under review

வி.கே.என்

From Tamil Wiki
Revision as of 22:57, 4 August 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
வி.கே.என்
வி.கே.எனும் பஷீரும்
வி.கே.எனும் மனைவியும்

வி.கே.என் (வி.கே.நாராயணன் குட்டி நாயர்) ( 7 ஏப்ரல் 1929 - 25 ஜனவரி 2004) மலையாள அங்கத எழுத்தாளர். சுருக்கமான விவரணைகள், கலாச்சார உட்குறிப்புகள், அரசியல் நையாண்டி ஆகியவை கொண்ட கதைகளுக்காக புகழ்பெற்றவர். அங்கத எழுத்த உயர் இலக்கியமாக ஆக்கியவர் என கருதப்படுகிறார்

பிறப்பு, கல்வி

வி.கே.என்னின் முழுப்பெயர் வடக்கே கூட்டால நாராயணன் குட்டி நாயர். 7 ஏப்ரல் 1929ல் கேரளத்தில் திரிச்சூர் மாவட்டத்தில் திருவில்வமலை என்னும் ஊரில் பிறந்தார். பள்ளியிறுதிக் கல்வியை திருவில்வமலையில் முடித்தார்.

வி கே என் நினைவகம்

தனிவாழ்க்கை

வி.கே.என் மலபார் தேவஸ்வம் போர்டில் (ஆலய நிர்வாக அமைப்பு) 1951ல் பாலக்காட்டில் கடைநிலை ஊழியராகப் பணிக்குச் சேர்ந்தார். த ட்வின் காட் என்னும் கதை தேவஸ்வம் போர்டு ஆணையரை பகடி செய்வதாக கருதப்பட்டமையால் மலப்புறம் மாவட்டம் புளிக்கல் ஆலயத்திற்கு இடமாற்றம் செய்யபட்டார். அந்த ஆலயம் ஒரு தனியார் அமைப்புக்கு அரசால் கைமாற்றம் செய்யப்பட்டபோது வேலைநீக்கம் செய்யப்பட்டார். ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சங்கர்ஸ் வீக்கிலியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த வி.கே.என் சங்கர் அழைப்பின்பேரில் 1959ல் டெல்லிக்குச் சென்றார்.969 வரை டெல்லியில் பணியாற்றினார். பின்னர் முழுநேர எழுத்தாளராக திருவில்வமலையில் வாழ்ந்தார்.

வி.கே.என் வேதவதி அம்மாவை மணந்தார். மகன் பாலசந்திரன். மகள் ரஞ்சனா

இதழியல்

வி கே என்

வி.கே.என் ஆங்கிலத்தில் சங்கர்ஸ் வீக்கிலியில் கட்டுரைகளும் பகடிக்குறிப்புகளும் எழுதிவந்தார். பின்னர் செய்திநிறுவனமான யூ.என்.ஐ செய்தியாளரானார். சிறிதுகாலம் ஆகாசவாணியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். 1969ல் இதழியல் பணியை உதறினார்.

இலக்கிய வாழ்க்கை

வி.கே.என் எழுதிய முதல் சிறுகதை பராஜிதன் (தோற்றவன்) மாத்ருபூமி அக்டோபர் 1953 இதழில் வெளிவந்தது. தொடர்ச்சியாக சிறுகதைகளும், பகடிக்குறிப்புகளும் எழுதினார். பதிமூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். வி.கே.என் கதைகள் தன்வரலாற்றுத்தன்மை கலந்தவை. பையன் என்ற பெயரில் அவரே கதைகளில் திரிக்கப்பட்ட வடிவில் தோன்றுகிறார். அரசியல்பகடிகளில் உண்மையான ஆளுமைகள் நேரடியாகவும் பெயர்கள் மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

விவாதங்கள்

வி.கே.என் கதைகள் அரசியல்சரிநிலைகளை பொருட்படுத்தாதவை. ஆகவே பெண்கள், தலித்மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான பழமைவாதப் பார்வை அவற்றில் உள்ளது என்று குறிப்பிடப்படுவதுண்டு.

இறப்பு

வி.கே.என் தன் 75 ஆம் வயதில் 25 ஜனவரி 2004ல் திருவில்வமலையில் மூளைப்புற்றுநோயால் மரணமடைந்தார்.

விருதுகள்

  • 1969 கேரளசாகித்ய அக்காதமி விருது (ஆரோகணம்)
  • 1978 எம்.பி.பால் விருது
  • 1982 கேந்திர சாகித்ய அக்காதமி விருது (பையன் கதைகள்)
  • 1997 முட்டத்து வர்க்கி விருது (பிதாமகன்)

நினைவகம், வாழ்க்கை வரலாறு

  • வி.கே.என் நினைவகம் திருவிலவமலையில் 25 ஜனவரி 2013 ல் கேரள அரசால் உருவாக்கப்பட்டது
  • வி.கே.என் வாழ்க்கை வரலாறு. டி.என்.பிரகாஷ் சாகித்ய அக்காதமி.

இலக்கிய இடம்

மலையாளத்தில் பகடி இலக்கியத்திற்கு ஒரு மரபு உண்டு. சாக்கியார் கூத்து, ஓட்டன் துள்ளல் என்னும் இரண்டு செவ்வியல் கலைவடிவங்கள் பகடிக்கே உரியவை. வி.கெ.என் அந்த மரபின் நவீன இலக்கிய வடிவம். செய்தியாளராக இருந்தமையால் அரசியல், சமூகவியல், பொருளியல் ஆகியவற்றில் ஆழ்ந்த வாசிப்பு அவருக்குண்டு. மரபுக்கலைகளிலும் கேரளவரலாற்றிலும் தேர்ச்சியும் உண்டு. இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு நுண்ணிய வாசகர்களுக்காக உருவாக்கப்பட்ட அங்கதப்படைப்புகள் அவருடையவை. அரசியல்சரிநிலைகளை பொருட்படுத்தாமல் அவர் பகடி செய்தார். ஆனால் எந்த தரப்பையும் சேர்ந்து நிற்கவில்லை. எல்லா கருத்துக்களையும் பகடிச் செய்தார். ஓர் எழுத்தாளராக முழுமையான அவநம்பிக்கைவாதி என அவரை வரையறைசெய்யலாம். இலட்சியங்கள், கொள்கைகள், தத்துவங்கள் எல்லாமே அவரால் கேலிசெய்யப்பட்டன. "அந்தந்த தருணங்களில் முளைத்த சிறகுகளால் முன்னைவிட மேலுமென வி.கே.என் தாண்டிய உயரங்களை மலையாளத்தில் எவரும் தாண்டியதில்லை" என்று கல்பற்றா நாராயணன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கதைகள்
  1. மந்தஹாசம்
  2. பையன்
  3. கிளியோபாட்ரா
  4. பையனின் காலம்
  5. காலகட்டத்திலே பையன்
  6. பையன்றே சமரம்
  7. பையன்றே யாத்ரகள்
  8. குஞ்ஞன் மேனோன்
  9. அதிகாயன்
  10. சாத்தன்ஸ்
  11. சூர்ணநந்தன்
  12. சர் சாத்துவின்றே ரூலிங்
  13. ஹாஜ்யாரு
  14. மானாஞ்சிற டெஸ்ட்
  15. ஒராழ்ச்ச
  16. பையன்றே டைரி
நாவல்கள்
  1. அசுரவாணி
  2. மஞ்சல்
  3. ஆரோஹணம்
  4. ஒராழ்ச்ச
  5. சிண்டிக்கேட்
  6. ஜனரல் சாத்தன்ஸ்
  7. பையன்றே ராஜாவு
  8. பெண்பட
  9. பிதாமகன்
  10. குடிநீர்
  11. நாணுநாயர்
  12. அதிகாரம்
  13. அனந்தரம்
குறுநாவல்
  1. அம்மூம்மக்கத
கட்டுரை
  1. அய்யாயிரமும் கோப்பும்

மொழியாக்கங்கள்

ஆங்கிலம்
  • Bovine Bugles (மொழியாக்கம் வி.கே.என்)
தமிழ்
  • பையன் கதைகள் (மொழியாக்கம்ஶ்ரீபதி பத்மநாபா)

உசாத்துணை



✅Finalised Page