under review

தேர்வண் மலையன்

From Tamil Wiki
Revision as of 19:15, 29 September 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேர்வண் மலையன் (திருமுடிக்காரி) சங்ககாலக் குறு நில மன்னர்களுள் ஒருவர். இவரை பற்றிய பாடல் ஒன்று புறநானூற்றில் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் என்ற புலவரால் பாடப்பட்டது.

மலையர்

சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களைப் போலவே அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் அதியர், ஆவியர், மலையர் போன்ற குறு நில மன்னர்களும் சங்க காலத்தில் ஆண்டு வந்தனர். அத்தகைய அரசர்களுள் மலையர்கள், மலையமான்களும் அடங்குவர். மூவேந்தர்கள் குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் ஆண்டு வந்தது போல இம்மன்னர்களும் தங்களுக்கென குறிப்பிட்ட எல்லையில் ஆண்டு வந்தனர். தென்ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர்கள் மலையமான் இனம். முள்ளூர் என்ற மலையும், காடும் சூழ்ந்திருந்ததால் மலாடு, மலையமாநாடு என்றும் அழைக்கப்பட்டது.

தேர்வண் மலையன் பற்றிய செய்திகள்

மலையமாநாட்டை ஆண்ட மன்னர்களுள் தேர்வண் மலையன் எனும் திருமுடிக்காரி எனும் அரசன் புகழ் பெற்றவன். வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் புலவரின் காலத்தைச் சேர்ந்தவன். ஏழு வள்ளல்களுள் ஒருவனாகக் கருதப்பட்டான். தன்னை நாடி வரும் புலவர், பாணருக்கு களிரும், தேரும் கொடுத்து சிறப்பு செய்தான். வீரமானவன். தன் முள்ளூர் மலையைக் கைப்பற்ற வந்த ஆரிய அரசர்களை தோற்கடித்தவன். கொல்லி மலையை ஆண்ட வில்லாண்மை மிக்க வல்வில் ஓரியைக் கொன்று கொல்லியைத் தன் நண்பன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அன்பளிப்பாக அளித்தவன். பகைவர் நாட்டுப் பசு நிரைகளைக் கவர்ந்து வருவதில் வல்லவன். பேரரசர் மூவர்க்கும் படைத்துணை போகும் பெரும்படை வலிமை கொண்டவன்.

புறநானூறு 125-ஆவது பாடல்

சோழனுக்கும் சேரனுக்கும் நடைபெற்ற போரில் தேர்வண் மலையன் சோழனுக்குத் துணையாக நின்று போரிட்டு வெற்றி பெற்றான். தேர்வண் மலையனின் வெற்றிகளுள் ஒன்றான இந்நிகழ்வை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் பாடுகிறார். போரில் வென்றவனும், தோற்றவனும் தேர்வண் மலையனின் புகழ் பாடுகின்றனர். போரில் வென்றதற்கு சோழன் மலையனுக்கு பொருள் தருகிறான். உழுத எருது நெல்லை உழுதவனுக்குக் கொடுத்துவிட்டு வைக்கோலைத் தின்பது போல மலையன் கொடைத்தன்மை உடையவன் என்ற செய்தி சொல்லப்படுகிறது. நூல் நூற்கும் பெண் வைத்திருக்கும் பஞ்சு போல் நெருப்பில் சுட்டு வெந்த புலால் உணவைப் பறிமாறிக்கொண்டு உண்ணலாம் என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் மலையனைக் காண வருவதாக பாடல் அமைந்துள்ளது. எந்தவொரு திட்டவட்டமான பிரதி பலனையும் பாராமல் சோழனுக்கு உதவும் அவனின் தன்மை பாடலில் விளக்கப்படுகிறது.

"வென்றோன் யான் அன்று; தேர்வண் மலையன்" என போர்க்களத்தில் களிறு பல கொன்று ராஜசூயம் வேட்ட வெற்றிக்குரிய சோழன் பெருநற்கிள்ளி கூறுகிறான். "வீரக்கழல் ஒலிக்க கள்ம்புகுந்து விரைந்து வந்து, எதிர்த்தாரை தடுத்து நிறுத்தி வெற்றி கொண்ட தேர்வண் மலையன், சோழனுக்குத் துணைவராதிருந்தால் அச்சோழனை எளிதில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். நம்மைத்தொலைத்தோன் சோழன் அல்லன்; தேர்வண் மலையனே" என தோற்ற சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை கூறுகிறான். இந்த வரிகளைக் கொண்டு மலையனின் வீரத்தை அறியாலாம்.

பாடல் நடை

  • புறநானூறு 125

குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
வெலீஇயோன் இவன் எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய,
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
தொலைஇயோன் அவன் என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே

உசாத்துணை


✅Finalised Page