வசுமதி ராமசாமி

From Tamil Wiki
Revision as of 19:36, 18 February 2022 by Jeyamohan (talk | contribs)
வசுமதி ராமசாமி

வசுமதி ராமசாமி. (தோற்றம்: 21.4.1917, மறைவு: 4.1.2004). தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். பெண்களுக்கான இதழ்களில் குடும்பச்சூழலைச் சித்தரித்தவர்.

பிறப்பு கல்வி

21 ஏப்ரல் 197ல் கும்பகோணத்தில் பிறந்தார். இவருடைய தமையன் சுவாமி ஐயங்கார் கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர். அவ்வாறு இலக்கிய வாசிப்புக்குள் ஈர்க்க்ப்பட்டார்.

தனிவாழ்க்கை

12 வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆனது. கணவர் ராமசாமி ஐயங்கார் சென்னையில் வழக்கறிஞர். இவருடைய மகன் "அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள்

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோர் நெருங்கிய தோழிகள்.

இலக்கியவாழ்க்கை

வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. அவர் நடத்திய நந்தவனம் பெண்கள் இதழில் எழுதினார்.தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்' விகடனில் வெளிவந்தது.கல்கியில் எழுதிய ‘தேவியின் கடிதங்கள்' என்ற கடித வடிவ நாவலுக்கு ராஜாஜி அணிந்துரை வழங்கினார்.

தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். (இறுதி ஆண்டுத் தேர்வின் போது கணவர் மறைந்தது இவரைப் பாதிக்கவே படிப்பைத் தொடரவில்லை.)

சமூகசேவை

காந்தியை நேரடியாகச் சந்தித்து அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றார். காந்தி தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றார். முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய ‘இந்திய மாதர் சங்கம்’ என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் பக்தி கொண்ட வசுமதி ராமசாமி அவர் கூறியபடி ‘ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஒளவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.