2014 - ஏப்ரல் 17, 2017 |
| 10. | சுப்பிரமணியம் செல்லப்பன் | ஏப்ரல் 20, 2017 - ஜூலை 30., 2019 |
| 11. | பழனியப்பன் முத்துசாமி | ஆகஸ்ட் 1, 2019 - தற்போது வரை |
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Jul-2024, 09:49:07 IST
