under review

கீதா பென்னட்

From Tamil Wiki
கீதா பென்னட்

கீதா பென்னட் (நவம்பர் 21, 1950 - ஆகஸ்ட் 6, 2018) தமிழ் எழுத்தாளர், வீணை இசைக்கலைஞர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கீதா பென்னட் நவம்பர் 21, 1950-ல் சங்கீத கலாநிதி ராமநாதன், கெளரி இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். சென்னையில் பள்ளிக்கல்வி பயின்றார். தந்தை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயாவின் தலைமையாசிரியராக ஆனபோது குடும்பத்துடன் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில், மிடில்டவுனிலுள்ள வெஸ்லேயன் பல்கலைக்கழகத்தில் தந்தையின் வேலை நிமித்தமாக அங்கு குடிபெயர்ந்தார். நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தார்.

கீதா, கணவர் ஃப்ராங்க் பென்னட்டுடன்

தனி வாழ்க்கை

கீதா பென்னட் அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ராங்க் பென்னட்டை திருமணம் செய்து கொண்டார். மகன் ஆனந்த் ராமசந்திரன்.

கீதா பென்னட் (நன்றி: The Hindu)

இசை வாழ்க்கை

தந்தை வழியாக வீணை, வாய்ப்பாட்டு இசை கற்றார். இசை நிகழ்ச்சிகளில் வீணை வாசித்தார். இசைப் பயிற்சி ஆசிரியர். இசை பற்றிய கட்டுரைகள், பத்திகளை பத்திரிக்கைகளில் எழுதினார். தன் தந்தையிடம் கற்ற இசை நுணுக்கங்களை இணையத்தில் பதிவு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

கீதா பென்னட் எழுதிய சிறுகதைகள் ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர் மலர், இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் வெளிவந்தன. ‘வேலைக்குப் போகும் மருமகள்’ என்ற சிறுகதை இலக்கிய சிந்தனை விருது பெற்றது. கீதா பென்னட்டின் ‘ஆதார சுருதி’ சிறுகதைத் தொகுப்பு கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கல்கி, சுஜாதா, உஷா சுப்ரமணியன் ஆகியோர் கீதா பென்னட்டின் ஆதர்ச எழுத்தாளர்கள். மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின. முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார்.

இலக்கிய இடம்

இந்திய, அமெரிக்க வாழ்வுமுறைகளின் (குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின்) கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தன் எழுத்துக்களில் பதிவு செய்தார்.

விருதுகள்

  • கீதா பென்னட்டின் ‘வேலைக்குப் போகும் மருமகள்’ சிறுகதை இலக்கிய சிந்தனை விருது பெற்றது.

மறைவு

கீதா பென்னட் இருபத்தியிரண்டு ஆண்டுகள் மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சையில் இருந்தார். ஆகஸ்ட் 6, 2018-ல் காலமானார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • ஆதார சுருதி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page