standardised

வேலப்பாடி குகைப்பள்ளிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 47: Line 47:
* [https://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12 சமணத் திருப்பதிகள், tamilvu.org]
* [https://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12 சமணத் திருப்பதிகள், tamilvu.org]


{{ready for review}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:44, 19 April 2022

வேலப்பாடி

வேலப்பாடி குகைப்பள்ளிகள் (பொ.யு. 7-8 ஆம் நூற்றாண்டு) (பகவதி மலை) வேலூர் அருகே உள்ள சமணக் குகைகள். இங்குள்ள தீர்த்தங்காரர்களின் பாதப்பதிவு சிற்பம் தமிழகத்திலேயே பெரியது என கருதப்படுகிறது

இடம்

வட ஆற்காடு மாவட்டத்தில் வேலூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தென்மேற்கிலுள்ள ஊர் வேலப்பாடியாகும். இவ்வூரில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியின் பின்புறம் காணப்படும் மலையினை வேலப்பாடி மலை எனவும், பகவதிமலை எனவும் அழைப்பர். இது வேலூரிலிருந்து தொடர்ச்சியாக உள்ள மலையின் ஒரு பகுதி.இந்த மலையின் நடுப்பகுதியில் ஆங்காங்கே இயற்கையாக அமைந்த குகைகள் பல உள்ளன. இவற்றுள் குறிப்பாக மூன்றினுள் சமணத் துறவியர் உறைந்தமையை அறிவிக்கும் வண்ணம் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

குகைகள்

வேலப்பாடி

முதலாவது குகையில் சிறிது பள்ளமாக அமைந்த படுக்கை ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இந்த படுக்கையில் தலைப்பகுதியில் சிறிய அளவிலான பாதங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன அண்மைக் காலத்தில் இந்த குகையின் முகப்பினில் கற்களை அடுக்கி சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

இரண்டாவது குகையில் நீள் சதுர வடிவமுள்ள படுக்கை ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த படுக்கையை ஒட்டிப் பாறையிலேயே சுனை ஒன்றும் காணப்படுகிறது.

மூன்றாவது குகை சற்று அப்பால் உயரமான பகுதியில் தனியாக நிற்கும் பாறையை ஒட்டி உள்ளது. இதன் உட்பகுதியில் ஏறத்தாழ ஏழு அடி நீளமுள்ள மூன்று கற்படுக்கைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன.

பகவதி மலையிலுள்ள குகைகளில் காணப்படும் கற்படுக்கைகள் கரடு முரடாக இன்றி மெருகூட்டப் பெற்றவையாக உள்ளன. இந்த படுக்கைகளில் தலையணை போன்ற அமைப்பு எதுவும் வடிக்கப்பட வில்லை

காலம்

குகையின் உட்புறத்திலோ அல்லது படுக்கைகளிலோ இங்கு எந்தெந்த துறவியர் வதிந்தனர் என்பது பற்றியோ அல்லது இப்படுக்கைகளை உருவாக்க எவர் ஏற்பாடு செய்தனர் என்பது பற்றியோ செய்திகள் எவையும் பொறிக்கப்படவில்லை. எனவே இவற்றின் காலத்தினைச் சரி வர வரைய செய்ய இயலவில்லை. ஆனால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் இவற்றைப் போன்று காணப்படும் படுக்கைகள் பொ.யு. 7-8 ம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை எனக் கூறப்படுவதை ஒட்டி இவையும் அந்த நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கூறலாம் என ஆய்வாளர் ஏ.ஏகாம்பரநாதன் கருதுகிறார்.

பாதங்கள்

பாதங்கள்

முதலாவது குகைக்கு அடுத்துள்ள பாறையில் ஏறத்தாழ ஐந்தரை அடி நீளமுள்ள இரண்டு திருவடிகள் பெரிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் தாமரை மலர் வடிவமும், இடைப்பட்ட பகுதியில் நாற்கோண வடிவ அமைப்பும் மெல்லியதாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. இப் பாதங்களைச் சுற்றிலும் செங்கற்களைக் கொண்டு பிற்காலத்தில் சிறிய பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை தெரிய வந்துள்ள பாதங்களுள் இவையே அளவில் பெரியவையாகும்.

பாதங்களுக்கு அண்மையிலுள்ள சமமான பரப்பில் பாறையின் மீது வரிசையாகத் தூண்களை நடுவதற்கு ஏற்றவாறு துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை விழாக் காலத்தில் அல்லது சிறப்பு வழி பாட்டின் போது பந்தல் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகும் இந்த பாதங்கள் பொ.யு. 9-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். .

கல்வெட்டுக்கள்

பாதங்களுக்கு அண்மையிலுள்ள பாறைகளில் இரண்டு தமிழக கல்வெட்டுக்களும், சில தெலுங்கு கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன இவற்றுள் முதலாவது கல்வெட்டு இராட்டிர கூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ணனது 26-ஆம் ஆட்சியாண்டில் (பொ.யு. 865) பொறிக்கப்பட்டதாகும். தக்காணத்தை ஆட்சி புரிந்த இராட்டிர கூட அரச பரம்பரையினருள் கன்னர தேவன் என அழைக்கப் பெறும் மூன்றாம் கிருஷ்ணன் தமிழகத்தில் வடபகுதியைத் தனது ஆட்சிக்குட்படுத்திய பொருமையுடைவனாவான்.

இந்த சாசனத்தில் சூடாடும் பாறை மலையிலுள்ள பன்னபேஸ்வரம் என்னும் கோயிலை பன்னப்பை என்பவர் தோற்றுவித்தார் எனவும், அதற்கு நுளம்பன் திரிபுவன தீரன் என்பவர் பங்கள நாட்டுப்படவூர் கோட்டத்தைச் சார்ந்த வேளர்பாடி எனும் ஊரைத் தானமாக அளித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.[1] இதிலிருந்து வேலப்பாடியின் பண்டைய பெயர் வேளர்பாடி என்பதும், இவ்வூர் பங்கள நாட்டுப் பிரிவிலுள்ள படவூர் கோட்டத்தைச் சார்ந்தது என்பதும், இங்குள்ள மலை சூடாடும் பாறைமலை எனப்பெயர் பெற்றிருந்தது என்பதும் தெளிவாகிறது. மேலும் பன்னப்பை என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் பன்னபேஸ்வரம் என அழைக்கப்பட்டமையைவும் அறியக் கிடக்கிறோம். கல்வெட்டு கூறும் பன்னபேஸ்வரம் கோயில் பன்னப்பை என்பவரின் பெயரினை ஒட்டி இருப்பினும், இது பார்சுவநாதருக்கு எழுப்பப்பட்ட கோயிலாகும். இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவதேவரைப் பன்னகேஸ்வரர் எனவும், பன்னாக நீழற் பெருமான் எனவும் சமணத் தோத்திரங்கள் குறிப்பிடுகின்றன.

பன்னப்பையால் கட்டப்பட்ட பண்டைய கோயில் எதுவும் தற்போது இந்த மலையில் இல்லை. மிக்கவாறும் பாறையில் வடிக்கப்பட்ட பாதங்களை உள்ளடக்கியவாறு கோயில் கட்டி, அதனையே பன்னபேஸ்வரம் என அழைத்திருக்க வேண்டும். இந்த பாதங்கள் பார்சுவநாதரின் திருவடிகளைக் குறிப்பவையாகக் கருதப்பட்டிருக்க வேண்டுமாதலால், அவற்றை உள்ளடக்கிக் கட்டப்பட்ட கோயில் பன்னபேஸ்வரம் எனப் பெயர் பெற்றிலங்கியிருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த கோயில் அழிவுற்றமையால், பிற்காலத்தில் இவற்றைச் சுற்றிலும் குறுகிய சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

பகவதி மலையில் சமமான பகுதிகளில் செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோயில்கள் நான்கு உள்ளன. இவற்றுள் இரண்டு கோயில்கள், சமண பாதங்களுக்கு அடுத்தாற் போன்று கட்டப்பட்டிருப்பினும் இவையும் பன்னபேஸ்வரமும் ஒன்றல்ல. இச்சிறிய கோயில்கள் மிகவும் பிந்திய காலத்தில் (18-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்) கட்டப்பட்டவையாகும். மேலும் இவை சமண சமயக் கோயில்களாகத் தெரியவில்லை.

பாதங்களுக்கும், தற்போதுள்ள கட்டடக் கோயில்களுக்கு இடை வெளிப் பகுதியில் மற்றொரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. இதில் “யக்கர் குர....” என்ற சொல்லைத்தவிர எஞ்சியவை முற்றிலுமாகச் சிதைந்துள்ளது.[2] இது தீர்த்தங்கரரின் பணியாளராகிய யக்ஷரையோ அல்லது யக்கர் குரவடிகள் என்பது போன்ற துறவியரின் பெயரினையோ குறிப்பதாக இருக்கலாம். சிதைந்த இச்சாசனம் பொ.யு. 13-ஆம் நூற்றாண்டு வடிவம் பெற்றிருப்பதால், இங்கு சமண சமயம் பிற்காலத்திலும் நிலைத்திருந்திருக்கிறதென்பது தெளிவாகும்.

இங்குள்ள தெலுங்கு கல்வெட்டுக்கள் மிகவும் சிதைந்த நிலையிலிருக்கின்றன. இவற்றுள் ஒன்றில் சக வருடம் 1535 (பொ.யு.1613) -ஆம் ஆண்டும், பிறவற்றில் நல்ல குருவையா என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த கல்வெட்டுகளிலிருந்து வேறு எந்த செய்தியினையும் அறியும் வாய்ப்பில்லை. மிகவும் அழிந்த நிலையிலிருக்கும் இச் சாசனங்கள் சமண சமயம் தொடர்புடையவையாக இருக்குமாயின் பொ.யு. 17-ஆம் நூற்றாண்டிலும் இங்கு சமணம் தழைத்திருந்திருக்கிறதெனலாம்.

இதற்குப் பின்னர் இங்கு இந்து சமயம் ஆதிக்கம் பெறத் தொடங்கியிருக்கிறது. இதனை அறிவுறுத்தும் வகையில் பாதங்களுக்குச் சற்று தொலைவிலுள்ள பெரிய குகை ஒன்றிலுள்ள பாறையில் அனுமன், விநாயகர், சக்தி சக்கரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. சக்தி வழிபாடு சிறப்புற்றதனால் இம்மலையும் பகவதி மலை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.