ரா.பி. சேதுப்பிள்ளை
ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர், சொற்பொழிவாளர். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூலின் ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
ரா.பி. சேதுப்பிள்ளை (ராஜவல்லிபுரம். பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராஜவல்லிபுரத்தில் மார்ச் 2, 1896-ல் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு பதினோராவது குழந்தையாகப் பிறந்தார். உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராஜவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைக் கற்றார். தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை படிப்பை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். பின்னர் இளங்கலை சட்டம் படித்தார். உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுப்பிள்ளையின் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.
தனிவாழ்க்கை
இளங்கலை படிப்பை முடித்தவுடன் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பணியிலிருந்துகொண்டே சட்டப்படிப்பு முடித்த சேதுப்பிள்ளை 1923 முதல் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிறிது காலம் அரசியலில் ஈடுபட்டிருந்த சேதுப்பிள்ளை நெல்லையின் நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் விரிவுரையாளராக விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய புலவர்களின் தலைமையில் ஆறு ஆண்டுகள் (1930-1936) பணிபுரிந்தார். 1936 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். எஸ். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணியில் சேதுப்பிள்ளையும் பங்காற்றியுள்ளார். எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் சேதுப்பிள்ளை தமிழ்த்துறைத் தலைவராகி (1946-1951) பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார். மனைவி ஆழ்வார் ஜானகி.
இலக்கிய வாழ்க்கை
சேதுப்பிள்ளையின் முயற்சியினால் திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. ரா.பி. சேதுப்பிள்ளை பதினான்கு கட்டுரை நூல்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட 21 நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்துள்ளார். சேதுப்பிள்ளை சிறந்த மேடைப் பேச்சாளர். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பல தமிழக வானொலி நிலையங்களிலும் இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாகவும் அமைந்தவை. எனவே உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாகவே நூல்கள் இருக்கும்.
சேதுப்பிள்ளையின் முதல் கட்டுரை நூல் ’திருவள்ளுவர் நூல் நயம்’. சேதுப்பிள்ளை தனது ஆராய்ச்சி அனுபவங்களைக் கொண்டு எழுதிய உரைநடை நூலான "தமிழகம் ஊரும் பேரும்" ஒரு முக்கிய ஆக்கமாகும்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் மூன்றாண்டுகள் கம்பராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார். அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்க சொற்பொழிவாற்றினார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.
இலக்கிய அழகியல்
தூயதமிழை அழகிய முறையில் மேடையில் பேசுவதற்கும் பெருவாரியான மக்கள் விரும்பும்படி சொற்பொழிவை எளிமையாகக் கொண்டு சென்றவர்களில் ஒருவர் சேதுப்பிள்ளை. செய்யுளுக்கு என்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் ஆகியவற்றை உரைநடையிலும் கொண்டுவந்தவர். தருமபுர ஆதீனத்தால் சொல்லின் செல்வர் என்றும், சுத்தானந்த பாரதியால் ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்றும் போற்றப்பட்டார்.
சேதுப்பிள்ளையின் தமிழ்ப் பணிகளுக்காக சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கியது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது.
தமிழில் மறந்து விட்ட பிறசொற்களை விலக்குவது, தமிழின் தூய சொற்களை புழக்கத்திற்குக் கொண்டு வருவது, தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்குவது ஆகிய பணிகளின் முன்னோடி, வழிகாட்டியான மறைமலை அடிகளை பின்பற்றி பரிதிமாற் கலைஞர், ரா. பி. சேதுப்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார் போன்றவர்கள் செயல்பட்டார்கள். தமிழின் மேடையுரையின் முன்னோடியான ஞானியார் சுவாமிகள், பெரும்பேச்சாளர்களான திரு. வி. கல்யாணசுந்தரனார், மறைமலை அடிகள் போன்றவர்களின் நீட்சியே ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியவர்கள்[1].
ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் நூல் மலேசிய அரசாங்கத்தால் தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழி இலக்கணத்துறையில் ஒரு பாட நூலாக சேர்க்கப்பட்டிருந்தது (1990 - 1998).
சேதுப்பிள்ளையின் நூல்கள் 2009-ல் நாட்டுடமையாக்கப்பட்டன [2].
விருது
சாகித்ய அகாடமி (1955) - ‘தமிழின்பம்’ சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்
மறைவு
ரா.பி. சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961 -ல் தனது 65 வது வயதில் மறைந்தார்.
படைப்புகள்
உரைநடை நூல்கள்
- திருவள்ளுவர் நூல் நயம்
- தமிழகம் ஊரும் பேரும்
- சிலப்பதிகார நூல்நயம்
- தமிழ்நாட்டு நவமணிகள்
- வேலும் வில்லும்
- வழிவழி வள்ளுவர்
- தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
- செஞ்சொற் கவிக்கோவை
- கால்டுவெல் ஐயர் சரிதம்
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ஆற்றங்கரையினிலே (1961)
- வேலின் வெற்றி (1954)
- கடற்கரையினிலே (1950)
- தமிழின்பம் (1948)
- தமிழர் வீரம் (1947)
- கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (1946)
- தமிழக ஊரும் பேரும் (1946)
- தமிழ் விருந்து (1945)
- மேடைப் பேச்சு
பதிப்பித்த நூல்கள்
- திருக்குறள் எல்லீஸ் உரை
- பாரதியின் கவித்திரட்டு
- தமிழ் கவிதை களஞ்சியம்
குறிப்புகள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.