ஸ்ரீவேணுகோபாலன்

From Tamil Wiki

ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) (1931-2013) தமிழ் வணிக நூல் எழுத்தாளர். ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் சொந்தப் பெயரில் வரலாற்று நாவல்களையும், புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் சமூக நாவல்களையும் எழுதினார். திருவரங்கன் உலா அவரது வரலாற்று நாவல்களில் மிகவும் பிரபலமானது. புஷ்பா தங்கதுரை என்ற பேரில் அவர் எழுதிய ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா, லீனா மீனா ரீனா (அந்த ஜூன் 16--ஆம் நாள் என்ற பெயரில்) போன்ற நாவல்கள் திரைப்படமாகவும் வந்திருக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

[[[File:pushpa_thangadurai.jpeg|right]]|திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் 1931-இல் பிறந்தவர். பதின்ம வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். முதலில் பெஸ்ட் அண்ட் கம்பெனியிலும் பிறகு சிறிது காலம் தபால்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. நவம்பர் 2013-இல் மறைந்தார்.

புத்தகப் பிரியர். கன்னிமாரா நூலகம் அவருக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்திருக்கிறது. அவரது சொந்த நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

பங்களிப்பு

ஸ்ரீவேணுகோபாலன் வணிக நூல் எழுத்தாளர் மட்டுமே. அவரது பங்களிப்பு பத்திரிகைகளில் எழுதியதும் பிற்காலத்தில் மாத நாவல்களில் எழுதியதும்தான். இரண்டாயிரம் நாவல்கள், ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார் என்று ஒரு தகவல் இருக்கிறது. எழுபதுகளில் மிகப் பிரபலமாக இருந்தார். ஆனால் திருவரங்கன் உலா என்ற நாவல் மட்டுமே அவரது உண்மையான பங்களிப்பு.

புஷ்பா தங்கதுரை

புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் அவர் எழுதிய பல தொடர்கதைகள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இளைஞர்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டின. மிக வெளிப்படையாக காமத்தைப் புகுத்தி எழுதினார். தினமணி கதிர் பத்திரிகையில் சாவி ஆசிரியராக இருந்தபோது அவர் எழுதிய என் பெயர் கமலா என்ற நாவல்தான் தமிழ்ப் பத்திரிகைகளில் விரசமான காம எழுத்து முறையை துவங்கியது என்று அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பே சாண்டில்யன் இந்த எழுத்து முறையை பத்திரிகைகளில் தொடங்கி இருக்கலாம்.

புஷ்பா தங்கதுரை இரண்டு வகையான நாவல்களை எழுதினார். காதல் நாவல்களில் அனேகமாக உருகி உருகி காதலிப்பார்கள். காதல் வாழ்வை முழுமையாக ஆக்கிரமிக்கும் வெறியாகவே இருக்கும். இவற்றில் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா போன்றவை எழுபதுகளில் பிரபலமாக இருந்தன, திரைப்படமாகவும் வந்தன. ஜெயமோகன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை 2000-த்துக்கு முன் வந்த சிறந்த சமூக மிகுபுனைவு நூல்களில் சேர்க்கிறார்.

குற்றப் பின்னணி உள்ள நாவல்களில் கிளுகிளு காட்சிகள் கட்டாயம் இடம் பெறும். இன்ஸ்பெக்டர் சிங் பல நாவல்களில் துப்பறிவார். லீனா மீனா ரீனா என்ற நாவல் அந்த ஜூன் 16-ஆம் நாள் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.

ஸ்ரீவேணுகோபாலன்

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரில் அவர் எழுதிய வைஷ்ணவ பக்தி மரபைத் தொட்டுச் சென்ற வரலாற்று நாவல்கள் - குறிப்பாக திருவரங்கன் உலா - அவருக்கு வேறு வகையான ரசிகர் கூட்டத்தை உண்டாக்கின. ஸ்ரீரங்கம் கோவிலில் அவரை யானை மீது ஏற்றி ஊர்வலமாக வரச் செய்து மரியாதை செய்தார்களாம். ஜெயமோகன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை 2000-த்துக்கு முன் வந்த சிறந்த வரலாற்று மிகுபுனைவு நூல்களில் சேர்க்கிறார்.

திருவரங்கன் உலா

கன்னிமாரா நூலகத்தில் படித்த Sack of Srirangam (எழுதியவர்: கிருஷ்ணசாமி ஐயங்கார்) மற்றும் கோவிலொழுகு ஆகிய நூல்களே அவருக்கு இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்திருக்கின்றன.

பின்னாளில் டில்லி சுல்தானாக ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக் தலைமையில் ஒரு பெரும்படை தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், அந்தப் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் அந்த உற்சவமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டதும் வரலாறு. இந்த நிகழ்ச்சிகளைத்தான் திருவரங்கன் உலா மற்றும் மதுரா விஜயம் என்று இரண்டு பாகங்களாக ஒரு வரலாற்று நாவலாக எழுதி இருக்கிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.

எழுதிய புத்தகங்களின் பட்டியல் (சிறு பகுதி மட்டுமே)

  • புஷ்பா தங்கதுரை
    • என் பெயர் கமலா
    • ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
    • நந்தா என் நிலா
    • லீனா மீனா ரீனா
    • மங்களா சுபமங்களா
    • ராகினி ஒரு ஹிப்பி நீ
    • காபரே இலவசம்
    • துணிந்தபின் சுகமே
    • வெள்ளி மோகினி
    • ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது
  • ஸ்ரீவேணுகோபாலன்
    • திருவரங்கன் உலா, மதுராவிஜயம்
    • மோகவல்லி தூது
    • சுவர்ணமுகி
    • தென்மேற்குப் பருவம்
    • மன்மத பாண்டியன்
    • கள்ளழகர் காதலி
    • மதுரகவி (நாடகம்)

விருதுகள்

  • மதுரகவி நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது

இணைப்புகள்