under review

வாதாபி கணபதி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 38: Line 38:


தமிழகத்தில் பொயு நான்காம் நூற்றாண்டு முதல் பிள்ளையார் வழிபாடு இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் பல கண்டடையப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொயு நான்காம் நூற்றாண்டு முதல் பிள்ளையார் வழிபாடு இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் பல கண்டடையப்பட்டுள்ளன.
*திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் உள்ள பிள்ளையார் சிலை ( பொயு 4 - 5 ஆம் நூற்றாண்டு)
*திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் உள்ள பிள்ளையார் சிலை ( பொயு 4 - 5-ம் நூற்றாண்டு)
*சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை (பொயு 6 ஆம் நூற்றாண்டு)
*சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை (பொயு 6-ம் நூற்றாண்டு)
==முடிவு==
==முடிவு==
உறுதியான சான்றுகளில்லாத நிலையில் வாதாபி கணபதி என்பது வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஒரு தொன்மம் மட்டுமே என்று கொள்ளவேண்டியுள்ளது.
உறுதியான சான்றுகளில்லாத நிலையில் வாதாபி கணபதி என்பது வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஒரு தொன்மம் மட்டுமே என்று கொள்ளவேண்டியுள்ளது.

Latest revision as of 10:18, 24 February 2024

திருச்செங்காட்டாங்குடி பிள்ளையார். திருவாரூர் பிள்ளையார்

வாதாபி கணபதி: நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்கட்டாங்குடி என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார். சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரின் ஊர் இது. அவர் காஞ்சீபுரத்தை ஆட்சி செய்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவரின் படைத்தலைவராக இருந்தபோது சாளுக்கியத் தலைநகர் வாதாபி (இன்றைய பதாமி) யை அழித்து அங்கிருந்து கொண்டு வந்த பிள்ளையாரை திருச்செங்கட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் நிறுவியதாகவும் அந்தச் சிலையே வாதாபி கணபதி என்றும் சொல்லப்படுகிறது. சிறுத்தொண்டர் நிறுவிய சிலை திருவாரூரில் உள்ளது என்று இன்னொரு தரப்பு உண்டு. வாதாபி கணபதி என்பது புலிகேசியின் தலைநகரை குறிப்பதல்ல, அகத்தியரால் உண்ணப்பட்ட வாதாபி என்னும் அரக்கனைக் குறிப்பது என்றும் கூறப்படுகிறது

வரலாற்றுப் பின்புலம்

ஆந்திரநிலத்தில் குண்டூர் அருகே உருவான பல்லவநாட்டின் இரண்டாம் தலைநகராக இருந்தது காஞ்சிபுரம். தங்கள் தாயாதி முறைகொண்டவர்களான சாளுக்கியர்களுடன் தொடர் போரில் இருந்த பல்லவர்கள் காஞ்சிபுரத்துக்கு பின்வாங்கி அங்கே ஓர் அரசை உருவாக்கினர். சிம்மவிஷ்ணு பொயு 537ல் காஞ்சியில் வலுவான ஒரு அரசை உருவாக்கினார். அவர் மகன் மகேந்திரவர்ம பல்லவன் (பொயு 560 -630) காஞ்சிநகரை வலுப்படுத்தி தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி பல்லவப்பேரரசுக்கு அடித்தளமிட்டார்.

வாதாபியை தலைநகராகக் கொண்டு சாளுக்கியப் பேரரசை ஆட்சி செய்த இரண்டாம் புலிகேசி சோழர்களையும் சேரர்களையும் பாண்டியர்களையும் வென்றதாகவும் பல்லவர்களை முழுமையாகத் தோற்கடித்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதாகவும் ஐஹோகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால் வெவ்வேறு பல்லவக் கல்வெட்டுகள் புலிகேசி பல்லவர்களால் காஞ்சிபுரத்தை ஒட்டிய பரியாலம், சூரமாரம், மணிமங்கலம் ஆகிய ஊர்களில் நிகழ்ந்த போர்களில் சாளுக்கியர்களுக்கு பெரிய இழப்பை உருவாக்கி அவர்களை பின்னடையச் செய்ததாகச் சொல்கின்றன

சாளுக்கியர்கள் மகேந்திரவர்ம பல்லவனை வென்று, காஞ்சிபுரத்தை கைப்பற்றி ,சோழநாடு வரைச் சென்றது வரலாற்றாசிரியர்களால் உறுதிசெய்யப்படுகிறது. பல்லவப்படைகள் காஞ்சிபுரத்தை விட்டு விலகி பல சிறு போர்களில் சாளுக்கியர்களை எதிர்த்து போரிட்டிருக்கலாம் என்றும், தொடர்போர்களால் இழப்புகள் உருவாகவே புலிகேசி வாதாபிக்கு திரும்பியிருக்கலாம் என்றும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

மகேந்திரவர்ம பல்லவன் பொயு 630ல் மறைய அவர் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பதவிக்கு வந்தார். பல்லவத் தளபதி பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பெரும்படை வாதாபியை கைப்பற்றியது. இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இரண்டாம் புலிகேசி அப்போரில் கொல்லப்பட்டிருக்கலாம். பொயு 642- 643ல் இப்போர் நடைபெற்றது. வாதாபி (பதாமி)யில் நரசிம்மவர்ம பல்லவனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மல்லிகார்ஜுனதேவர் ஆலயத்து கல்வெட்டு இப்படையெடுப்புச் செய்தியை உறுதி செய்கிறது.

வாதாபி கணபதி தொன்மம்

மரபான நம்பிக்கைகளின்படி பரஞ்சோதி வாதாபியில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையை வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்து தனது ஊரான திருச்செங்கட்டாங்குடி கோயிலில் நிறுவினார் எனப்படுகிறது. இந்த பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார். இச்செய்திக்கு தொல்லியல் ஆதாரம் ஏதுமில்லை, ஆகவே இது தொன்மமாக கருதப்படுகிறது.

பரஞ்சோதி பின்னர் சிவனடியார் ஆகி சிறுத்தொண்டர் என பெயர் பெற்றார். 63 சைவ நாயன்மார்களில் ஒருவராக அவர் வணங்கப்படுகிறார். இதை பெரியபுராணச் செய்யுள் இவ்வாறு குறிப்பிடுகிறது.

மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.

சிறுத்தொண்டருக்கு பிள்ளையாரின் அருள் கிடைத்தது பற்றி ஞானசம்பந்தர் " பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று குறிப்பிடுவதை இக்கதைக்குச் சான்றாகக் குறிப்பிடுகிறார்கள்.

பார்க்க சிறுத்தொண்ட நாயனார்

வரலாற்று விவாதங்கள்

வாதாபி அரக்கனை குறிப்பிடுகிறது என்னும் கோணம்

வாதாபி கணபதி என பல ஊர்களில் பிள்ளையாருக்குப் பெயர்கள் உண்டு என்று சொல்லும் காஞ்சி மடாதிபதியாக இருந்த சந்திரசேகர சரஸ்வதி "அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அசுரனை ஜெயித்துக் கொல்வதற்காக அகத்தியர் உபாசித்த கணபதி அவர். திருச்செங்கட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே." என்கிறார். வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட பிள்ளையார் அது என்பதை மறுக்கிறார்.

திருச்செங்கட்டாங்குடி ஆலயம் கணபதியால் வழிபடப்பட்ட சிவலிங்கம் மையக்கருவறைக்குள் அமைந்தது. இந்த ஆலயத்தின் பெயரே கணபதீச்சரம் என்பதுதான். பல்லவர் காலத்திற்கு முன்பிருந்தே ஆலயம் இப்பெயரால்தான் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூரில் வாதாபி கணபதி உள்ளது என்னும் கோணம்

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் திருவாரூர் கோவிலில் முதல் பிரகாரத்தில் (தியாகராஜர் சிலைக்கு பின்புறம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரே உண்மையான வாதாபி விநாயகர் என தனது திருவாரூர் திருக்கோவில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்

'சிறுத்தொண்டரால் கொணரப்பட்ட கணபதி, அவரது சொந்த ஊரான திருச்செங்கட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்ததாகக்கூறி அத்திருக்கோயில் "வாதாபி விநாயகர்" என்ற திருப்பெயரில் பூஜிக்கப் பெறுகின்றது. சிற்ப இயல் அடிப்படையில் நோக்கும்போது அது மேலை சாளுக்கியர்களின் வாதாபி நகர கலை பாணி அன்று. மாறாக நமது சோழநாட்டுத் திருமேனியாகத்தான் (சோழர்கள் காலப் பாணி) உள்ளது. ஆனால் திருவாரூரில் உள்ள "வாதாபி விநாயகர்" என்னும் சிற்பம் தமிழகசிற்ப அமைப்பிலிருந்து மாறுபட்டும், தொன்மையானதாகவும் சாளுக்கிய நாட்டு சிற்ப எழிலுடன் உள்ளது சிந்திக்கதக்கதாகும். முத்துசுவாமி தீட்சிதர் யாத்த "வாதாபி கணபதி பஜேஹம்" என்ற பாடல் இவர் முன்பு இயற்றப்பட்டது என்ற பெருமையும் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு உண்டு." (குடவாயில் பாலசுப்ரமணியன், திருவாரூர் திருக்கோவில் )

விநாயகர் வழிபாட்டை பற்றி ஆய்வு செய்த டேவிட் பிரவுன் (David Brown) என்ற அமெரிக்க இறையியல் ஆய்வாளர் எழுதிய Ganesh: Studies of an Asian God புத்தகத்தில் திருவாரூரில் உள்ள விநாயகரே வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் என குறிப்பிட்டுள்ளார். ராபர்ட் பிரவுன் என்னும் ஆய்வாளரின் கருத்தையும் குடவாயில் பாலசுப்ரமணியம் மேற்கோளாக்கியுள்ளார்.தன் நூலில் ராபர்ட் பிரவுன் திருச்செங்கட்டாங்குடி பிள்ளையார் தமிழகத்துச் சிற்பக்கலைத் தன்மையுடன் இருக்க திருவாரூர் பிள்ளையாரே சாளுக்கியக் கலைச்சாயலுடன் இருப்பதாகச் சொல்கிறார். இக்கருத்தை காஞ்சி மடாதிபதியாக இருந்த சந்திரசேகர சரஸ்வதியும் கூறுகிறார்

முதல் பிள்ளையாரா?

தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்களில் பிள்ளையார் பற்றிய குறிப்பு இல்லை என்றும், ஆகவே ஏழாம் நூற்றாண்டில் பரஞ்சோதியாகிய சிறுத்தொண்டர் வாதாபியில் இருந்து கொண்டுவந்ததே முதல் பிள்ளையார் என்றும், அதன்பின்னரே சைவத்திற்குள் வினாயகர் வழிபாடு உருவாகியது என்றும் ஒரு கூற்று உண்டு. ஆனால் அதற்கு தொல்லியல் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ இல்லை.

தமிழகத்தில் பொயு நான்காம் நூற்றாண்டு முதல் பிள்ளையார் வழிபாடு இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் பல கண்டடையப்பட்டுள்ளன.

  • திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் உள்ள பிள்ளையார் சிலை ( பொயு 4 - 5-ம் நூற்றாண்டு)
  • சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை (பொயு 6-ம் நூற்றாண்டு)

முடிவு

உறுதியான சான்றுகளில்லாத நிலையில் வாதாபி கணபதி என்பது வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஒரு தொன்மம் மட்டுமே என்று கொள்ளவேண்டியுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page