வே. அகிலேசபிள்ளை
வே. அகிலேசபிள்ளை (மார்ச் 7, 1853 - ஜனவரி 1, 1910) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். திரிகோணமலை விஸ்வநாத சுவாமி -விசாலாட்சி அம்மன் தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் எழுதியவர். இவருடைய திரிகோணாச்சல வைபவம் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது
பிறப்பு, கல்வி
மார்ச் 7, 1853-ல் இலங்கை திருகோணமலை வேலுப்பிள்ளையின் மகனாக பிறந்தார். மைந்தர்கள் இராசக்கோன், அழகக்கோன். குமாரவேலுப்பிள்ளையிடமும் சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளையிடமும் தமிழ் இலக்கியலக்கணங்களைக் கற்றார். ஆங்கிலக் கல்வியும் தனியே பயின்றார்.
பணி
1872 முதல் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கி தலைமை ஆசிரியர் ஆனார். திருகோணமலையில் விசுவநாதசுவாமி கோயிலுக்கும், மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் கோயிலுக்கும் நிர்வாக அறங்காவலராகச் செயல்பட்டார்.
இலக்கியவாழ்க்கை
திரிகோணமலைப் பகுதி தொடர்பான பல மதிப்புமிக்க படைப்புகளை அகிலேசபிள்ளை மெய்ப்பு நோக்கி பதிப்பித்துள்ளார். திருக்கரசைப் புராணம் (1890), வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906), நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து (1908) ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
வைபவம் எனும் சிற்றிலக்கிய வடிவில் கோணீஸ்வரத்தைப் பற்றி செய்யுள் வடிவில் இவர் எழுதிய ’திருக்கோணாசல வைபவம்’ என்ற நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. சேகராஜா சேகரம் எழுதிய தக்ஷண கைலாச புராணம் மற்றும் சமகால படைப்புகளைத் தழுவி எழுதியதாக இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1950-ல் அவரின் மகன் அல்லாகோன் இந்த புத்தகத்தைப் பதிப்பித்தார். கந்தசாமி கலிவெண்பா, திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.
மறைவு
அகிலேசபிள்ளை ஐம்பத்தி ஆறாவது வயதில், ஜனவரி 1, 1910-ல் காலமானார்.
நூல்கள் பட்டியல்
ஊசல்
- சித்தி விநாயகர் ஊஞ்சல்
- சிவகாமியம்மன் ஊஞ்சல்
- பத்திரகாளி ஊஞ்சல்
கலிவெண்பா
- கந்தசாமி கலிவெண்பா
கும்மி
- திரிகோணமலை சிவகாமியம்மன்
- கும்மி
பத்து
- சித்திர வேலாயுதசாமி தரிசனம்
- மயிற்பத்து
- வேற்பத்து
பதம்
- வில்லூன்றிக் கந்தசாமி பதம்
- பதிகம்
- கந்தசாமி பதிகம்
மாலை
- நெஞ்சறிமாலை
விருத்தம்
- கந்தசாமி விருத்தம்
- திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம் (1923)
- விசுவநாதர் விருத்தம்
- வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம்
வைபவம்
- திருக்கோணாசல வைபவம் (1950)
பதிப்பித்த நூல்கள்
- திருக்கரசைப் புராணம் (1890)
- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906)
- நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து (1908)
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- https://noolaham.net/project/684/68386/68386.pdf திருகோணாசல வைபவம் மூலம்
- https://noolaham.net/project/76/7598/7598.pdf
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#1