யட்ச கானம்
யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிவந்த ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில் யட்ச கான நிகழ்த்துக் கலைகள் அதிகம் நடத்தப்படுகின்றன. தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாகக் கருதப்படுகிறது
தோற்றம்
கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த ‘யட்சர்’ என்ற இனத்தவர், தங்கள் தலைவனாகிய குபேரனின் செல்வமானது நிலைத்துப் பெருகவும், மக்கள் சந்ததி வளரவும், செல்வம் பெருகி வாழவும்வேண்டித் திருமகளாகிய இலக்குமியைப் புகழ்ந்து பாடி வணங்கும் பாடல் மரபே யட்ச கானம் எனப்பட்டது.
வளர்ச்சி
மக்கள் மரபும் செல்வமும் தழைக்க யட்ச தேவதைகளைப் புகழ்ந்து பாடும் பாடலாகத் தோன்றிய யட்ச கானம் நாளடைவில் கோயில்களில் நடைபெறும் காலை, மாலை பூஜை நேரங்களிலும், திருவிழாக் காலங்களிலும் இசையும் நாட்டியமும் இணைந்து உருவாக்கப்பட்டு நாடகமாக நடிக்கப்பெற்றது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நிகழ்த்துக்கலையான தெருக்கூத்து, ஆந்திர நாட்டின் குச்சிப்புடி, வீதி நாடகம், கேரள நாட்டின் பயலாட்டா ஆகியவற்றைப் போன்ற ஒரு நிகழ்த்துக் கலையாக யட்ச கான நாடகம் வளர்ச்சி பெற்றது.
யட்ச கான நூல்கள்
பொயு 17, 18-ம் நூற்றாண்டுகளில் கன்னட மொழியில் 300-க்கும் மேற்பட்ட யட்சகான நூல்களும், தெலுங்கு மொழியில் 500-க்கும் மேற்பட்ட யட்சகான நூல்களும் தோன்றின.
தமிழில் யட்ச கானம்
தமிழ்நாட்டில் தஞ்சைப் பகுதியிலும், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றை அடுத்துள்ள தமிழ்ப் பகுதிகளிலும் யட்ச கான நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாளடைவில் அந்நாடகப் பாடல்களிலும், உரைநடைகளிலும் தமிழ்ச்சொற்கள் கலந்தன. தொடர்ந்து தமிழில் சில யட்ச கான நூல்கள் தோன்றின. தியாகராஜ சுவாமிகள் இயற்றிய 'நௌக சரித்திரம்', 'பிரகலாத பக்த விஜயம்' போன்ற யட்ச கான நாடகங்கள் தமிழில் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து ஒய்சாள மன்னரான வல்லாளராசன் வரலாறு, ‘வல்லாளராசன் யட்சகானம்’ என்ற தலைப்பில் உருவானது. நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார் வரலாறு சிறுத்தொண்டர் யட்ச கானமாக வெளிவந்தது.
யட்ச கான நாடக அமைப்பு
யட்ச கான நாடகத்தில் முதலில் கணபதி வழிபாடு, விதூஷகன் வருகையைத் தொடர்ந்து நாட்டிய நாடகம் தொடங்கும். பரதரின் நாட்டிய சாத்திரத்தி்ல் கூறப்படும் பூர்வாங்க அவிநயம் நிகழும். தொடர்ந்து கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாடகம் தொடங்கும். உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு காலடி அசைவுகளும் பொருளுக்கேற்ற அவிநய முத்திரைகளும் சிறப்பான இசையமைப்பும் கொண்ட நாட்டிய நாடகமாக யட்ச கானம் அமையும்.
தமிழில் யட்ச கான நூல்கள்
தமிழில் கீழ்க்காணும் யட்ச கான நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
- வல்லாள ராசன் யட்ச கானம்
- சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம்
- சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம்
- நரசிங்க விஜய யட்ச கானம்
- நீலி யட்ச கானம்
- சாரங்கதரன் யட்ச கானம்
- தேரூர்ந்த சோழன் யட்ச கானம்
நீலி யட்ச கானம், சாரங்கதரன் யட்ச கானம், தேரூர்ந்த யட்ச கானம் ஆகிய மூன்று யட்ச கான நூல்களும் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தால், ஜி.எஸ். பாலகிருஷ்ணன் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயரக்கப்பட்டுள்ளன.
உசாத்துணை
- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்
- யட்ச கான வேண்டுதல்: தினமலர் இதழ் கட்டுரை
- யக்ஷகானம்: குருகு இதழ் கட்டுரை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.