வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1950-ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளி ஜோகூர் மாநிலத்தின் சிகாமட்டில் உள்ளது.
வரலாறு
1950 -ல் வூல்ஸ் தோட்ட மேலாளர் நாராயணன் குட்டியின் முயற்சியில் இத்தோட்டத்தில் ஒரு பிரத்யேக வகுப்பு தொடங்கப்பட்டது. ஆசிரியர் எம்.கிருஷ்ணனுக்குப் போதனைக் கட்டணமாக ரி.ம முப்பது வழங்கப்பட்டது. அப்போது முப்பது மாணவர்கள் இருந்தனர். ரப்பர் பால் நிறுக்கும் இடத்தில்தான் வகுப்பு நடைபெற்றது. ரப்பர் பால் நிறுத்து முடித்த பின்னரே மாணவர் பயில இயலும். இதேபோன்று புக்கிட் டத்தோ தோட்டத்திலும் வகுப்பு தொடங்கப்பட்டது. 1950-ம் ஆண்டிறுதியில் வூல்ஸ் தோட்ட மேலாளரின் தொடர் முயற்சியால் ஒரு சிறு கட்டிடம் கட்டப்பட்டது. எம்.கிருஷ்ணன் முதல் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இரு ஆசிரியர்கள், 37 மாணவர்களுடன் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியது.
பள்ளி மேம்பாடு
1973-ல் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி இப்போதுள்ள இடத்திற்கு மாறியது. சுப்பையா தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றபோது கூடுதல் வகுப்பறைகள், சிற்றுண்டிச்சாலை, நூல்நிலையம், கூடைப்பந்து திடல் ஆகியவை கட்டப்பட்டன. 1987-ல் மாணவர் எண்ணிக்கை 220 ஆனது. வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வாழ்வியல் கல்வி அறை, அறிவியல் அறை, கூடுதலாக இரு வகுப்பறைகளும் கட்டப்பட்டன. தொடர்ந்து பல தலைமையாசிரியர்களின் காலத்தில் சபைக்கூடல் தளம், கணினி அறை,இலவசப் பாடநூல் அறை, பாதுகாவலர் குடில் போன்றவை அமைக்கப்பட்டன. 2011-ல் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பாலர் பள்ளி அமைக்க கல்வியமைச்சின் அனுமதி கிடைத்தது. தலைமையாசிரியர் மு.ஜெயந்தி லாபீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுவா தீ யோங்கின் உதவியுடன் தோட்ட நிர்வாகத்திடமிருந்து பாலர் பள்ளிக்கான நிலத்தைப் பெற்றார். 2013-ல் பாலர் பள்ளி திறப்புவிழா கண்டது.
தலைமை ஆசிரியர் | ஆண்டு |
---|---|
எம்.கிருஸ்ணன் | 1950 - 1972 |
சுப்பையா | 1973 - 1983 |
எஸ்.ராமதாஸ் | 1984 - 1987 |
பி.சுப்ரமணியம் | 1987 -1994 |
டி. சிவலிங்கம் | 1994 - 1996 |
ஆர்.மாணிக்கம் | 1997 -1999 |
ஜி.மனோகரன் | 1999 - 2002 |
ஆர்.முருகையா | 2002 |
எஸ்.சந்திரா | 2002 -2003 |
எம்.திருவேங்கடம் | 2003 - 2004 |
மு.பரமாவதர் | 2004 - 2011 |
மு.ஜெயந்தி | 2011 - 2016 |
ரா.வாசுகி | 2016 – 2020 |
பே. ஆனந்தி | 2020 - தற்போது வரை |
✅Finalised Page