under review

அஷ்ரபா நூர்தீன்

From Tamil Wiki
அஷ்ரபா

அஷ்ரபா நூர்தீன் (பிறப்பு: 1962) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். பெண்ணியக் கவிதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அஷ்ரபா நூர்தீன் இலங்கை திருகோணமலை பாலையூற்றில் சேகு நூர்தீன், ஜெமீலா உம்மா இணையருக்கு 1962-ல் பிறந்தார். அ.வா.முஹ்சின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இவர் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர். வானொலி நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

அஷ்ரபா நூர்தீன் 1980-களில் ஈழத்து இலக்கியத் தளத்தில் அறியப்பட்ட ஆளுமை. கவிதைகள் எழுதினார். 1982-ம் ஆண்டு சுடர் சஞ்சிகையின் 'தமிழன்னை சிரிக்கின்றாள்' இவரின் முதல் கவிதை. சிந்தாமணி, தினகரன், சூடாமணி, சரிநிகர் போன்ற பத்திரிகைகளிலும் தாகம், வசந்தம் போன்ற சஞ்சிகைகளிலும் இலங்கையில் வெளிவந்த பல கையெழுத்துச் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்தன. 'ஆகக் குறைந்த பட்சம்' என்ற பெயரில் இவரது முதலாவது கவிதைத் தொகுதி 2012-ல் வெளிவந்தது. 2016-ம் ஆண்டு 'நேசிப்பு' என்ற கவிதைத் தொகுதியை வாசுகி என்ற மற்றுமொரு பெண் கவிதாயினியுடன் இணைந்து வெளியிட்டார்.

விருதுகள்

  • 2004-ம் ஆண்டு திருகோணமலை பிரதேச சபை பிரதேச சாகித்ய விருது.

இலக்கிய இடம்

அஷ்ரபா நூர்தீனின் கவிதைகள் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளைப் பேசிய போதிலும் தன்னை பெண்ணியவாதியாக அடையாப்படுத்துவதில்லை.

"அஷ்ரபா நூர்தீனின் கவிதைகளில் கவிதா மொழியின் இயங்கு நிலை தனித் தன்மை பெற்றிருக்கின்றது. ஒரு பெண்ணின் பன்முக அவலங்களை வேட்கையுடன் அவர் படைப்புக்களில் காட்சிப்படுத்தும் விதம் உரத்த குரலாக அமைந்துள்ளது." என ஏ.நஸ்புள்ளாஹ் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • ஆகக் குறைந்த பட்சம்
  • நேசிப்பு(இரு கவிஞர்களுடன் இணைந்து)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2024, 19:17:13 IST