ராய் மாக்சம்
ராய் மாக்சம் (ராய் மாக்ஸம்) (13 செப்டம்பர் 1939) இலண்டனில் வாழும் ஆங்கிலேய எழுத்தாளர். மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ் நாட்டில் அறியப்பட்ட எழுத்தாளரும் ஆவார். இவர் அதிகம் அறியப்படாத வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய நூல்களையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
ராய் மாக்சம் 13 செப்டம்பர் 1939ல் இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷையர் மாகாணத்தில், ஈவ்ஷம் எனும் ஊரில் பிறந்தார். இது ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்டிராட்ஃபர்டுக்கு அருகிலிருக்கும் ஊராகும்.
அங்கிருந்த பிரின்ஸ் ஹென்றி கிராமர் பள்ளியில் கல்விப்படிப்பை முடித்தார். ஹெரஃபொர்ட்ஷையரில் ஒரு பழத் தோட்டத்தில் சிறிய காலம் வேலைபார்த்த பின் அவர் நியசிலாந்த் ( தற்போதைய மலாவி) நாட்டில் தேயிலைத் தோட்ட உதவி மேலாளராகப் பணியாற்றினார்.
தொழில், பணி
13 வருடங்கள் ஆப்ரிக்காவில் பணிபுரிந்த ராய் மாக்சம் மலாவியின் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலகட்டத்தில், 1961ல் இலண்டன் திரும்பினார். இலண்டனில் ஆப்ரிக்க கலைப்பொருட்களை விற்கும் ஒரு கலையரங்கத்தை உருவாக்கினார்.
பின்னர் காம்பெர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து ஆவணம் மற்றும் புத்தகங்களைப் பேணுவதில் தேர்ச்சி பெற்றார். இங்கிலாந்து திருச்சபையின் தலைமைக் ஆலயமான காண்டர்பரி பேராலயத்தின் ஆவணக் காப்பகத்தில் சிறிது காலம் வேலை பார்த்தபின் செனட் ஹவுஸ், இலண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகம் ஆகியவற்றில் ஆவணங்களை புதுப்பிக்கும் மற்றும் பேணும் பணியில் ஈடுபட்டார்.
ஆங்கில கல்வி நிலையம் (Institute of English Studies) ஒன்றில் சிறிது காலம் முதுகலை மாணவர்களுக்கு ‘புத்தகத்தின் வரலாறு’ எனும் தலைப்பில் வகுப்பூம் எடுத்துள்ளார்.
எழுத்து, புத்தகங்கள்
- ராய் மாக்சம் எழுதிய முதல் புத்தகம் 1990ஆம் ஆண்டு வெளிவந்தது. நைரோபியிலிருந்த டீம் எனும் வெளியீட்டாளர்கள் பதிப்பிருந்த ‘ஃபிரீலாண்டர்’ எனும் தலைப்பு கொண்ட நாவல் அது.
- அவரது முக்கியமான புத்தகமாக கருதப்படுவது ‘த கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’ (2001) ஆகும். தமிழில் இது ‘உப்பு வேலி’ எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் சுங்க்க வரி வசூலிக்க வடமேற்கில் இமாலயத்தின் அடிவாரத்திலிருந்து தென்கிழக்கில் ஒருசாவரை 1500 மைல் தூரம் வளர்க்கப்பட்ட முட்புதர் வேலி குறித்து அவர் அறிந்த வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பும் அவ்வேலியை அவர் தேடிச்சென்ற பயணங்களின் குறிப்பும் அடங்க்கிய புத்தகம் அது.
- இதை அடுத்து அவர் தனது தேயிலைத் தோட்டப் பின்னணியில் தேயிலையின் வரலாற்றை எழுதிய புத்தகம் ‘டீ. அடிக்ஷன், எக்ஸ்ப்ளயிட்டீஷன் அண்ட் எம்பயர்’ எனும் புத்தகம் 2003ல் வெளியானது. இப்புத்தகம் 2009ல் ‘ய பிரீஃப் ஹிச்டரி ஆஃப் டீ’ என்ற தலைப்பில் வெளியானது. இப்புத்தகம் தமிழில் ‘தே: ஒரு இலையின் வரலாறு’ எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ‘சம்பல் கொள்ளைக்காரி’ என அறியப்பட்டு பின்னர் அரசியலில் நுழைந்து வெற்றிகண்ட பூலன் தேவியின் தனிப்பட்ட நண்பரான ராய் அவருடனான அனுபவங்க்களை ‘அவுட்லா: இண்டியாஸ் பேண்டிட் குயின் அண்ட் மி’ (2010) எனும் தலைப்பில் புத்தகமாக எழுதினார்.
- 2014 ‘த ஈஸ்ட் இண்டியா கம்பெனி வைஃப்’ எனும் நாவலை எழுதியுள்ளார்.
- 2016 ‘த தெஃப்ட் ஆஃப் இண்டியா: த யூரோப்பியன் கான்குவெஸ்ட் ஆஃப் இண்டியா 1498 - 1765’ எனும் நூலில் டச்சுக்காரர்களின் வருகையில் துவங்கி கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சிக்காலம் முடிவடைந்த இராபர்ட் கிளைவின் காலம்வரையிலான ஐரோப்பிய நாடுகளின் இந்திய ஆக்கிரமிப்பின் வரலாற்றை எழுதியுள்ளார். இப்புத்தகம் தமிழில் ‘இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எழுத்து முறை
ராய் மாக்சமின் வரலாற்று நூல்கள் அரிய தகவல்களைச் சொல்பவைகளாக அமைந்துள்ளன. அந்த வரலாற்றுடன் தன் அனுபவங்க்களையும் அவர் சேர்த்துக்கொண்டு எழுதுவது அவரது தேயிலை மற்றும் உப்பு வேலி குறித்த புத்தகங்களில் சிறப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. பல பயணங்க்களை மேற்கொண்ட ராய் மாக்சம் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பலமுறை பயணித்துள்ளார்.