under review

ரஸிகன்

From Tamil Wiki
Revision as of 14:50, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
ரஸிகன்

ரஸிகன் (ரசிகன்) (நா.ரகுநாதன்) (டிசம்பர் 22, 1893- அக்டோபர் 18, 1982) தமிழில் சிறுகதைகள் எழுதிய தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர்.ஆங்கில இதழாளர். தமிழ்ச்செவ்விலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சம்ஸ்கிருத அறிஞர். வால்மீகி ராமாயணத்தையும் மொழியாக்கம் செய்தவர்.

பிறப்பு,கல்வி

ரஸிகன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டம் என்னும் சிற்றூரில் நாராயணசுவாமி அய்யருக்கும் கௌரி அம்மாளுக்கும் மகனாக டிசம்பர் 22, 1893-அன்று பிறந்தார். இளமைக்கல்வியை விஷ்ணுபுரம் ஆரம்பப்பள்ளியிலும் பள்ளிக்கல்வியை கும்பகோணத்திலும் முடித்தார். கும்பகோணத்தில் எஃப்.ஏ வரை படித்துவிட்டு சென்னைக்கு வந்து பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்தார்.பின்னர் சட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ரஸிகன் சிறிதுகாலம் அரசுப்பணியில் இருந்தார். 1921 முதல் 1926 வரை டெய்லி எக்ஸ்பிரஸ் என்னும் ஆங்கில இதழின் துணையாசிரியராக பணியாற்றினார். 1926-முதல் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் உதவியாசிரியராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

ரஸிகன் ஆங்கிலத்தில் விக்னேஸ்வரா என்ற பேரில் கட்டுரைகளை எழுதினார். தமிழில் ரஸிகன் என்ற பேரில் கதைகளையும் நா.ரகுநாதன் என்ற பெயரில் கட்டுரைகளையும் எழுதினார். ரசிகனின் முதல் கதையான பலாச்சுளை அக்டோபர் 9, 1938 அன்று பாரதமணி என்னும் இதழில் வெளிவந்தது. 1957-ல் தி ஹிந்து நாளிதழில் இருந்து ஓய்வுபெற்றார். பெங்களூரில் மொழியாக்கம் செய்தபடி வாழ்ந்தார். 1962-ல் தன் பத்து சிறுகதைகளை தொகுத்து ரஸிகன் கதைகள் என்னும் முதல் தொகுதியை வெளியிட்டார். 1965-ல் ரஸிகன் நாடகங்கள் என்னும் நூல் வெளிவந்தது. 1976ல் பாகவதத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். 1978-ல் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் ஆறுபாடல்களை மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

இலக்கிய இடம்

ரஸிகன் 1942-ஆம் ஆண்டு அல்லையன்ஸ் கம்பெனியார் வெளியிட்ட கதைக்கோவைக்கு எழுதிய முன்னுரையில் தன் சமகாலப்படைப்பாளிகளை மிகுந்த விமர்சனக்கூர்மையுடன் அணுகியிருக்கிறார் என ஆய்வாளர் அ.சதீஷ் ரஸிகன் கதைகளுக்கு எழுதிய பதிப்புரையில் குறிப்பிடுகிறார். ரஸிகனின் கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு தஞ்சையின் கிராமிய வாழ்க்கையில் இருந்த உறவுச்சிக்கல்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் சொல்பவை. மிக எளிமையான நடையில் நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகளை வாழ்க்கைச்சித்திரங்கள் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். இலக்கியக்கதைகளுக்குரிய ஆழ்ந்து வளரும் தன்மை குறைவானவை. தஞ்சையைப் பின்னணியாகக்கொண்டு பின்னாளில் தி.ஜானகிராமன் போன்றவர்களால் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது இப்போதாமையை உணரமுடியும் "வளர்ச்சியின் பெயரால் தமிழ் உரைநடைக்குள் நுழைந்துவிட்ட பாசாங்கின் தடம் சிறிதுமற்ற மொழி ரஸிகனுடையது. வாசகனுடன் நேரடியாகப் பேசுகிற மொழி. கதைக்குள் நிகழ்வது அது நிகழ்வதற்குச் சற்று முன்னரே ஆசிரியருக்குத் தெரிந்திருப்பது போன்ற விவரிப்பு. இதன் காரணமாகவே செவ்வியல்தொனி ஏறிய கதைகள்" என்று யுவன் சந்திரசேகர் ரஸிகன் கதைகளின் தனித்தன்மையை மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • பாரதவித்யாப்ரவீண் பட்டம், 1982

இறப்பு

ரஸிகன் தனது 89-வது வயதில் அக்டோபர் 18, 1982-ல் பெங்களூரில் மறைந்தார்

நூல்கள்

  • ரஸிகன் சிறுகதைகள், 1962
  • ரஸிகன் நாடகங்கள், 1965
மொழியாக்கங்கள்
  • பாகவதம் ஆங்கிலம், 1976
  • Six Long poems From Sankam Tamil, 1978
  • வால்மீகி ராமாயணம், 1981

உசாத்துணை


✅Finalised Page