ய.மகாலிங்க சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 19:36, 19 June 2022 by ASN (talk | contribs)
ய.மகாலிங்க சாஸ்திரி (இளம் வயதுப் படம்).jpg

ய.மகாலிங்க சாஸ்திரி (ய.மஹாலிங்க சாஸ்திரி-ஜூலை 31, 1897-ஏப்ரல் 14,1967) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சம்ஸ்கிருத அறிஞர். முழுப் பெயர் யக்ஞசுவாமி மகாலிங்க சாஸ்திரி.

பிறப்பு, கல்வி

மகாலிங்க சாஸ்திரி, யக்ஞசுவாமி-சம்பூர்ணம்மாள் தம்பதியினருக்கு ஜூலை 31, 1897 அன்று மூத்த மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற நீலகண்ட தீக்ஷிர், அப்பய்ய தீக்ஷிதரின் பரம்பரையைச் சேர்ந்தவர் இவர். இவரது கொள்ளுத் தாத்தா மன்னார்குடி ராஜூ சாஸ்திரிகள், பிரிட்டிஷார் உள்பட சமஸ்தான மன்னர்கள் பலரால் மதிக்கப்பட்டவர். பிரிட்டிஷாரிடமிருந்து முதன் முதலில் மஹாமகோபாத்யாயா பட்டம் பெற்றவர். தந்தை யக்ஞ சுவாமி சம்ஸ்கிருத அறிஞர். இசையில் தேர்ந்தவர். தந்தை யக்ஞ சுவாமி நடத்தி வந்த பாடசாலையில் பயின்ற மகாலிங்க சாஸ்திரிக்கு படிக்கும்போதே 1913-ல் மரகதவல்லியுடன் திருமணம் நிகழ்ந்தது. 1933ல், சென்னை மாநிலக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் மகாலிங்க சாஸ்திரி. தொடர்ந்து பயின்று எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என மும்மொழிகளில் வல்லவராக இருந்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சில காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின் மதுரா காலேஜ் மற்றும் அண்ணாமலைப் பல்கலையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின் தருமபுரம் ஆதினத்தைச் சேர்ந்த ஓரியண்டல் கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார் மகாலிங்க சாஸ்திரி.. அங்கு தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் ஆகம சாஸ்திரத்தை மாணவர்களுக்குப் போதித்து வந்தார். தன்னுடைய மூன்று மகன்களையும் நான்கு மகள்களையும் உயர் கல்வி பயில வைத்தார்.

இலக்கிய முயற்சிகள்

1920-ல், விவேகபோதினி இதழ் மூலம் இவரது எழுத்துப் பயணம் தொடங்கியது. அவ்விதழில் ஜோதிடம், இசை பற்றிச் சில கட்டுரைகளை எழுதினார். அக்காலத்தின் புகழ் பெற்ற ஆங்கில இதழான ‘திரிவேணி’ ஆசிரியர் குழுவினருடன் ஏற்பட்ட நட்பால் அவ்விதழிலும் சில கட்டுரைகளை எழுதினார். கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், எழுத்தாளர் கி.சந்திரசேகரன் ஆகியோரின் ஊக்குவிப்பால் சிறுகதைள் எழுத ஆரம்பித்தார். 1942 ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் ‘மண்ணாங்கட்டி’ என்ற இவரது முதல் நகைச்சுவைப் படைப்பு வெளியானது. “ராஜூ என் நண்பன்” சுதேசமித்திரனில் 1945ல் வெளியான இவரது முதல் படைப்பு. தொடர்ந்து கலைமகள், பாரதமணி, சில்பஸ்ரீ, குமரிமலர் போன்றவற்றில் இவரது கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகின. ஹிந்து இதழிலும் சில மதிப்புரைகளை எழுதி வந்தார். மதுரை புஷ்பவனம், பல்லவி சோமு பாகவதர் போன்ற அக்காலத்து இசை மேதைகள் பற்றி பாரதமணி. சுதேசமித்திரன் இதழ்களில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.


இசையில் தேர்ந்தவர். புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்தவர். ஜோதிடமும் நன்கு அறிந்தவர். பி.வி. ராமனின் ஜோதிட இதழில் ஜோதிடம் குறித்து நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். இவரது நகைச்சுவைக் கதைகள் தொகுக்கப்பட்டு ‘மாப்பிள்ளை ஆல்பம்’ என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பல சம்ஸ்கிருத நூல்களை தமிழில் மொழிபெயர்த்ததுடன் ஔவையின் ‘வாக்குண்டாம்’, ‘நல்வழி’ போன்றவற்றை சம்ஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த், செஸ்டர்ஃபீல்ட், மற்றும் ஷேக்ஸ்பியரின் கவிதை மற்றும் பாடல்களை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார். சம்ஸ்கிருதம் பயிலும் மாணவர்களுகுப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். கா.சி.வேங்கடரமணியின் ‘A day with Sambhu' ஆங்கில நூலை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சம்ஸ்கிருதப் படைப்புகளை, கவிதைகளை ஏ.பி. கெய்த் (A.B. Keith), ஈ.ஜே. ராப்ஸன் (E.J. Rapson), எல்.டி.பர்னெட் (L.D.Barnet), எஃப் எட்கெர்டன் F.Edgerton உள்ளிட்டப் பல வெளிநாட்டுப் படைப்பாளிகள் பாராட்டியுள்ளனர்.


சிறுவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார். தருமபுரம் ஆதினம் சார்பாக வெளிவந்த ‘ஞானசம்பந்தம்’ இதழிலும் நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ’ஆர்ய தர்மம்’ இதழிலும் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. ஓரியன்ட் ரிசர்ச் ஜர்னல், தமிழுலகு, த்ரிவேணி, நவயுவன், தினமணி, ரஸிகன், உமா, அமுதசுரபி என இவர் எழுதியுள்ள இதழ்களின் பட்டியல் நீளமானது. வானொலியிலும் உரையாற்றியுள்ளார். கவிதை, காவியம், நாடகம், தத்துவ நூல்கள், மொழிபெயர்ப்பு என சம்ஸ்கிருதத்தில் சுமார் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.


திருவாலங்காட்டில் ஆச்ரமம் ஒன்றை நிறுவி அதன் மூலம் சம்ஸ்கிருத இலக்கியங்களை அச்சிட்டு வந்தார். இசை ஞானம் மிக்க இவர் பல கிருதிகளை, துதிகளை எழுதியுள்ளார்.

விருதுகள்

‘கவி சர்வ பௌமா’ பட்டம் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களால் வழங்கப்பட்டது.

சம்ஸ்கிருத அகாடமி ‘கவி சேகரா’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

சுவாமி சிவானந்தர் இவருக்கு ‘ஞான பாஸ்கரா’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

இவரது நூல்கள்

ராஜு சாஸ்திரிகளின் மகிமை (வாழ்க்கை வரலாறு)

மாப்பிள்ளைத் தோழன் (நாவல்)

நாமொன்று நினைக்க (நாவல்)

மாப்பிள்ளை ஆல்பம் (சிறுகதைத் தொகுப்பு)

சிறுகதைகள்

மண்ணாங்கட்டி

ராஜூ என் நண்பன்

காபி வேண்டாம்

இது ஒப்பந்தக் கல்யாணம் அல்ல

நாகுவின் நாட்டுப்பெண்

தலை தீபாவளி

முத்துவையரின் பங்களா

பானை பிடித்தவள்

ராஜத்தின் கவுன்

க்ளாஸ்மேட் செல்லப்பா

கேப்டன் காசிநாதன்

சீதாவின் சுயம்வரம்

உன் முகத்தில் விழித்தேன்

ஜோஸ்யம் மற்றும் பல

கட்டுரைகள்

பல்லவி சோமு பாகவதர்

மதுரை புஷ்பவனம் ஐயர்

மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர்

வேதாந்த தீபாவளி

வேதாந்த சங்கீதம்

விநாயகரும் நகைச்சுவையும்

சிரஞ்சீவிக் கவிராயர்

சந்திராஷ்டமம்

மகாமகம்

ஆகாயத்தில் அத்புதம்

தை பிறந்தது

ஆர்ய நவரத்ன மாலிகா

அவள் நாடகம்

பக்தியின் பெருமை மற்றும் பல

சிறார் படைப்புகள்

மண்டூக நாயகி

வீண் அபவாதம்

சாயம் வெளுத்தது

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

வடமொழி நாடகங்கள்

ஆதிகாவ்யோதயம்

உத்காத்ருதசானனம்

ப்ரதிராஜசூயம்

ச்ருங்கார நாரதீயம்

கவிதை நூல்கள்

வனலதா

கிங்கிணிமாலை

ப்ரமர சந்தேசம்

தேசிகேந்த்ரஸ்தவாஞ்சலி மற்றும் பல


தி.ஜானகிராமன், ஹிந்து என் ரகுநாத ஐயர் (ரஸிகன்) கா.சி.வேங்கடரமணி, சர்.சி.பி.ராமசாமி ஐயர் உள்ளிட்ட பலராலும் மதிக்கப்பட்ட மகாலிங்க சாஸ்திரி, காஞ்சி மகாப் பெரியவரான சந்திரசேகரேந்திர ஸ்வாமி, ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் போன்றோரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார்.

மறைவு

ஏப்ரல் 14,1967ல், வீட்டில் உறவுகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே காலமானார்.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் தந்தவர். நகைச்சுவை அம்சமுள்ள பல கதைகளைப் படைத்தவர். இசைக் கலைஞர்கள் குறித்த இவரது கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தன. சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்க பல படைப்புகளைத் தந்தவராக இவர் நா.ரகுநாதன், தி.ஜானகிராமன் உள்ளிட்டோரால் மதிக்கப்படுகிறார்.


உசாத்துணை


https://archive.org/details/SriShantiVilasa