ரா.கணபதி
ரா.கணபதி (செப்டம்பர் 1, 1935 – பிப்ரவரி 20, 2012) தமிழில் இந்து பக்தி எழுத்துக்களை எழுதியவர். இதழாளர்.
பிறப்பு, கல்வி
ரா.கணபதி சிதம்பரத்தைச் சேர்ந்த வி.இராமச்சந்திர ஐயருக்கும் கடலூரைச்சேர்ந்த ஜெயலட்சுமிக்கும் மகனாக செப்டம்பர் 1, 1935-ல் பிறந்தார். தந்தை கணிதத்தில் ஹானர்ஸ் பட்டம்பெற்று பிரிட்டிஷ் அரசில் அதிகாரியாக பணியாற்றியவர்.
சென்னை இந்து சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை மாநில (பிரசிடென்சி) கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
மெயில் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி இருக்கிறார். பின்னர் கல்கி இதழின் உதவி ஆசிரியர் ஆனார். ராஜாஜியின் சுயராஜ்யா இதழிலும் பணிபுரிந்தார்.
இலக்கியவாழ்க்கை
ரா.கணபதி கல்கி இதழில் எழுதிய ஜயஜய சங்கர என்னும் நூல் இவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சத்ய சாய்பாபா, சுவாமி விவேகானந்தர், அன்னை(சாரதா தேவி) ரமண மகரிஷி யோகி ராம்சுரத்குமார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார். பிறர் மீது மதிப்பு வைத்திருந்த ரா.கணபதி சாய்பாபாவை தன் கடவுளாகவே எண்ணினார். சாய்பாபா விருப்பத்தின் பேரில்தான் காஞ்சிப் பெரியவரை சந்தித்து 'தெய்வத்தின் குரல்' எழுதினார். இவருடைய தனிப்பெரும் படைப்பு என ‘தெய்வத்தின் குரல்’ கருதப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவர் கல்கியில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் அருளுரைகளை தெய்வத்தின் குரல் என்ற பேரில் தொடராக வெளியிட்டார். பின்னர் அவற்றுடன் சந்திரசேகர சரஸ்வதியுடன் நிகழ்த்திய நீண்ட உரையாடல்களையும் தொகுத்து தெய்வத்தின் குரல் என்னும் பேரில் 1962 முதல் ஏழு தொகுதிகளாக வெளியிட்டார். பக்தி இலக்கிய எழுத்தாளராகவே வாழ்ந்தார். "கன்யா" என்கிற புனைபெயரில் கல்கி இதழில் எழுதியிருக்கிறார்.
நூல்கள்
தமிழ்
- தெய்வத்தின் குரல் (7 பாகங்கள்)
- ஜய ஜய சங்கர
- காமகோடி ராமகோடி
- காமாக்ஷி கடாக்ஷி
- அம்மா (சாரதாமணி தேவி வாழ்க்கை)
- காற்றினிலே வரும் கீதம் (பக்த மீராவின் வாழ்க்கை வரலாறு)
- அறிவுக்கனலே அருட்புனலே (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வும்ஸ்ரீவிவேகானந்தரின் வாழ்வும்)
- நவராத்திரி நாயகி (ஸ்ரீதுர்காதேவி மகிமை)
- அன்பு வேணுமா அன்பு
- சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு
- ஸ்ரீமாதா (ஸ்ரீலலிதா தேவியின் மகிமை)
- "ஜய ஹனுமான்!" (ஸ்ரீஆஞ்சேநேயர் பெருமை))
- இறைவன் அவதாரம் இருபத்தி நான்கு
- ரமண மணம் (இரு பாகங்கள்)
- மஹா பெரியவாள் விருந்து
- காஞ்சி முனிவர் - நினைவுக்கதம்பம்
- கருணைக் காஞ்சி கனகதாரை
- மைத்ரீம் பஜத!
- சங்கரர் என்ற சங்கீதம்
- சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்
- கருணைக் கடலில் சில அலைகள்
- ஸ்ரீகாஞ்சி முனிவர்
- தரிசனம்
- ஸ்வாமி (வித்யா ட்ரஸ்ட் பகுதி 1 - 2)
- லீலா நாடக சாயி
- தீராத விளையாட்டு சாயி
- அன்பு அறுபது
- அறிவு அறுபது
- அற்புதம் அறுபது
- ஸ்ரீசாயி 108 (சக ஆசிரியர்)
ஆங்கிலம்
- Baba: Satya Sai (Part 1 - 2)
- Avatar, Verily
உசாத்துணை
✅Finalised Page