being created

ம.இலெ. தங்கப்பா

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ம.இலெ. தங்கப்பா (1934 – 2018)

ம.இலெ. தங்கப்பா (M.L. Thangappa, 1934 – 2018) எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர், தனித்தமிழ்வாதி, மரபிலக்கிய அறிஞர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர். இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.  

பிறப்பு, கல்வி

மதனபாண்டியன் இலெனின் தங்கப்பா என்னும் ம.லெ. தங்கப்பா மார்ச் 8, 1934ல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன், ம. இரத்தினமணி இணையரின் மகனாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பம். தந்தை தமிழாசிரியர். இளவயதிலேயே தந்தையிடமிருந்து கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். விருதுநகர், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், கோபாலசமுத்திரம் ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பை முடித்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளியலில் இளங்கலை முடித்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தனிவாழ்க்கை

ஆசிரியர் பயிற்சி முடித்து தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் (1954 -1959). பின்னர் புதுச்சேரியில் புராணசிங்கம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் (1959-68) பணியாற்றினார். 1968 முதல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் இருபது வருடங்களும், பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஐந்து வருடங்களும் தமிழ் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 1994ல் ஓய்வு பெற்றார். புதுச்சேரியில் வசித்து வந்தார். வீட்டுக்கு வானகம் என்று பெயர். மனைவி விசாலாட்சி, பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். நல்லாசிரியர் விருது பெற்ற விசாலாட்சி பணி ஒய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். மகன்கள் செங்கதிர், விண்மீன். மகள்கள் இளம்பிறை, மின்னல். தங்கப்பா புதுவை இயற்கைக் கழகத்தைத் தோற்றுவித்தவர். ஞாயிறுதோறும் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் உள்ள ஊசுட்டேரிக்கு மாணவர்களை அழைத்துச்சென்று பறவைகளையும், தாவரங்களையும் அறிமுகப்படுத்துவார். ’தென்மொழி’ இதழின் (1962-1967) உறுப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ம.இலெ. தங்கப்பா தனது பதினேழாவது வயதில் பாடல் புனையத் தொடங்கினார். முதலில் தங்கப்பாவின் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டது த. கோவேந்தனின் ’வானம்பாடி’ இதழ். கல்லூரியில் பாடமாக இருந்த ஆங்கிலத்தில் மத்தேயு ஆர்னால்டு எழுதிய பாடலான ‘The forsaken Merman’ என்பதை “கைவிடப்பட்ட கடல் மகன்’ என தமிழுக்கு மொழிபெயர்த்தார். இது தங்கப்பா செய்த முதல் மொழிபெயர்ப்பு பாடல். பாடல்களும் மொழிபெயர்ப்புப் பாடல்களும் தொடர்ந்து ’வானம்பாடி’ இதழில் வெளிவந்தன. முழுவதும் தனித்தமிழில் துரை. மாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனாரின் ’தென்மொழி’ இதழில் எழுதினார். திருமுருகனாரின் ’தெளிதமிழ்’ இதழின் துணையாசிரியராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார்.

பாவேந்தரின் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கினார்ர். பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்களில் வெளிவந்தன. P.O.D. (Print on Demand) என்ற புத்தகம் அச்சிடும் முறைக்கு கேட்புப் புத்தகம் என்ற சொல்லை வழங்கியவர் தங்கப்பா.

இலக்கிய பங்களிப்பு

தமிழின் செவ்வியல் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தங்கப்பாவின் படைப்புகள் Caravan, Modern Rationalist, Youth age, New Times, Observer போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. முத்தொள்ளாயிர மொழிபெயர்ப்பான ‘Red lilies and frightened birds', தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்புகளான ‘Love Stands Alone' (குறுந்தொகைப் பாடல்கள்) ‘Hues and Harmonies from an ancient Land'  ஆகியவைக் குறிப்பிடத்தகுந்தவை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். டெல்லி சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளராகவும், புதுவை அரசின் தமிழ் வளர்ச்சிக்குழு தலைவராகவும், இயற்கை கழகத் தலைவராகவும், மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினராகவும் பங்காற்றியுள்ளார்.

புதுச்சேரி அரசு ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றினாலும் அதைக் கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி அரசு வழங்கிய தமிழ்மாமணி விருதை திருப்பி அளித்தார்.

மறைவு

ம.இலெ. தங்கப்பா உடல்நலக்குறைவால் மே 31, 2018 அன்று தன் 84வது வயதில் புதுச்சேரியில் மறைந்தார். கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் தங்கப்பாவின் உடல் ஜவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (JIPMER-ஜிப்மர்) மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

இலக்கிய அழகியல்

தமிழ் மரபிலக்கிய ஆளுமைகளில் ஒருவர். புதுக்கவிதையின் எழுச்சியிலும் தொடர்ந்து மரபின் சந்தத்திற்கும் அணிகளுக்கும் ஆதரவாக நிலைகொண்டவர். மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். ம.இலெ.தங்கப்பா இயற்றிய பாடல்கள் மரபான முறையில் அமைந்திருந்தாலும் கவிதைக்கான உள எழுச்சியைவிட சந்தத்தாலும் சொல்லழகாலும் உருவானவை. ம.இலெ.தங்கப்பா எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இறுதிக்காலத்தில் அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என நினைப்பதாக ஜெயமோகன் [1] சொல்கிறார். பாரதியாரின் இரு கவிதைப் போக்குகளில் ஒன்றான மரபுப் பாடல் பாரதிதாசன் வழியாக ம.இலெ.தங்கப்பா, ஆ.பழனி வரை நீளக்கூடிய மரபுக்கவிதை இயக்கம்.

விருதுகள்

1. கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசு: பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்கு

2. அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசு - 1972: அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு

3. தமிழ் நாடு அரசின் பாவேந்தர் விருது - 1991

4. பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது - 1998

5. தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல் - 2002

சிற்பி இலக்கிய விருது - 2007

6. குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது - 2010: ‘சோளக் கொல்லை பொம்மை’ நூலுக்காக

7. மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது - 2012: தமிழ்ச் சங்க இலக்கியக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘“Love stands Alone”

நூல் பட்டியல்

கட்டுரை

கட்டுரை நூல்கள்

  • பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்,1987
  • நுண்மையை நோக்கி,1989
  • எது வாழ்க்கை,1994
  • திருக்குறளும் வாழ்வியலும்,1995
  • வாழ்க்கை அறிவியல்,1998
  • பாட்டு வாழ்க்கை,1994,1999.
  • மொழிமானம்,2000
  • கொடுத்தலே வாழ்க்கை,2001

தமிழ் மொழிபெயர்ப்பு

  • புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம் - 1959
  • மலைநாட்டு மலர்கள் - 1975 (இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)
  • மண்ணின் கனிகள்,1996
  • கனவுகள்,2002(ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)

ஆங்கில மொழிபெயர்ப்பு

  • Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry - 2010 (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு)
  • Songs of Grace in St.Ramalingam - 1985 (வள்ளலாரின் திருவருட்பா)
  • Selected Poems of Bharathidasan - 1992 (பாரதிதாசன் பாடல்கள்)
  • House of Darkness - 1996 (இருண்ட வீடு)
  • Hues and Hormonies From Anciend Land, Part II (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு)
  • Tamil Thoughts - (தாகூர் பாடல்கள், பாம்பாட்டிச்சித்தர், பட்டினத்தார், தாயுமானவர், சிவவாக்கியார், நாலடியார், விவேகசிந்தாமணி போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்)

ஆங்கில நூல்கள்

  • This Question of Medium (Essay) - 1996
  • Meadow Flowers (Poems) - 1984

பிற நூல்கள்

  • பாடுகிறேன்,1973
  • தேடுகிறேன்,1980
  • ஆந்தைப்பாட்டு,1983
  • அடிச்சுவடுகள்,1983
  • வேப்பங்கனிகள்,1985
  • கள்ளும் மொந்தையும்,1987
  • இயற்கையாற்றுப்படை,1989
  • மயக்குறுமக்கள்,1990
  • அகமும் புறமும்,1991
  • பின்னிருந்து ஒரு குரல்,1992
  • பனிப்பாறை நுனிகள்,1998
  • புயற்பாட்டு,2000
  • பாட்டெனும் வாள் எடுப்பாய்,2004

குழந்தைகளுக்கான நூல்கள்

  • எங்கள் வீட்டுச்சேய்கள்,1973,2003
  • மழலைப்பூக்கள்,1983
  • இயற்கை விருந்து,1991
  • வாழ்க்கை மேற் காதல்
  • மரபுப்பாடல் செத்துவிட்டதா?
  • இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)
  • நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)
  • சோளக்கொல்லைப் பொம்மை
  • வாழ்வியல் அறிவீர்
தமிழினி வெளியீடு

நூல் தொகுப்பு

உயிர்ப்பின் அதிர்வுகள்-தங்கப்பா பாடல்கள் - 2006- ( பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்) - தமிழினி

உசாத்துணை

நாஞ்சில்நாடனுக்கு ம.இலெ. தங்கப்பா எழுதிய கடிதம்

தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா - அந்திமழை

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12726