being created

ஷாநவாஸ்

From Tamil Wiki
Revision as of 03:42, 16 September 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added Stage & Language category)
ஷாநவாஸ்

ஷாநவாஸ் என்ற பெயரில் எழுதும் முகம்மது காசிம் ஷாநவாஸ் (1959) சிறுகதை, கட்டுரை, பத்தி, கவிதை என பல வகைமைகளிலும் எழுதும் சிங்கப்பூர் எழுத்தாளர். சிங்கப்பூரின் தனித்தன்மையான பல இன உணவு கலாசாரம், வாழ்க்கை முறை, சூழல்கள் சார்ந்த பத்திகளில் சிறப்புக் கவனம் செலுத்துபவர். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

பிறப்பு கல்வி

ஷாநவாஸ் தமிழ்நாட்டில் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் 1959 பிறந்தார். தந்தையின் பெயர் முகம்மது காசிம், தாயார் பெயர் செய்யது பாத்திமா. பள்ளிப்படிப்பை அபிராமம் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியிலும் இளங்கலை (வேதியியல்) பட்டக் கல்வியை ஜமால் முகம்மது கல்லூரியிலும் அரசியல் மற்றும் பொது நிர்வாக முதுகலை பட்டப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார்.

குடும்ப வாழ்க்கை

மனைவி வஹிதா பானு. இரண்டு மகன்கள், ஒரு மகள். இந்திய அரசுத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். சிங்கப்பூரரான தன் தந்தையின் உணவகத் தொழிலைக் கவனிக்க  1990களில் சிங்கப்பூரில் குடியேறினார்.

இலக்கிய வாழ்க்கை/ பங்களிப்பு

தொழிற்சங்க ஈடுபாடு மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தொழிற்சங்கத் தலைவர் ஞானையா, கவிஞர் மீரா இவர்களுடைய நட்பு. கையெழுத்து பத்திரிக்கையில் தொடர்ந்து வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஈடுபட்டவர். உயிரோசை, சிங்கப்பூர் கிளிஷே, இதழ்களில் பத்திகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு வார இதழ் ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய “அயல்பசி” பத்தி எழுத்துகளை 2012 ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் தேர்வு செய்தார்.

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் .

இலக்கிய மதிப்பீடு

"ஷாநவாஸ்  புனைகதைகளில் தமிழக / இந்திய நிலப்பரப்பு நினைக்கப்படும் வெளியாக அடியாழத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரும்பிப் புலம்பெயர்ந்து வாழநேர்ந்த புதியவெளிக்குள் தன்னை இருத்திக்கொள்வதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களும் மகிழ்ச்சியும் இணையாகவே நிரல்படுத்தப்பட்டுள்ளன," முனைவர் அ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

"ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதிய கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்," என  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

"எங்க அம்மா வெக்கற மாரி வத்தக்கொழம்பு இந்த லோகத்திலே யாராலும் வெக்க முடியாது” என்பது போன்ற Qualifying Statements விடுகிறவர்களுக்கான புத்தகம் அல்ல அயல்பசி. திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல் ஷாநவாஸின் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்முறை நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி," என்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மதிப்பீடு.

2014ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை, தமிழ் புனைவுப் பிரிவில் ஷாநவாசின் 'மூன்றாவது கை' சிறுகதைத் தொகுப்பு வென்றது. அமைச்சர் லாரன்ஸ் வோங்கிடம் இருந்து விருது பெறும் எழுத்தாளர்.

விருதுகள்

2014 - சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - வெற்றியாளர் (புனைவு) 2015- தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முஸ்தபா அறக்கட்டளை கரிகாற்சோழன் விருது.

2016- சிங்கப்பூர் இலக்கியப் பரிசு - தகுதிப் பரிசு (புதினம் அல்லாத படைப்பு)

2016- மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு

நூல்கள்

●    ஒரு துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும் (கட்டுரை)

2015ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முஸ்தபாத அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருது.

●    ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் (கட்டுரை) ●    2013 மூன்றாவது கை (சிறுகதை)

●    2012 அயல்பசி (கட்டுரை)

●    2019 ஒலி மூங்கில் (சிறுகதை)

●    நனவு தேசம் (கட்டுரை)

●    2017 இடமும் இருப்பும் (சிறுகதை, தொகுப்பாசிரியர்) ●    2019 சுவை பொருட்டன்று (கவிதை)

சுவை பொருட்டன்று நூல்வெளியீடு. நாஞ்சில் நாடான்,

●    2018 காலச்சிறகு (‘தி சிராங்கூன் டைம்ஸ்’ படைப்புகள், தொகுப்பாசிரியர்)

உசாத்துணை

ரோஜாக் இணையப்பக்கம் www.shaanavas.wordpress.com

இணைப்புகள்

1. ஷாநவாஸ் - தி சிராங்கூன் டைம்ஸ்

2. கைநழுவிய கலைக்கணங்கள்-ஜெயமோகன்

3. உண்டி முதற்றே உலகு! நாஞ்சில் நாடான்

4. ஷாநவாஸ்: ஒரு தசாப்த கால இலக்கியம்- சிவானந்தம் நீலகண்டன்

5. ஷாநவாஸ் : சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள்

6. பரோட்டா மகாத்மியம்- எஸ்.ராமகிருஷ்ணன்

7. Best of 2012 எஸ்.ராமகிருஷ்ணன்

8. நனவுதேசம்

9. ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.