under review

தமிழ் புளூட்டாக்

From Tamil Wiki
Revision as of 09:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ் புளூட்டாக்

தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் முதல் நூல் என கருதப்படுகிறது. தமிழ் புளூட்டாக் ‘தமிழ்ப் புலவர் சரிதம்’ என்னும் ஆங்கில நூலின் முன்னோடி நூல்.

நூல் பற்றி

தமிழ் புளூட்டாக் இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ரிப்ளே அண்ட் ஸ்ட்ரோங் (Ripley & Strong) பதிப்பகத்தாரால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ”The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions” என்னும் ஆங்கில நூல் 1859-ம் ஆண்டு வெளிவந்தது.

பெயர்க்காரணம்

பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தின் புகழ்பெற்ற நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் "புளூட்டாக்" எனவும் வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார்.

உள்ளடக்கம்

இந்நூலில் 189 தமிழ்நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. தமிழ் மொழியில் வெளியிடப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், வெளிவந்த ஆண்டு போன்ற விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

இந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய தகவல்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

பதிப்புகள்

இந்நூல் முதன் முதலாக 1859-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1946-ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் "ஆசிய கல்விச் சேவை" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மறுபதிப்புச் செய்துள்ளனர்.

நூலில் இடம்பெற்ற ஈழப்புலவர்கள்

  • அரசகேசரி
  • நல்லூர் வி. சின்னத் தம்பிப் புலவர்
  • சுன்னாகம் வரத பண்டிதர்
  • மாதோட்டம் லோரெஞ்சுப் புலவர்
  • ஞானப்பிரகாச முனிவர்
  • கூழங்கைத் தம்பிரான்
  • பிலிப்பு தெ. மெல்லோ
  • கணபதி ஐயர்
  • நெ. சேனாதிராய முதலியார்
  • வட்டுக்கோட்டை கணபதி ஐயர்
  • நெ. சேனாதிராய முதலியார்
  • நல்லூர் ம. சரவண முத்துப்புலவர்
  • அராலி விசுவநாத சாஸ்திரியார்

உசாத்துணை


✅Finalised Page