வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன்
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் சங்க காலப் புலவர். இவரது பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
வட நாட்டிலிருந்து தமிழகம் வந்து நாணய ஆய்வாளர் தொழில் மேற்கொண்டார். சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களைப் போல அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் அதியர், ஆவியர், மலையர் போன்ற குறு நில மன்னர்களும் ஆண்டு வந்துள்ளனர். அத்தகைய அரசர்களுள் மலையர்கள், மலையமான்களும் ஒருவர். தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர்கள் மலையமான் இனம். முள்ளூர் என்ற மலையும், காடும் சூழ்ந்து இருந்ததால் மலாடு, மலையமாநாடு என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாட்டில் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனின் காலத்தைச் சேர்ந்த திருமுடிக்காரி எனும் அரசன் ஏழு வள்ளல்களுள் ஒருவனாகக் கருதப்பட்டான். இவர் மலையனின் நண்பர் என்பது பாடல் வழி அறிய முடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் புறநானூற்றில் 125வது பாடல் பாடினார். பாடப்பட்டோன் தேர்வண் மலையன். வாகைத்திணைப் பாடலாக அமைந்துள்ளது. சோழனுக்கும் சேரனுக்கும் நிகழ்ந்த போரில் சோழன் பக்கமிருந்து போரிட்டு வெற்றி வாகை சூடி வந்த மலையன் சோழன் பரிசாகக் கொடுத்த பொருளை வாங்கிக் கொள்கிறான். அவனின் புகழ் பாடுவதாக செய்யுள் அமைந்துள்ளது.
அறியவரும் செய்திகள்
- சோழனுக்கும் சேரனுக்கும் நடைபெற்ற போரில் தேர்வண் மலையன் சோழனுக்குத் துணையாக நின்று போரிட்டான்.
- போரில் வென்றவனும், தோற்றவனும் தேர்வண் மலையனின் புகழ் பாடுகின்றனர்.
- போரில் வென்றதற்கு சோழன் மலையனுக்கு பொருள் தருகிறான்.
- “உருத பகடு அழி தின்றாங்கு”: உழுத எருது நெல்லை உழுதவனுக்குக் கொடுத்துவிட்டு வைக்கோலைத் தின்பது போல என்ற உவமை பயின்று வந்துள்ளது.
- ’செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பழந்தமிழ் நடையில் வரும் பாங்குகளில் ஒன்றாக ‘கவர்பு’ என்ற சொல் பயின்றுவந்துள்ளது.
- நூல் நூற்கும் பெண் வைத்திருக்கும் பஞ்சு போல் நெருப்பில் சுட்டு வெந்த புலால் உணவைப் பறிமாறிக்கொண்டு உண்ணலாம் என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் மலையனைக் காண வருகிறார்.
பாடல் நடை
குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
வெலீஇயோன் இவன் எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய,
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
தொலைஇயோன் அவன் என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.