being created

வண்ணக்கடல் (வெண்முரசு நாவலின் மூன்றாம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 22:31, 25 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வண்ணக்கடல் (‘வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதி)

வண்ணக்கடல் (‘வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதி) மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. இதன் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அவர்களைப் பற்றியதாகவே அமைந்த இந்த வண்ணக்கடல், ‘இளநாகன்’ என்ற தமிழகப் பாணனின் பார்வைக் கோணத்தில் விரிகிறது. இதில் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் இளமைக்காலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. துரோணரைத் துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுணனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் இதில் நிகழ்கின்றன.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதியான ‘வண்ணக்கடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூன் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2014 இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

வண்ணக்கடலை நற்றிணை பதிப்பகமும் பின்னர் கிழக்கு பதிப்பகமும் அச்சுப் பதிப்பாக வெளியிட்டன.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய மூவரையும் மூன்று பெரும்புள்ளிகளாக மாற்றியது ஊழ்தான். அந்த ஊழ்தான் அவர்களை அவமானமடையச் செய்து, அவர்களை வரலாற்றில் இடம்பெறத்தக்க பெரிய மனிதர்களாக்கியது. இவர்களை இவ்வாறு ஆக்கியதற்கு அடிப்படைக் காரணம் இவர்களின் பிறப்புமுறைதான். துரியோதனன் மதங்கக் கர்ப்பத்திலிருந்து பிறந்தவன். துரோணர் குலமுறைப் பிறழ்வுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவர். கர்ணன் தெய்வத்தால் உண்டான கர்ப்பத்திலிருந்து உதித்தவன். இவர்கள் அவமானப்படுவது இவர்களின் பிறப்பினாலேயேதான்.

துரியோதனன் யானைக்கு நிகரான வலிமையுடன் திகழ்வதாலேயே தன்னுடைய வலிமைக்குச் சிறிதளவு இழுக்கு ஏற்படும்போதும் அவன் தன்னுள்ளேயே பொங்கிக் கொந்தளித்துச் சரிகிறான். துரோணர் அதீத திறனிருந்தும் தன்னுடைய குலமுறைப் பிறழ்வாலேயே எல்லா இடத்திலும் சரிக்கப்படுகிறார். அதன் பின்விளைவாக அவரின் ஆசைகள் விரிந்து விரிந்து பேராசைகளாக மாறிவிடுகின்றன. கர்ணன் தன்னுடைய தனித்திறமையை நிறுவ முயலும் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பு குறித்து பழிக்கப்பட்டே எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். புறக்கணிப்பின் வலியே அவனுக்கு மேலும் மேலும் வலிமையை வாரி வழங்குகிறது. இவர்கள் மூவரும் தாங்கள் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்முடைய ஆன்மாவைப் பற்றிக்கொண்டு, தம்மை முழுவதுமாகவே புதுப்பித்துக் கொள்கிறார்கள். துரோணரும் கர்ணரும் தம்முடைய வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ள நேர்கிறது. துரியோதனனோ பரந்து விரிந்த அஸ்தினபுரியில் வாழ்ந்தாலும் தன்னுள்ளேயே சிறைப்படுகிறான்.

துரோணர் தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் தன்னுடைய முதன்மையான மாணவன் அர்சுணனுக்கும் ஏற்பட்ட பிணக்கினைச் சீர்செய்ய இயலாமல் திண்டாடும் தருணத்தில்தான் கர்ணன் அவரிடம் வந்து சேர்கிறான். தன் மகனுக்குத் துணையாகவும் அர்சுணனுக்கு இணையாகவும் அவரால் கர்ணனை மட்டுமே வைக்க முடிகிறது. துரோணருக்கும் கர்ணனுக்கும் இடையில் ஒருவித மனப்பிணைப்பு ஏற்படக் காரணம் ‘இருவருமே பிறப்புசார்ந்து பிறரால் புறக்கணிக்கப்படுபவர்கள்’ என்பதே!. இருவருமே தங்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் அவமானப்பட்டவர்கள்தான்.

பீமசேனன் காட்டிலும் துரியோதனன் நாட்டிலும் அரக்கர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர். இருவருமே தம் அன்னை அஞ்சும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சுவதில்லை. ஆனால், இருவருமே ‘தமக்கான இணை எதிரிகள் தாமே’ என்பதைக் கண்டுகொண்டவுடன், ஒருவரையொருவர் மோதி, சரிந்து, ‘இருவருமே சமமான அளவு வலிமையுடையவர்களே!’ என்பதைத் தங்களுக்குள் நிறுவி, தங்களின் ஆழ்மனம் அதை ஒப்புக்கொண்ட பின்னர், இணைபிரியாத நண்பர்களாகி விடுகின்றனர்.

ஒருகட்டத்தில் பீமசேனனும் துரியோதனனும் நகுலன், சகாதேவன் போலவே இரட்டைப் பிள்ளைகளாகவே மாறி விடுகின்றனர். ஒரே காந்தத்துண்டின் எதிரெதிர்த் துருவங்கள் போல அவர்கள் இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இரண்டு துருவங்களாகத் தெரியும். ஆனால், அந்தக் காந்தத்துண்டைப் பொருத்தவரை அது ஒரே காந்தத்தின் இரண்டு முனைகள் மட்டுமே. இளமையில் பகையும் நட்பும் நீட்டிப்பதில்லைதான். காலத்தின் முன் அது அலுங்கும்போது மட்டுமே, மெல்ல நழுவும்போது மட்டுமே அது நட்பாகவோ அல்லது பகையாகவோ தனித்து நிலைத்து, நீட்டிக்கும். 

கானாடுதலின்போது அன்னைக் கரடி துரியோதனனைத் தாக்குகிறது. பீமசேனன் துரியோதனனைக் காப்பாற்றுகிறான். பீமசேனனின் இந்தச் செயலால் தான் தன் தம்பியர்களின் முன்னால் தான் வலுவிழந்தவனாக உணர்ந்த துரியோதனன் கடும்சினம் கொள்கிறான். தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப்பட்டதாகவே அவன் கருதுகிறான். அந்த அவமானத்தால் அவனுள் பொங்கிய சினம்தான் பீமசேனனைக் கொல்லத் தூண்டுகிறது. அதற்கு முயற்சி செய்கிறான்.

இந்த நிகழ்வுக்கு முன்பாகவே துரியோதனனும் துச்சாதனனும் மதம் ஏறிய ‘சியாமன்’ என்ற யானையைத் தேடிச் செல்கின்றனர். அவர்களுடன் யானைப் பாகர்களும் வீரர்களும் இருக்கின்றனர். துரியோதனனையும் துச்சாதனனையும் அந்த யானையில் உறைந்திருந்த தெய்வம் துரியோதனனைத் தாக்கத் தொடங்குகிறது. அப்போது துச்சாதனன் துரியோதனனைக் காக்கிறான். பின்னர் துரியோதனன் அந்த யானையுடன் தனித்துச் சண்டையிட்டு, அதனை அடக்குகிறான்.

தன்னைத் துச்சாதனன் காப்பாற்றியதற்காகவோ அல்லது தான் யானையுடன் தனித்துச் சண்டையிடுவதைத் தடுக்கும் விதமாகத் துச்சாதனன் குறுக்கே வந்துவிட்டான் என்றோ துரியோதனன் துச்சாதனன் மீது துளியும் சினம்கொள்ளவில்லை. துச்சாதனன் தன்னைத் தன்னுடைய வீரர்கள், யானைப் பாகர்கள் ஆகியோரின் முன்பாகக் காப்பாற்றியதால், வலுவிழந்தவனாகத் தன்னைத் துரியோதனன் உணரவும் இல்லை, தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப் பட்டதாகவும் கருதவும் இல்லை. ஆனால், கானாடுதலின் போது கரடியிடமிருந்து தன்னைப் பீமசேனன் காப்பாற்றியதற்காகத் துரியோதனன் கடும் சினம் கொள்ளக் காரணம் என்ன?

துரியோதனனைப் பொருத்தவரை துச்சாதனன் அவனுக்கு நிழல்தான். தன் நிழலை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதனைத் தன்னிலிருந்து பிரித்து நோக்கவும் விரும்ப மாட்டார்கள். தன் தாய் காந்தாரியின் ஆணையின்படிதான் துச்சாதனன் தன் அண்ணன் துரியோதனனை நிழல் போலத் தொடர்கிறான் என்றும் கொள்ளலாம். துரியோதனனைப் பொறுத்தவரை பீமசேனன் அவனுக்கு ஆடிப்பாவை. தான் நிஜம் என்பதால், ஆடியில் தெரியும் தன் உருவான பீமசேனன் அவனுக்கு வெற்றுருதான், மாயைதான். ‘தன்னுடைய வெற்றுருவா தன்னைக் காப்பாற்றுவது?’ என்று கூடத் துரியோதனன் இறுமாப்பு அடைந்திருக்கக் கூடும். அதன் இறுமாப்புதான் அவனுக்குள் அவமானத்தை உணரச் செய்து, அவனைச் சினங்கொள்ள வைத்து, பீமசேனன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டியிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதலைத் துச்சாதனன்தான் முதலில் தொடங்குகிறான். ‘துச்சாதனன் நாகநச்சினை உணவில் கலந்து பீமசேனனுக்கு அளித்தமை துரியோதனனுக்குத் தெரியாது’ என்றுதான் இங்குக் காட்டப்பட்டுள்ளது.

அஸ்தினபுரியில் படைக்கலப்பயிற்சிக்குக் களம் அமைக்கின்றனர். ‘பீமசேனனும் துரியோதனனும் கதாயுதச் சண்டையிடுவார்கள்’ என்றுதான் அனைவருமே எதிர்பார்க்கின்றனர். தன்னைச் சந்திக்க வந்த துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் சகுனி பீமசேனனின் வீரத்தை உயர்த்தியும் துரியோதனனின் வீரத்தைத் தாழ்த்தியும் பேசுகிறார். துரியோதனன் சினமடைந்து அங்கிருந்து செல்கிறான். சகுனி, துச்சாதனனிடம் ‘துரியோதனனுக்குச் சினம் ஏற்பட்டால்தான் அவனால் பீமசேனனை வெற்றிகொள்ள முடியும்’ என்கிறார்.

துரியோதனனின் மனத்தை முழுவதும் அறிந்தவர் சகுனி. அதனால்தான் துரியோதனனை அவமானப்படுத்துகிறார். அந்த அவமானமே அவனுள் பெருவலிமையைத் திரளச்செய்யும் என்று நினைக்கிறார். சகுனி தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து நினைத்து துரியோதனன் தொடர்ந்து பயிற்சி செய்கிறான். இரவில் துயிலாமல் தவிக்கிறான். பீமசேனன் மீது அவனுக்குத் தீராச் சினம் ஏற்படுகிறது. பொழுது விடிந்தபோது துரியோதனன் பேராற்றல் கொண்டவனாக உருவெடுத்து, படைக்கலப்பயிற்சிக் களத்துக்குத் தன் கதாயுதத்துடன் செல்கிறான். அங்குக் கிருபர் பீமசேனனுடன் கதாயுதச் சண்டையிட துச்சாதனனை அழைக்கிறார். அதுவே, துரியோதனனுக்கு ஏமாற்றமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. வேறுவழியின்றித் தன்னுடைய கதாயுதத்தைத் துச்சாதனனிடம் தருகிறான். அதைக் கொண்டு பீமசேனனனை எதிர்கொள்ளும் துச்சாதனன் முதல்தாக்குதலையே கொலைவெறியுடன் தொடங்குகிறான். அதைப் பீமசேனன் உணர்கிறான். அந்தச் சண்டையில் பீமசேனன் எளிதாக வெற்றி பெறுகிறான்.

‘இளநாகன்’ என்ற பயணி இந்தியாவின் அதிதென்முனையிலிருந்து அஸ்தினபுரி வரை பயணிக்கிறான். அனைத்து நாட்டு அரசுகள் சார்ந்த அனைத்துத் தகவல்களும் சூதர்களின் வாழ்வு வழியாக எவ்விதமாகப் பல நாடுகளைக் கடந்தும் பரப்பப்படுகின்றன எனபதை நாம் இளநாகனின் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சூதர்களின் சொற்களைக்கொண்டு தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் பார்த்தால், சூதர்களின் சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் நாம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து அறிந்துவருகிறோம் என்ற உண்மை புலப்படுகிறது. இளநாகனின் பயணத்தின் வழியாகப் பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுத்தாளர் ஜெயமோகன் நம் கண்முன் கொண்டுவருகிறார்.

கதை மாந்தர்

துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் இளநாகன், பீமன், சகுனி, துச்சாதனன், அஸ்வத்தாமன், அர்சுணன், கர்ணன் ஆகியோர் துணைமைக்கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்

[[Category:Tamil Content]]