under review

யாளி நகர் (தஞ்சாவூர்)

From Tamil Wiki
Revision as of 09:33, 10 September 2022 by Madhusaml (talk | contribs) (moved to final)
யாளிநகர் (வீரநரசிம்ம பெருமாள்) கோவில் மூலவர்

யாளிநகர் கோவில்: (பொயு 8 ஆம் நூற்றாண்டு) (மேலசிங்கப்பெருமாள் கோயில்) தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளித் தோட்டம் என்னும் இடத்தில் இருந்த ஆலயம். பின்னாளில் வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்ந்தது. ஸ்ரீமேலசிங்கப்பெருமாள் திருக்கோவில் என்றும் இதனை அழைக்கின்றனர். திருமங்கையாழ்வாரால் பாட்டப்பட்ட கோவில் இது.

இடம்

யாளிநகர் திருக்கோவில் மேலவெளித் தோட்டத்தில் இருந்தது. பின்னாளில் வெண்ணாற்றங்கரைக்கு மாற்றப்பட்டது. சிங்கப்பெருமாள் குளமும், சூழலும் மேலவெளித் தோட்டத்தில் கோவில் இருந்ததை உறுதி செய்கின்றன. தஞ்சை நகரின் கழக்கு வாசலில் 'கீழச்சிங்கப்பெருமாள்’ என்னும் கோவில் உள்ளதால் வெண்ணாற்றங்கரையில் உள்ள கோவிலை அதன் பழைய இடத்தை சுட்டும் விதமாக மேலசிங்கப்பெருமாள் என்றழைக்கின்றனர்.

மேலவெளித் தோட்டம் முன்பு சோழர் அரண்மனை இருந்ததாகக் கருதப்படும் இடத்திற்கு மேற்காக உள்ளது.

காலம்

சோழர் காலத்திற்கு முந்தைய திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இக்கோவில் பொ.யு. பதினாறாம் நூற்றாண்டில் வெண்ணாற்றங்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தஞ்சை நாயக்கர் கால ஆழிக்கல் ஒன்று மேற்காகப் பூதலூர் சாலையில் சக்கரசாமம் என்னும் ஊரில் கிடைத்துள்ளது. இதில் பொ.யு. 1566-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பதினாறாம் நாளில் செவ்வப்ப நாயக்கர் மகன் அச்சுதப்ப நாயக்கர் சிங்கப்பெருமாள் கோவில் திருப்பணிக்கு புதவூர் என்னும் கிராமத்தினை வழங்கிய செய்தி குறிப்பு உள்ளது. அக்காலகட்டத்தில் தான் மூன்று வைணவத் திருக்கோவில்கள் (மணிக்குன்றம், நீலமேகப் பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில்) வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளன.

அமைப்பு

தஞ்சை யாளிநகர் கோவிலில் உள்ள வீரநரசிம்ம பெருமாள் கோவிலின் உள்ளே கருவறை வீர நரசிம்மர், ஆழியுள் அமர்ந்த நரசிம்மர், வைகுண்ட நரசிம்மர், கல்யாண நரசிம்மர், விதானத்து வீரநரசிம்மர் என ஐந்து நரசிம்மர் உள்ளனர்.

கருவறை வீர நரசிம்மர்

கருவறை வீர நரசிம்மர் யாளிநகர் கோவிலின் மூலஸ்தானத்தில் இருப்பவர். தஞ்சகாசூரன் இறுதி விருப்பமாக கேட்டுக் கொண்டதன் பேரில் தஞ்சை யாளி நகரில் கருவறை வீர நரசிம்மர் அமர்ந்துள்ளார் எனப் புராணக்கதை சொல்கிறது. இக்காரணத்தினால் யாளி நகர் கோவிலுக்கு மோட்ஷ ஸ்தலம் என்னும் பெயர் உண்டு.

ஆழியுள் அமர்ந்த நரசிம்மர்

விண்ணாற்றங்கரையில் உள்ள நரசிம்மர் கோவில்களுள் முக்கியமானது ஆழியுள் அமர்ந்த நரசிம்மர். இங்குள்ள வீர நரசிம்மர் சக்கரத்திலுனுள் அமர்ந்துள்ளார். இவர் அருகே பிரகலாதனும், இரணிய கசிபும் நின்ற நிலையில் உள்ளனர். இத்தெய்வத்தையே திருமங்கை ஆழ்வார், "தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்நெஞ்சம்" எனப் பாடுகிறார்.

வைகுந்த நரசிம்மர்

சிங்கப் பெருமான் கோவிலின் கொடிமரத்தில் உபய நாச்சிமார்கள் இருமருங்கிலும் இருக்க வைகுந்த நரசிம்மர் வலது காலை தொங்கவிட்டப்படி காட்சி தருகிறார்.

கல்யாண நரசிம்மர்

சிங்க பெருமான் கோவிலின் திருச்சுற்றில் உள்ள மூலவர் விமானத்தின் (வேத சுந்தர விமானத்தின்) தென்மேற்கு மூலையில் கல்யாண நரசிம்மர் சிலை உள்ளது. லட்சுமியுடன் தென் திசை நோக்கி அமர்ந்த வண்ணத்தில் கல்யாண நரசிம்மர் உள்ளார்.

விதானத்து வீரநரசிம்மர்

சிங்க பெருமான் கோவிலின் கருவறைக்கு வெளிப்புறம் வடக்குச் சுவரில் கோமுகத்திற்கு மேலும் ஆண்டாள் சன்னதி வாயிலுக்கு தெற்கிலும் வடதிசை நோக்கிய வண்ணம் விதானத்து வீரநரசிம்மர் அமர்ந்துள்ளார்.

திருமங்கை ஆழ்வார்

என்செய் கேனடி யேனுரை யீர்இதற்
கென்று மென்மந்த் தேயிருக் கும்புகழ்
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்நெஞ்சம்
அன்றிடந்தவ னைத்தழ லேபுரை
மின்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்திமை யோர்தொழும்
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page