under review

அதிவீரராம பாண்டியர்

From Tamil Wiki
Revision as of 07:22, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Adhiveera Rama Pandiyar. ‎

அதிவீரராம பாண்டியர் எழுதிய கூர்ம புராணம்
திருக்கருவை பதிற்றந்தாதி

அதிவீரராம பாண்டியர் (ஆட்சிகாலம்: பொ.யு. 1564–1604) சடையவர்மன் அதிவீரராம பாண்டியன். பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர். தமிழ்ப் புலவர். வெற்றிவேற்கை முதலிய நீதிநூல்களையும் சிற்றிலக்கியங்களையும் எழுதியவர். கொக்கோகம் என்னும் பாலியல்நூலும் இவர் பெயரில் வழங்குகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

பொ.யு. 14-ம் நூற்றாண்டில் டெல்லி அரசரின் தளபதி மாலிக்காப்பூரின் படையெடுப்பாலும், விஜய நகர வேந்தரின் படைத்தளபதி கம்பணவுடையாரின் போர்களினாலும் பாண்டியர் குடி சிதறுண்டது. அக்குடியினரில் ஒரு கிளையினர் திருநெல்வேலிப் பகுதியைத் தம் வசப்படுத்தித் தென்காசியில் இருந்துகொண்டு ஆண்டனர். இவர்கள் மதுரையில் ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின் கட்டுப்பாட்டில் இயங்கினர். இவர்களுள் அதிவீரராம பாண்டியரும் ஒருவர். இவர் "கோ ஐடிலவர்மன் திரிபுவன சக்கராத்தி கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப் பெருமாள் குலசேகரதேவர் நந்தனாரான அழகம் பெருமாள் அதிவீர ராமரான ஸ்ரீவல்லபதேவர்" என்று கல்வெட்டொன்றில் அழைக்கப்படுகிறார்.

சிவ பக்தர். தென்காசிப் பெரிய கோயிலுக்கு மேற்பகுதியில் தம் தந்தை பெயரால் ஒரு சிவாலயத்தைக் கட்டினார். இதனருகில் ஒரு திருமால் கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இவருக்குப் பின் பட்டமெய்தியவர் இவருடைய பெரிய தந்தையின் மகனான வரதுங்க பாண்டியர்.

வேறு பெயர்கள்
  • இராமன்
  • வீரமாறன்
  • ஸ்ரீவல்லபன்
  • சீவலன்
  • பிள்ளைப்பாண்டியன்
  • குலசேகரன்

இலக்கிய வாழ்க்கை

சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீஹர்ஷர் என்பவர் பாடிய நைஷதம், நளோதயம் மற்றும் தமிழில் புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா ஆகிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு அதிவீரராம பாண்டியர் நைடதம் என்ற தம்நூலை இயற்றினார். பதினெண் புராணங்களில் ஒன்றான கூர்மபுராணத்தை தமிழில் மொழிபெயர்த்து 3717 திருவிருத்தங்களில் எழுதினார். ஸ்கந்த புராணத்தின் காசிக்காண்டத்தை தமிழில் மொழி பெயர்த்து காசிக்காண்டம் எனும் நூலையும், மாகபுராணம் இலிங்கபுராணம் ஆகியவற்றையும் எழுதினார். நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூல் புகழ்பெற்றது கொக்கோகம் எனப்படும் காமநூலையும் இவர் எழுதினார் எனப்படுகிறது.

சிதம்பரநாத கவி இவரைப்பற்றி சீவலமாறன் கதையை இயற்றியுள்ளார். வெற்றி வேற்கை எனும் நூலை டைலர் எனும் ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள்
  • சேறை ஆசு கவிராயர்
  • திருவண்னாமலைப் புலவர் சிதம்பரநாதர்
  • புதுக்கோட்டை நைடதம் இராமகிருஷ்ணர்
  • ஆசு கவிராச சிங்கம்
  • சிவந்த கவிராசர்
மேற்கோள்கள்
  • "வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன்" என நறுந்தொகை நூலில் அதிவீரராம பாண்டியரைப்பற்றி குறிப்பிடப்படுகிறது.
  • பொ.யு. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாதகவி இயற்றிய சீவலமாறன் கதையில் சீவலமாறன் என்ற பெயர் இவருக்கு இருந்ததாக அறியமுடிகிறது.
  • நைடதம் புலவர்க்கு கெளடதம்
புகழ்பெற்ற வரிகள்
  • பெரியோரெல்லாம் பெரியோரும் அல்லர்.
  • உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்
  • கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்
  • அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
  • சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது
  • அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது
  • புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

நூல்கள் பட்டியல்

  • நைடதம்
  • காசிக் காண்டம்
  • கூர்மபுராணம்
  • கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
  • கருவை வெண்பாவந்தாதி
  • கருவைக்கலித்துறையந்தாதி
  • வெற்றி வேற்கை
  • நறுந்தொகை
  • கொக்கோகம்
  • இலிங்க புராணம்
  • வாயுசங்கிதை
  • கலித்துறையந்தாதி
  • வெண்பாவந்தாதி

உசாத்துணை


✅Finalised Page