under review

ஐடா ஸ்கடர்

From Tamil Wiki
ஐடா சோஃபியா ஸ்கடர்

ஐடா ஸ்கடர் (ஐடா சோஃபியா ஸ்கடர்) (டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்தவர். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை (சி.எம்.சி) நிறுவியவர். வேலூர் மக்களால் பாசத்துடன் ஐடா அத்தை (aunt Ida) என்று அழைக்கப்பட்டவர். தாதியர் கல்வியையும், பெண்களுக்கான மருத்துவக் கல்வியையும் இந்தியாவில் அறிமுகப் படுத்திய முன்னோடி. தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்தவர்.

பிறப்பு, கல்வி

டாகடர். ஜான் ஸ்கடர் II, சோபியா ஸ்கடர் தம்பதியினருக்கு, டிசம்பர் 9, 1870-ல் ஐந்தாவது குழந்தையாக இந்தியாவில் ஐடா ஸ்கடர் பிறந்தார். தந்தை இந்தியாவில் மிஷனரியாக மருத்துவப்பணி செய்து வந்தார். அவரின் ஏழாவது மகனான டாக்டர். ஜான் ஸ்கடர் II, திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்தார். இந்தியாவின் 1877 பஞ்சத்தின்போது ஜான் ஸ்கடர் தம்பதியினர் வேலூரில் மருத்துவ மிஷனரியாக பணிசெய்தனர். தன் சிறுவயதில் ஐடா ஸ்கடர் மிஷினரிப் பணிகளில் தாய் தந்தையருடன் இணைந்து சேவை செய்தார்.

பெற்றோர்களுடன் ஐடா ஸ்கடர்

ட்வைட்.எல்.மூடி (Dwight L. Moody) ஐடாவை தன்னுடைய நார்த் ஃபீல்ட் செமினெரியில் (Northfield Seminary) படிக்குமாறு அழைத்ததால் பள்ளிக்கல்விக்காக அமெரிக்கா சென்றார். ஐடா ஸ்கடரின் பள்ளி வாழ்க்கையும் இறைத் தூதர் (missionary) பயிற்சியும் இருபது வயதில் நிறைவு பெற்றது. தாய் சோபியா ஸ்கடருக்கு உடல் நலம் குன்றியதால் ஐடா ஸ்கட்டர் அவருக்கு உதவ இந்தியா வந்தார். அங்கு ஆண்கள் பிரசவம் பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கையால் இளம் பெண்கள் பிரசவத்தில் இறப்பது கண்டு மருத்துவம் பயில முடிவு செய்தார். காதலித்து திருமணம் செய்து அமைதியான வாழ்க்கையை அமெரிக்காவில் வாழவேண்டுமென்றும், ஒருபோதும் இந்தியா திரும்பி வரவேண்டாமென்றும் நினைத்த ஐடா ஸ்கடர் வேலூரில் பிரசவத்தால் இறந்த மூன்று இளம் பெண்களைக் கண்டு தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொண்டார். 1899-ல் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். திருமணக் கனவைக் கைவிட்டு தன்னை முழுவதுமாக மருத்துவ சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

மருத்துவப்பணி

காந்தியுடன் ஐடா ஸ்கடர்

தமிழ்நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார். அவர் குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். 1900-ல் ஐடா ஸ்கடரின் தந்தை ஜான் ஸ்கட்டர் காலமானார். மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். 1909-ல் அவர் ஆரம்பித்த வீதியோர கிளினிக் திட்டம் கிராம மக்களுக்கு உதவியது. கிராமம் கிராமமாகச் சென்று மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழைகளுக்கு மருத்துவச் சேவை செய்தார்.

ஷெல் மருத்துவமனை

மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell) தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக அவரின் மனைவியின் நினைவாக அளித்த பத்தாயிரம் அமெரிக்க டாலர்களைக் கொண்டு வேலூரில் சிறு மருத்துவமனை அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். தோழி ஆனி ஹான்காக்குடன் ஜனவரி 1900-ல் வேலூருக்கு வந்தார் ஐடா திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. அங்கு வருடத்தில் 40,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது இது Mary "Tabler Schell Eye Hospital" என்று கண் மருத்துவமனையாக இயங்கி வருகின்றது.

செவிலியர் பள்ளி

தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக், காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார். அந்த சமயத்தில் சேவை செய்ய பல பெண்கள் தேவைப்படுவதை உணர்ந்து செவிலியர்களை உருவாக்க விரும்பினார். சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார்.

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி)
கிறுஸ்துவ மருத்துவக் கல்லூரி , வேலூர்
ஐடா ஸ்கடர்

1913-ல் செவிலியர்களைத் தவிரவும் மருத்துவர்களாக அதிக பெண்கள் மருத்துவ சேவைக்குத் தேவை என்று நினைத்தார். அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918-ல் பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி நிறுவப்பட்டது. அதில் சேர நூற்று ஐம்பத்தி ஒன்று பெண்கள் மனு செய்திருந்தனர். அவர்களில் பதினேழு பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டனர். கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் (சி.எம்.சி.) ஆரம்பமாக இது அமைந்தது. 1928-ம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள் பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 1928-ல் பாகாயத்தில் மருத்துவக் கல்லூரியின் வளாகம் அமைக்கப்பட்டது. மகாத்மாகாந்தி கல்லூரியையும் மருத்துவமனையையும் நேரில் கண்டு வாழ்த்தினார். இவரின் மருத்துவப் பணியை இறைப்பணியாக ஏற்று நாற்பது கிறிஸ்துவ சபைகள் பொருளாதார ரீதியாக உதவின. மேலும் பொருளாதார பற்றாக்குறையால் நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941-ல் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் அனைத்து பகுதிகளுக்கும் பிரயாணம் செய்தார். அங்குள்ள திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள் உதவிகள் செய்வதாக வாக்களித்தன. இரண்டு மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம் ஆளுக்கு ஒரு டாலர் என இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டினார். பல மில்லியன் டாலர்களுடன் வேலூர் திரும்பி, மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் நவீனப்படுத்தினார். 1945-ல் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இன்று அனைத்து வசதிகளுடனும் நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும், உலகின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாகவும் சி.எம்.சி. விளங்குகிறது. ஆண்டுக்கு மூவாயிரம் ரூபாய் கல்விக்கட்டணத்தில் பயில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தனது மருத்தவப்படிப்பிற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தம் பெறப்படுகிறது. இம்முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சி.எம்.சி.

விருதுகள்

  • 1952-ல் உலகின் சிறந்த ஐந்து டாக்டர்களில் ஒருவராக ஐடா ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ப்ரிடிஷ் அரசரிடமிருந்து கெய்சர்-இ-ஹிந்த்[1] விருதும் பொற்பதக்கமும் பெற்றார்.
  • அமெரிக்கா 1935-ல் டி.எஸ்ஸி (Distinguished Service Cross) பட்டம், எப்.ஏ.சி.எஸ் என்னும் மதிப்பியல் பட்டம் ஆகியவற்றை அளித்தது.
  • ஆகஸ்ட் 12, 2000-ல் இந்திய அரசு ஐடா ஸ்கடருக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டது.
மாணவர்களுடன் ஐடா ஸ்கடர்

மறைவு

ஐடா ஸ்கடர் தமது முதிர் வயதில் கொடைக்கானல் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். மே 24, 1960-ல் காலமானார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. The Kaisar-i-Hind Medal for Public Service in India was a medal awarded by the Emperor/Empress of India between 1900 and 1947, to "any person without distinction of race, occupation, position, or sex who shall have distinguished himself (or herself) by important and useful service in the advancement of the public interest in India.

வெளி இணைப்புகள்


✅Finalised Page