லா.ச. ராமாமிர்தம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007 ) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக் குறிப்புகளுடனும் எழுதப்பட்ட இவருடைய நடை புகழ்பெற்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பும் நுண்ணிய விவரணைகளும் இந்து மதமரபின் படிமங்களும் கலந்த கதைகள் இவருடையவை. இசையனுபவமும் மறைஞான அனுபவமும் அவற்றில் வெளிப்படுகின்றன.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, இளமை
லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916-ல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சப்தரிஷி - ஸ்ரீமதி இணையருக்குப் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.இவருடைய தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது. பள்ளியிறுதி (எஸ்.எஸ்.எல்.சி) வரைக்கும் படித்திருக்கிறார்.
தனி வாழ்க்கை
லா சா ரா சென்னையில் வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடரும்பொருட்டு வங்கியாளராகச் சென்றார். பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.
குடும்பம்
லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி. இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். லா.ச.ராமாமிர்தத்தின் மகன் சப்தரிஷி தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதுபவர்.
இலக்கிய வாழ்க்கை
லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகங்களில் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருந்தார். அவை ’பெருந்திரு’ (திருமகள்) மீது புனையப் பட்டவை. அதை ஒரு இடையறாத தியானமாக, அன்றாட வழிபாடாக அவர் செய்து வந்தார். லா.ச.ராமாமிர்தம் தன் முன்னுதாரணமாக கொண்டது அந்த முறையைத்தான் என குறிப்பிடுகிறார்.
லா.ச.ராமாமிர்தம் தன் பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார். தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ரா), லா.சா.ராவின் இலக்கிய வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும் கூறுகிறார்.
தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். 1966ல் தனது 50வது வயதில் ‘புத்ர’ என்னும் தனது முதல் நாவலை எழுதினார். வாசகர் வட்ட வெளியீடாக அந்நாவல் பிரசுரிக்கப்பட்டது . 1970ல் அபிதா என்னும் நாவலை எழுதினார்.இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட பெருந்தொகை, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" ஆகியவற்றைச் சொல்லலாம். செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கூறுகிறார்
தொடக்க காலக் கதைகளில் இருந்தே லா.ச.ராமாமிர்தம் தனக்கென ஒரு நடையை உருவாக்கி கொண்டார். உச்சாடனத்தன்மைகொண்டதும், இசையோட்டம் ஊடாடுவதும், சொல்விளையாட்டுக்களும் படிமங்களும் பயின்றுவருவதுமான நடை அது. அவருடைய கதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அந்த நடையே உள்ளது மாயத்தன்மையும் உளமயக்கும் கொண்ட கூறுமுறை அவருடையது. ‘கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தம் எனக்கு கேட்கிறதே, உனக்கு கேட்கிறதோடி?” என்னும் அவருடைய வரி அவருடைய நடைக்கான உதாரணம்.
இலக்கிய இடம்
தமிழில் நவீன இலக்கியம் யதார்த்தவாதம் வழியாகவே அறிமுகமாகியது. சமூகச்சூழலையும் உறவுகளையும் யதார்த்தமாக முன்வைப்பவை நவீனத்தமிழிலக்கியப் படைப்புகள். அச்சூழலில் முன்பில்லாத ஒன்றாக லா.ச.ராவின் படைப்புகள் வெளியாயின. அவை உணர்ச்சிமிக்க மொழிநடையும் மிகையதார்த்தச் சித்தரிப்பும் கொண்டவை. தொன்மங்கள், மாயநிகழ்வுகள், கனவுகள் ஊடாடிக்கலந்த புனைவுலகு லா.ச.ராவுடையது. அவர் அதற்காக உருவாக்கிக்கொண்ட நடை மிகையுணர்ச்சியும் அரற்றல் தன்மையும் கலந்த அகவயத்தன்மை கொண்டது. ஆகவே தமிழிலக்கியத்தில் மிகத்தனித்துவம் கொண்ட படைப்பாளியாக லா.ச.ராமாமிர்தம் நிலைகொள்கிறார்.
படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. பெண்ணை காதலுடனும் மறைஞானத் தன்மையுடனும் அணுகுகிறார். அவருடைய கதைகளில் அவருடைய குடும்ப மரபாக வந்த ஸ்ரீவித்யா உபாசனை (தேவி உபாசனை) ஓர் உளநிலையாக வெலிப்பட்டபடியே இருக்கிறது. லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளையும் சித்தரிப்பவை. உறவுகளை விட்டு வெளியே செல்லாத உலகம் அவருடையது.
’லா.ச. ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, விடுதலை பெற்று மனிதத் தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தரவல்லவர் என்றாலும் இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்’ என்று சுந்தர ராமசாமி லா.ச.ராமாமிர்தத்தை தன் கட்டுரையொன்றில் மதிப்பிடுகிறார்*.
மறைவு
லா.ச.ராமாமிர்தம் அக்டோபர் 30, 2007-ல் தனது 92 வயதில், சென்னையில் காலமானார்.
படைப்புகள்
நாவல்கள்
- புத்ர (1965)
- அபிதா (1970)
- கல்சிரிக்கிறது
- பிராயச்சித்தம்
- கழுகு
- கேரளத்தில் எங்கோ
சிறுகதைகள்
- இதழ்கள் (1959)
- ஜனனி (1957)
- பச்சைக் கனவு (1961)
- கங்கா (1962)
- அஞ்சலி (1963)
- அலைகள் (1964)
- தயா (1966)
- மீனோட்டம்
- உத்தராயணம்
- நேசம்
- புற்று
- துளசி
- என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
- அவள்
- த்வனி
- விளிம்பில்
- அலைகள்
- நான்
- சௌந்தர்ய
நினைவலைகள்
- சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
- பாற்கடல்
கட்டுரைகள்
- முற்றுப்பெறாத தேடல்
- உண்மையான தரிசனம்