வ.வே. சுப்ரமணிய ஐயர்
வ.வே.சு. அய்யர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய அய்யர் (ஏப்ரல் 2, 1881 — ஜூன் 4, 1925) தமிழறிஞர், தமிழாய்வாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், முதல் சிறுகதை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். விடுதலைப் போராட்ட வீரர். திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, கம்பராமாயணம் பதப்பிரிப்பு பதிப்பு, சங்க இலக்கியங்கள் ஆய்வு, புத்திலக்கிய வடிவங்கள், மொழி நடைகள் ஆகியவை தமிழிலக்கியத்திற்கு இவரின் முக்கிய பங்களிப்புகளாகும்.
பிறப்பு, கல்வி
வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்ற வ.வே.சு. அய்யர் கரூர் சின்னாளப்பட்டி கிராமத்தில் ஏப்ரல் 2, 1881-ல் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்கடேச அய்யருக்கும், சின்னாளப்பட்டி காமாட்சி அம்மையாருக்கும் பிறந்தார். வெங்கடேச ஐயர் எம்.ஏ. படித்து திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.
சுப்ரமணிய ஐயர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1895-ல் மெட்ரிகுலேசன் முடித்தார். 1899-ல் பொருளாதாரப் பாடத்தில் பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று வென்றார். சென்னையில் வழக்கறிஞர் தேர்வில் முதல் பிரிவில் தேறினார். 1907ல் பாரிஸ்டர் கல்விக்காக லண்டன் சென்றார். 1910ல் படிப்பை முடித்தாலும் பட்டம் பெறவில்லை.
தனிவாழ்க்கை
சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். நான்கு ஆண்டுகள் திருச்சியில் பிளீடராக இருந்துவிட்டு 1906-ல் ரங்கூனில் ஓராண்டு வக்கீலாகப் பணிபுரிந்தார். ரங்கூனில் இருந்த உறவினரான பசுபதி அய்யரின் தூண்டுதலால் 1907ல் லண்டன் சென்றார்.
1897-ல் தன் பன்னிரண்டாம் வயதில் முறைப்பெண் பாக்கியலட்சுமியை வ.வே.சு. ஐயர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பட்டம்மா, சுபத்திரா என இரண்டு மகள்களும் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் பிறந்தனர்.
அரசியல் வாழ்க்கை
லண்டனில் படிக்கும்போது வ.வே.சு.ஐயர் இந்தியாஹவுஸ் விடுதியில் தங்கினார். அங்கே இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களுடன் நெருக்கமான தொடர்பு உருவாகியது. அங்கே இருந்தபோது சி.சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா இதழுக்கு அரசியல் கட்டுரைகள் எழுதியனுப்பினார். இந்தியா ஹவுஸுக்கு வந்த காந்தியைச் சந்தித்தார். அங்கே தங்கியிருந்த முப்பதுபேர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றனர். வ.வே.சு.ஐயருக்கு பயிற்சி அளித்த மதன்லால் திங்ரா 1909ல் கர்ஸன் வாலியை சுட்டுக்கொன்றார். பாரிஸ்டர் பட்டம் முடித்ததும் ராஜவிசுவாச பிரமாணம் எடுக்க மறுத்தார். அவரை கைது செய்ய ஆங்கில அரசு ஆணை பிறப்பித்தபோது சவார்க்கரின் உதவியால் பிரான்ஸுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து துருக்கி , கொழும்பு வழியாக 1910ல் இந்தியா வந்தார்.
இந்தியாவில் அவருக்கு கைது வாரண்ட் இருந்தமையால் பாண்டிச்சேரிக்குச் சென்று அங்கே மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், சி.சுப்ரமணிய பாரதியார் ஆகியோருடன் தங்கினார். அங்கிருந்துகொண்டு இந்தியா இதழுக்குக் கடிதங்கள் எழுதினார்.ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளித்தார். பாண்டிச்சேரி வந்த காந்தியை இரண்டாம் முறையாகச் சந்தித்தார்.
முதல் உலகப்போர் முடிந்ததும் 1922ல் வ.வே.சு.ஐயருக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைய அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் இந்தியா வந்ததுமே தேசபக்த இதழில் அவர் எழுதிய கட்டுரை ராஜத்துரோகம் என குற்றம் சாட்டி அவரை கைதுசெய்த ஆங்கிலேய அரசு பெல்லாரி சிறைக்கு அனுப்பியது. ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தபின் 1923ல் விடுதலையாகி சேரன்மகாதேவி என்னும் ஊரில் தமிழ்க்குருகுலம், பாரத்வாஜ ஆசிரமம் ஆகிய அமைப்புகளை ஆரம்பித்தார். 1925ல் மறைவது வரை இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
ஆங்கிலத்தில் இரண்டும், தமிழில் ஏழும் அய்யர் எழுதிய நூல்கள். தமிழில் எழுதியவை மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் (1910), கம்பராமாயணச் சுருக்கம். பாலகாண்டம் (1917), சந்திரகுப்தச் சக்கரவர்த்தி (1919), தன்னம்பிக்கை (1919), குரு கோவிந்த்சிங் (1924) ஆகியன. ஆங்கிலத்தில் Kamba Ramayana A Study (1950) திருக்குறள் மொழிபெயர்ப்பு (1915) ஆகியன. இவை தவிர நெப்போலியன், கரிபால்டி சரித்திரம் என இவர் எழுதிய சில நூல்கள் கிடைக்கவில்லை.
மேலை இலக்கியப் படைப்பாளிகளைத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு எழுதிய ஆரம்பக்கால அறிஞர்களில் இவரும் ஒருவர். அவர் நடத்திய பாலபாரதி பத்திரிகையில் சங்கப்பாடல்களின் அழகியல்தன்மையை விளக்கி எழுதினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார். பாரதியாரின் கவிதைகளுக்கு திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்தில் பதிவுசெய்தார்.
மொழி நடை
தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ்ப் பண்டிதர்களும் தமிழறிந்த ஆங்கில வல்லுநர்களும் தடையாக உள்ளனர் என்பது வ.வே.சு. ஐயரின் கருத்து. 1916-ல் இவர் புதுச்சேரியில் வாழ்ந்தபோது புதுவையிலிருந்து வெளிவந்த கலைமகள் இலக்கிய இதழில் பிரயோக இலக்கணம் (பயன்பாட்டு இலக்கணம் - Applied Grammar) என்னும் தொடர் கட்டுரையை எழுதினார். இதில் நிகண்டுகளிலும் அகராதிகளிலும் வரும் சொற்களின் பயன்பாட்டை அறிந்தே பயன்படுத்த வேண்டும் என்றும் சமஸ்கிருதச் சொற்கள் வரும்போது ஏற்படும் மாற்றத்தையும் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டினார்.
தமிழ்ப் பண்டிதர்கள் சொற்களைப் புணர்ச்சி விதிப்படி எழுதுவதில் வ.வே.சு ஐயருக்குக் கருத்து முரண்பாடும், மொழிநடைப் பயிற்சி குறித்து தனி அபிப்பிராயமும் இருந்தது. புதிய கருத்துக்கேற்ப வாக்கிய அமைப்பை மாற்றலாம்: நடை என்பது தனித்துவம் உடையது என்ற கருத்தை 1916-ல் வெளியிட்டார். அய்யர் ஆங்கிலத்தில் உள்ள சொற்களைத் தமிழிற்குத் தரும்போது புதிய சொல்லாட்சியுடன் தர வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருந்தார். உதாரணமாக தமிழில் மறுமலர்ச்சி (Renaissance) என்ற சொல்லை உருவாக்கியவர் வ.வே.சு ஐயர்.
மொழிபெயர்ப்பு
அய்யர் ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்ச் மொழிகள் அறிந்தவர். திருச்சிக் கல்லூரியில் படிக்கும்போது லத்தின் மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தவர்.
1915-ல் சங்க இலக்கியங்களில் தேர்ந்தெடுத்த பாடல்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் குறுந்தொகை, கலித்தொகை போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை மொழிபெயர்த்தார். திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Kural or The Maxims of Thiruvalluvar என்னும் தலைப்பில் 1916-ல் வெளிவந்தது. அய்யரின் குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு, கலிபோர்னியாவிலும் நியுயார்க்கிலும் லண்டனில் இரண்டு புத்தகக் கம்பெனிகளாலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனத அகஸ்திஸின் நூலை மொழிபெயர்த்தார் அய்யர். இது ஞானபானு பத்திரிகையில் வெளிவந்தது. எமர்சனிடம் உபநிஷத் கதை போன்றவற்றின் தன்மை இருந்ததால் அவரின் கட்டுரைகள் சிலவற்றையும் அய்யர் மொழிபெயர்த்திருக்கிறார்.
கம்பராமாயணம் ஆய்வு
கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி நூல்களை வெளியிட்டார். கோவிந்த குகன் என்ற வங்காளி வால்மீகியின் ஸ்லோகங்களைத் தெரிவு செய்து, 3000 பாடல்களை லகு ராமாயண என்னும் பெயரில் வெளியிட்டார்.
வ.வே.சு. அய்யருக்குக் கம்பனிடமிருந்த ஈடுபாடு காரணமாக பாலகாண்டத்தின் தேர்ந்தெடுத்த 545 பாடல்களை பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார். இதில் நீண்ட முகவுரையும், பாடல்கள் பதம் பிரிக்கப்பட்டுக் குறிப்புரையும், அருஞ்சொற் பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது. 1917-ல் முதல் பதிப்பு புதுவை கம்பநிலைய வெளியீடாக வந்தது. பாடல்களைப் பதம் பிரித்ததற்காக பேராசியர்களாலும் பண்டிதர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.
பெல்லாரி மத்திய சிறையில் அய்யர் இருந்தபோது கம்பராமாயணம் பற்றிய நூல் ஒன்று எழுதினார். Kamba Ramayana - A Study என்ற இந்த நூல் 1950-ல் முதல் முதலில் தில்லித் தமிழ் சங்க வெளியீடாக வந்தது. பின்னர் பம்பாய் பாரதிய வித்யாபவன் வெளியிட்டது. இந்த ஒப்பாய்வு நூலில் Paradise Lost; Divine Comedy, Aeneid, Iliad போன்ற காவியங்களுடன் கம்பராமாயணம் ஒப்பிடப்படுகிறது. இந்த வகை ஆராயச்சியில் அய்யர்தான் தமிழில் முன்னோடி. இந்நூலில் இந்நூலில் இராமன், இலக்குவன், இந்திரஜித், கும்பகர்ணன், வாலி, சுக்கிரீவன், அனுமன், இராவணன், பரதன் எனப் பத்து பாத்திரங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இந்த ஆங்கில நூல் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியானது. இது எழுதப்பட்ட காலத்தில் (1916) தமிழ் இலக்கிய விமர்சனமும் ஒப்பீட்டு ஆய்வும் வளர்ச்சியடையவில்லை.
கம்பரின் காலம்
வ.வே.சு அய்யரின் 90-ஆம் ஆண்டு நினைவாக "கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை” என்ற நூல் ஒன்றை வ.வே.சு. அய்யரின் மகன் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார் (1971). இந்த நூலில் கம்பனின் காலம் ஆராயப்படுகிறது. கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர்களல்லர் என்பது அய்யர் கருத்து. அதோடு இவர் கம்பனின் காலத்தை 9-ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்கிறார். பொதுவாகத் தமிழ் அறிஞர்கள் அதிக முரண்பாடில்லாமல் சொல்லும் கம்பனின் காலத்தை இவர் மறுத்தார். பிற்காலத்தில் இவரது கருத்து சரியானதல்ல என்று நிரூபிக்கப்பட்டது.
மொழி நிலைப்பாடுகள்
முத்தமிழ் என்ற வழக்கு பொதுவானதே தவிர சாகுந்தலம், மிருச்சகடிகா போன்ற நாடகங்கள் தமிழில் இல்லை என்பதை முதலில் கூறியவர் வ.வே.சு. அய்யர். பிற இந்திய மொழிகளில் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு வந்துவிட்டது என்பதைத் தமிழ்ப் பண்டிதர்கள் உணரவில்லை என்றும் தமிழறிந்த ஆங்கில அறிஞர்கள் தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்பது அய்யரின் நிலைப்பாடாக இருந்தது.
சமகால இலக்கியத்தை இவர் புத்திலக்கியம் என்ற சொல்லால் குறித்தார். மூன்றாம்தர இலக்கியத்தின் தன்மைகளில் ஒன்று அறக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே போவது என்ற கருத்தக் கொண்டிருந்தார். புத்திலக்கியத்தில் உபதேசம் (பிரச்சாரம்) மீறி ஒலிப்பதை பரிகசித்தார்.
அரசியல்
வ.வே.சு. அய்யரின் தேசிய அரசியல் பிரவேசம் 1907-ல் ஆரம்பித்தது. வ.வே.சு. அய்யர் இந்தியா ஹவுஸ் விடுதியில் தங்கி இருந்தபோது வீரசவர்க்காரிடம் நெருங்கிப் பழகியதால் அபிநவ பாரத அமைப்பு பரிட்சயமானது. இதனால் பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புக்கு ஆளானார். இது லண்டனில் இவர் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.
அய்யர், பாரிஸ்டர் படிப்பின்போது ராஜ விசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் பிரிட்டிஷ் அரசின் கவனத்துக்கு ஆளானார். ஏப்ரல் 19, 1910-ல் லண்டனிலிருந்து புறப்பட்டு பாரிஸ், ரோம், இஸ்தான்புல் சென்று கடலூர் வழிப் புதுச்சேரிக்கு மாறுவேடத்தில் வந்தார். 1910-1920 வரை புதுச்சேரியில் இவர் பத்து ஆண்டுகள் இருந்துபோது அரவிந்தருடனும் பாரதியுடனும் நட்பு கொண்டிருந்தார். 1920-ல் தேசபக்தன் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெல்லாரி சிறைக்குச் சென்றார்.
ஆசிரமம்
1923-ல் பெல்லாரி சிறையிலிருந்து இவர் வந்த பின்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தமிழ் குருகுல வித்தியாலயம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். 1924-ல் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டது. சேரன்மாதேவி ஆசிரமத்தில் மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் கற்பிப்பதையும், ஒழுக்கமும் கைத்தொழிலும் கற்பிப்பதையும் பள்ளியின் முக்கியக் கொள்கை என்றார் வ.வே.சு. அய்யர். இந்தக் குருகுலத்திலிருக்கும் போது பாலபாரதி இதழைத் துவங்கி, ஆசிரியராக இறுதிவரை செயல்பட்டார் வா.வே.சு.
மறைவு
ஜுன் 4, 1925-ல் குருகுல மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது அம்பாசமுத்திரம் அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வ.வே.சு. ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.
நினைவகங்கள்
- தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் திருச்சியில் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
- சேரன்மகாதேவியில் வ.வே.சு. ஐயர் மாணவர் விடுதி உள்ளது.
நூல்கள் பட்டியல்
சிறுகதை
- குளத்தங்கரை அரசமரம் - முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை
- மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் - 1910 - முதல் சிறுகதைத் தொகுதி
தமிழ்
- கம்பராமாயணச் சுருக்கம். பாலகாண்டம் - 1917
- சந்திரகுப்தச் சக்கரவர்த்தி - 1919
- தன்னம்பிக்கை - 1919
- குரு கோவிந்த்சிங் - 1924
ஆங்கிலம்
- Kamba Ramayana A Study - 1950
- திருக்குறள் மொழிபெயர்ப்பு - 1915
உசாத்துணைகள்
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- https://www.jeyamohan.in/21150/
- https://www.vikatan.com/oddities/miscellaneous/108797-biography-of-varahaneri-venkatesa-subramaniam-aiyar
- https://www.dinamani.com/editorial-articles/2009/sep/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-81805.html
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.