under review

ஜடாவல்லவர்(நாவல்)

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜடாவல்லவர்

ஜடாவல்லவர் (1918) தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று. யதார்த்த பாணியில் குடும்பச் சூழலை சித்தரித்த நாவல் இது. வரகவி அ. சுப்ரமணிய பாரதி எழுதியது. விமர்சகர் க.நா.சுப்ரமணியம் அவருடைய படித்திருக்கிறீர்களா? பட்டியலில் இந்நாவலை குறிப்பிடுகிறார்

எழுத்து, பிரசுரம்

ஜடாவல்லவர் 1918-ல் எழுதப்பட்டு 1921-க்குள் மூன்று பதிப்புகள் வெளிவந்த நாவல் என்று அதன் நான்காம் பதிப்பின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாவலை எழுதுவதற்கான காரணத்தை ஆசிரியர் கூறுகையில் அன்று வெளிவந்து கொண்டிருந்த பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்றும் அவை மொழியையும் பண்பாட்டையும் சிதைப்பவை என்பதனால் அதை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். நாவல்கள் சுய அனுபவத்தில் இருந்து எழுதப்படவேண்டும் என்றும், அவ்வாறு தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதிய நாவல் இது என்றும் சொல்கிறார்.

இதை எழுதிய வரகவி அ. சுப்ரமணிய பாரதி கவிஞர் சுப்ரமணிய பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். அக்காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். பள்ளிகளில் பாடமாக அமைந்த பல நீதிபோதனைக் கதைகளை எழுதியிருக்கிறார்.

கதைச்சுருக்கம்

இந்நாவல் சந்திரசேகரன் என்பரின் வாழ்க்கை வரலாறாகச் செல்கிறது. அழகனாகியச் சந்திரசேகரன் ஜட.கனம் என்னும் வேதபாராயண முறைகளில் தேர்ந்தவனாதலால் ஜடாவல்லவர் என்று பெயர்பெற்றான். சந்திரசேகரனுக்கு மணமாகிறது. மாமியார் மனைவியை கொடுமைப்படுத்துகிறாள். வேலை போகிறது. சந்திரசேகரனின் மகள் மங்களவல்லியை தன் மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சந்திரசேகரனின் விதவையான தங்கை விரும்புகிறாள்ர். இராமாமிர்தம் என்னும் பாடகன் மங்களவல்லியை விரும்புகிறான். இருவரும் மணந்துகொள்கிறார்கள்.

இலக்கிய இடம்

க.நா. சுப்ரமணியத்தின் படித்திருக்கிறீர்களா? என்னும் புகழ்பெற்ற பட்டியல் வழியாக மட்டுமே இந்நாவல் நினைவு கூரப்படுகிறது. அக்காலத்தில் நாகரீக மாற்றங்கள் பற்றிய பதற்றம் எப்படி நூலாசிரியர்களிடம் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்நாவலில் உள்ளன. "சாதாரணமான கதைதான்.ஆனால் ஆங்காங்கே பழமையையும் புதுமையையும் ஒப்பிட்டு எந்தக் கட்சி என்பது ஒவ்வொரு இடத்திலும் விளங்கச் சித்தரித்திருக்கிறார். பல இடங்கள் கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் வித்தையை திறம்பட கையாண்டிருக்கிறார்" என்று க.நா.சுப்ரமணியம் சொல்கிறார். ஆனால் பிற்கால விமர்சகர்கள் எந்த திட்டமும் இல்லாமல் வழக்கமான தேய்வழக்குகள், உபதேசங்கள், சதி மற்றும் தற்செயல் போன்ற எளிமையான உத்திகளுடன் நகரும் சாதாரணமான கதை இது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பழமைவாத நோக்கம் கொண்டது இது.

உசாத்துணை

தமிழ் இணைய நூலகத்தில் மின்னூல்


✅Finalised Page