விளாப்பாக்கம் பெண் பள்ளி

From Tamil Wiki
Revision as of 19:51, 11 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பஞ்ச பாண்டவமலைக்குச் சற்று தொலைவிலுள்ளது விளாப்பாக்கம் என்னும் சிற்றூராகும். பஞ்ச பாண்டவமலையின் (திருப்பான்மலை) தொடர்ச்சி இவ்வூரிலும் காணப்படுவதால் இதன் சின்ன திருப்பான் ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பஞ்ச பாண்டவமலைக்குச் சற்று தொலைவிலுள்ளது விளாப்பாக்கம் என்னும் சிற்றூராகும். பஞ்ச பாண்டவமலையின் (திருப்பான்மலை) தொடர்ச்சி இவ்வூரிலும் காணப்படுவதால் இதன் சின்ன திருப்பான் மலை என்றும், விளாப்பாக்கம் ஊரை ஒட்டியிருப்பதால் விளாப்பாக்கம்மலை என்றும் அழைப்பர். திருப்பான்மலையிலுள்ள சமண சமயச் சிற்பங்களையும், கல்வெட்டுக்களையும் பற்றிய செய்திகளை முன்பு கண்டோம். அங்குள்ள சான்றுகளின் அடிப்படையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சமண சமயம் அங்கு வேரூன்றியிருந்தது என்பதுவும் வெள்ளிடைமலை.

இதே காலகட்டத்தில் விளாப்பாக்கத்திலும் சமண சமயம் பரவியிருக்கிறது. இந்த விளாப்பாக்கம் மலையில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் காலக் கலைப்பாணியைப் பெற்றிலங்கும் குடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இதுவே கி. பி. 8-ஆம் நூற் றாண்டில் சமண சமயத்தவர் வசமாகி பெண் துறவியர் வதியும் பள்ளியாக ஆகியிருக்கிறது.

குடை வரைக் கோயில்

இங்குள்ள குடைவரைக் கோயில் ஆறு தூண்களையும், இரண்டு அரைத் தூண்களையும் இரு வரிசைகளாகக் கொண்ட அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. இங்கு மண்டபத்தின் பின்புறச்சுவரில் கருவறைகள் ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவேயன்றி அவை பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே இந்த கோயில் நிறைவு பெறாத குடைவரைக் கோயிலாகும். இக்குடைவரையிலுள்ள தூண்கள் பருமனாகவும், சதுர வடிவுடனும், மேற்பகுதியில் செவ்வக வடிவ போதிகைகளுடனும் திகழ்கின்றன. குடை வரையின் முகப்பில் கொடுங்கை போன்ற அமைப்பு எதுவும் இல்லை. இவ்வாறு எளிமையான கலையம்சங்களைக் கொண்ட இக்கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்க கட்டத்தில் ஆட்சி புரிந்த முதலாவது மகேந்திர பல்லவன் காலத்தில் (கி.பி. 610-630) உருவாக்கட்பட்டதென்பது வெள்ளிடைமலை. தொண்டை நாட்டில் மண்டகப்பட்டு, தளவானூர், மகேந்திரவாடி, வல்லம், மாமண்டூர், சீயமங்கலம், அறகண்ட நல்லூர் மூதலிய பல இடங்களில் இதே அமைப்புகளையுடைய மகேந்திரன் காலக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. ஆனால் விளாப்பாக்கத்திலுள்ள குடைவரை சமண சமயத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்ட தல்ல, இதன் அர்த்த மண்டபத்தின் பின் புறச் சுவர்களில் ஏற்படுத்த முயன்றிருக்கும் கருவறை மாடங்களையும், மண்டபத்திலுள்ள தூண்களின் அமைப்பினையும் கொண்டு, இக்குடைவரை ஒன்றிற்கு மேற்பட்ட இந்து சமயக்கடவுளருக்காக தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஆனால் இந்த கருவறைகள் முழுமையாக அமைக்கப்படாமற் போனமையால் எந்தெந்த கடவுளரை நிறுவ எண்ணியிருந்தனர் என்பதனை அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை.[1] எவ்வாறாயினும் இக்கோயில் ஏதோ ஒரு காரணத்தால் முற்றுப் பெறாமலேயே இருந்திருக்கிறது.

ஆனால் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பஞ்ச பாண்டவமலையில் சமண சமயம் வேரூன்றத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக நந்திவர்ம பல்லவமன்னன் காலத்தில் இங்குள்ள குகையில், நாகநந்தி, பொன்னியக்கியார் முதலிய சமணச் சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டமாகிய கி.பி. 8-ஆம் நாற்றாண்டில் விளாப்பாக்கத்திலுள்ள குடைவரைக் கோயில் நிறைவு பெறாமலும், வழிபாடின்றியும் இருந்தமையால், சமணர்கள் வசமாயிற்று. இதனை இக்குடைவரைக் கோயில் முகப்பிற்கு சற்று மேலாக உள்ள பகுதியில் வடிக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்கரர் சிற்பமும், கோயிலின் கூரையிலும், தூண்களில் பூசப்பட்டுள்ள காரையும் தெளிவுபடுத்துகின்றன. அதாவது நிறைவு பெறாமலிருந்த குடைவரையில் சுண்ணாம்புச் சாந்து பசி, சுவர்களையும், கூரையும் சரி செய்து சமண சமயத்தவர் பயன்படுத்தலாயினர். இவ்வாறு செய்தமை குறிப்பாக எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்பதனை வரையறுக்க எந்தவிதச் சான்றுகளும் இல்லை. இருப்பினும் குடைவரையின் முகப்பில் செதுக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்கரர் சிற்பம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டுக் கலைப் பாணியைக் கொண்டிலங்குவதால் இந்த நூற்றாண்டிலேயே இம்மாற்றம் பெற்றிருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது.[2]

தீர்த்தங்கரர் சிற்பம்

மெல்லிய புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்கரர் திருவுருவம் தியானக் கோலத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறது. இதன் தலைக்கு மேற்பகுதியில் மென்கோட்டினாலான முக்குடை தீட்டப்பெற்றிருக்கிறது. இச்சிற்பத்தின் பின் பகுதியில் அரைவட்ட வடிவ பிரபையோ அல்லது கொடி வேலைப்பாடுகள் எவையுமோ காணப்படவில்லை இயற்கையான அமைப்புகளுடன் அலங்காரமின்றித் திகழும் இச்சிற்பம் கி பி. 8 ஆம் நூற்றாண்டிற்குரியதென்பதை எளிதில் அறிந்து கொள்ள இயலும் இத்திருவுருவம் மாடம் போன்ற அமைப்பினுள் அல்லது, குடைவரைக் கோயிலின் முகப்பிலிருந்து ஆறு அடி உயரத்தில் சற்று முன்னோக்கியுள்ள கற்பகுதியில் செதுக்கப்பட்டிருப்பதிலிருந்தே குடைவரையைக் காட்டிலும் பிற்காலத்தது என்பதனை ஓரளவு உணர்த்துவதாக இருக்கிறது.

கல்வெட்டு

விளாப்பாக்கத்திலுள்ள நாகநாதேஸ்வரர் கோயிலின் முன்பு நட்டு வைக்கப்பட்டிருந்த கல்லில் பொறித்கப்பட்டுள்ள சாசனம் ஒன்று பராந்தக சோழ மன்னனது 38 ஆவது ஆட்சியாண்டைச் (கி.பி. 945) சார்ந்ததாகும். இது திருப்பான் மலைப் பள்ளியைச் (பஞ்ச பாண்டவ மலை) சார்ந்த அறவோராகிய அரிஷ்டநேமி பட்டாரரின் மாணாக்கியாகிய பட்டினிக் குரத்தி என்பவர் விளாப்பாக்கத்தில் கிணறு ஒன்று வெட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதைப் பற்றிக் கூறுகிறது. இந்த கிணறும், கிணற்றை ஒட்டியுள்ள நிலங் களும் விளாப்பாக்கத்திலுள்ள பெண் பள்ளிக்குரியவையாக இருந்திருக்கிறது. இந்த நிலங்களையும், கிணற்றினையும் சரிவரக் கண்காணிக்கும் பணியினைச் ‘சதுர்விம்சதி’ என அழைக்கப்பட்ட இருபத்தி நான்கு பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. மேலும் அரிஷ்ட நேமி பட்டாரகர் இப்பகுதி மக்களுக்குச் சமயத் தலைவராகத் திகழ்ந்தவர் என்பதையும், விளாப்பாக்கம் படவூர் கோட்டத்தின் உட்பிரிவாகிய பெருந்திமிரி நாட்டினுட்பட்டிருந்த ஊர் என்பதனையும் அறியக் கிடக் கிறோம்.[3]

இச் சாசனத்திலிருந்து விளாப்பாக்கத்தில் பெண் துறவியருக்கெனத் தனியாகப் பள்ளி இருந்தமை அறியற்பாலதாகும். இப்பள்ளியினைப் பற்றிய விரிவான செய்திகள் எவையும் நமக்குத் தெரிய வரவில்லையாயினும், இதனைப் பொறுப்புடன் கவனித்து வந்தவர் பட்டினிக்குரத்தியாராக இருந்திருக்க வேண்டும். இவர் இப்பள்ளிக்குரிய நிலத்தில் கிணறு வெட்ட வழிவகை செய்திருக்கிறார். தொண்டை நாட்டில் (வேடல்) என்னும் தலத்திலும், விளாப்பாக்கத்திலும் பெண் பள்ளிகள் இருந்திருக்கின்றன. விளாப்பாக்கத்துப் பள்ளிக்குரிய நிலங்களை ‘சதுர்விம்சதி’ என்னும் இருபத்து நான்கு பேர்களைக் கொண்ட குழு கண்காணித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளாப்பாக்கத்தில் பெண் பள்ளி எங்கிருந்து செயல்பட்டது என்பது பற்றிக் கூறும் சான்றுகள் எவையும் இல்லை. இருப்பினும் இங்குள்ள குடைவரைக் கோயிலே பெண் பள்ளியாகத் திகழ்ந்திருக்க வேண்டுமெனக் கூறலாம். முழுமை பெறாமலிருந்த இக்குடைவரையின் சுவர்களில் சுண்ணச் சாந்து பூசி, பெண் துறவியர் உறைவதற்கு ஏற்றதாக மாற்றியிருக்க வேண்டும் ஆண் துறவியர் உறைந்த மலைக்குகைப்பள்ளிகள் சற்று தொலைவில் இயற்கையான குகைகளாக சமணச் சிற்பங்களைக் கொண்டு பஞ்சபாண்டவ மலையில் விளங்குகின்றன. இவற்றிற்கு சிறிது தொலைவில் மலையடிவாரத்தில் தோற்றுவிக்கப்பட்ட குடைவரையே கி பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து பெண் பள்ளியாகச் செயல்பட்டு வந்திருக்கிறதென அறியக்கிடக்கிறோம்.


[1] K. R, Srinivasan, op. cit., pp. 95-96.

[2] Ibid., pp. 96-97

[3] SII, vol. VII, No. 56; ARE, 53/1900