being created

மோகனாங்கி

From Tamil Wiki
Revision as of 17:19, 25 January 2022 by Madhusaml (talk | contribs)
மோகனாங்கி

மோகனாங்கி ( 1895) தமிழின் தொடக்க கால நாவல்களில் ஒன்று. தி.த.சரவணமுத்துப் பிள்ளை எழுதியது. உண்மை வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல். தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என இதை இலக்கிய விமர்சகர்கள் கூறுவதுண்டு. தி.த.சரவணமுத்துப்பிள்ளை இலங்கையைச் சேர்ந்தவர். மோகனாங்கி தஞ்சை நாயக்கர் வரலாற்றுப்பின்னணியில் அமைந்த நாவல்

எழுத்து, பிரசுரம்

தி.த.சரவணமுத்துப்பிள்ளையால் 1890ல் எழுதப்பட்ட இந்நாவல் 1895ல் வெளியிடப்பட்டது. சரவணமுத்துப்பிள்ளை தமிழநாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் அன்றிருந்த கீழைத்தேச சுவடிகள் காப்பகத்தில் ஆவணப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது பழைய ஆவணங்களை படிக்கையில் இக்கதையை கண்டெடுத்து உண்மைச்செய்திகளுடன் நாவலாக ஆக்கினார்.சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியானது இந்த நூல்.

மோகனாங்கியின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பான ‘சொக்கநாயக்கர்’ நூலை தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் மறைவின் பின்னர் அவரது மூத்த சகோதரர் தி.த.கனகசுந்தரம் பிள்ளை பதிப்பித்தார்.இந்தச் சுருக்கப் பதிப்பை, சென்னை எம். ஆதி அன்ட் கம்பனியார் பிரசுரித்தனர்.இந்தச் சுருக்கப் பதிப்பில் தலைப்பு ‘சொக்கநாத நாயக்கர்’ என்று கனகசுந்தரம் பிள்ளையால் மாற்றப்பட்டது. (கனகசுந்தரம் பிள்ளை பிறமொழிப் புலமையும் தமிழறிவும் மிகுந்தவர். பி.ஏ.பட்டதாரி. தமிழ் நாடு சென்று சென்னை பச்கையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் நிகழ்ந்தவர். கம்பராமாயணம் பாலகாண்டத்துக்கு அரும்பதவுரை செய்ததோடு, குமாரசாமிப் புலவருடன் கூடி நம்பி அகப்பொருளுக்கு உரை எழுதி வெளியிட்டவர்.)

மோகனாங்கி 2018 ல் திருகோணமலை இந்துக்கல்லூரி சம்பந்தன் மண்டபத்தில் 123 ஆண்டுகளின் பின்னால் முனைவர் க.சரவணபவன், ச.சத்யதேவன், மு.மயூரன் ஆகியோரை இணைப்பதிப்பாசிரியாராக் கொண்டு திருகோணமலை வெளியீட்டாளர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

கதைச்சுருக்கம்

மோகனாங்கி மறுபிரசுரம் இலங்கை

பதினேழாம்நூற்றாண்டின் இடைக்காலத்தில் திருச்சியில் இருந்து ஆட்சி செய்தவர் சொக்கநாத நாயக்கர். தஞ்சையை ஆட்சி செய்தவர் விஜயராகவ நாயக்கர். விஜயராகவ நாயக்கரின் மகள் மோகனாங்கி. அவள் மேல் காதல்கொண்ட சொக்கநாத நாயக்கர் மாறுவேடத்தில் சென்று மோகனாங்கியிடம் காதலுறவு கொள்கிறார். முறைப்படி பெண்கேட்டு தூதனுப்புகிறார். ஆனால் மோகனாங்கியின் இரண்டாவது மனைவியின் தம்பி அழகிரி நாயக்கர் அவளை மணந்து அரசை கைப்பற்ற எண்ணுகிறார். சமஸ்தான புரோகிதர் ஒருவரின் உதவியுடன் தூதுசென்ற அமைச்சரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார். சொக்கநாத நாயக்கர் தஞ்சை மேல் படையெடுத்தார். அந்தப்போரில் தஞ்சை வீழ்ந்தது. விஜயராகவ நாயக்கர் களத்தில் கொல்லப்பட்டார்.அரண்மனை தகர்க்கப்பட பெண்கள் தீப்பாய்ந்து மறைந்தனர்.

விஜயராகவ நாயக்கரிடம் மோகனாங்கி தனக்கும் சொக்கநாத நாயக்கருமான உறவை எடுத்துச்சொல்லி ஏற்கனவே களவுமணம் நிகழ்ந்துவிட்டதை கூறியபின்னரும் அவர் ஏற்கவில்லை. ஆகவே அவள் ரகசியமாக வெளியேறிவிட்டிருந்தாள். தஞ்சை வீழ்ந்தபின் அவள் சொக்கநாத நாயக்கரை மணந்து திருச்சியில் அரசியாக ஆகிறாள்.

வரலாற்றுப்பின்புலம்

இந்தக்கதையில் உள்ள நிகழ்வுகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டவை. மோகனாங்கிதான் பின்னர் ராணி மங்கம்மாள் ஆனாள் என்று ஆய்வாளர் சே.ப.நரசிம்மலு நாயிடு சொல்கிறார். ஆனால் அது சரியான செய்தி அல்ல. சொக்கநாத நாயக்கர் பொயு 1659 முதல் 1682 வரை திருச்சியை தலைநகராகக்கொண்டு மதுரை நாயக்கர் நாட்டை ஆட்சி செய்தவர். விஜயராகவ நாயக்கர் பொயு.1633 முதல் 1673 வரை தஞ்சையை ஆட்சி செய்தவர். இந்தப்போர் 1673ல் நடைபெற்றது. விஜயராகவ நாயக்கர் 32க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றினார்.பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரகலாத நாடகம் இவர் எழுதியது எனப்படுகிறது. இந்நாவலில் அழகிரி என்று சொல்லப்படுபவர் உண்மையில் சொக்கநாத நாயக்கரின் சிற்றன்னை மகன். விஜயராகவ நாயக்கருக்குப்பின் அவரே தஞ்சைக்கு சிற்றரசர் ஆக சொக்கநாதரால் நியமிக்கப்பட்டார். சரவணமுத்துப்பிள்ளை இப்பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.

நடை

இந்நாவல் வரலாற்று நாவலானாலும் வழக்குத்தமிழில் உரையாடல்கள் அமைந்துள்ளன “என்னப்பா ராமசாமி, தஞ்சாவூரில் விசேஷமென்ன?” “என்ன, அப்படி விசேஷமொன்றுமில்லை” என்பது போன்ற மொழிநடை உள்ளது. “இவ்விதமாக ஓரிரவு திருச்சினாப்பள்ளியிலே ஒரு வீட்டில் வெளித்திண்ணையிலிருந்து இருவர் பேசிக்கொண்டிருந்தனர். முதலிலே பேசினவர் ஏறக்குறைய முப்பத்தைந்து நாற்பது வயதுள்ளவர்” என விவரணை செல்கிறது

இலக்கிய இடம்

சிட்டி-சிவபாத சுந்தரம் காலக்கணிப்பின்படி தமிழ் நாவல்களின் வரிசையில் மோகனாங்கி ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்துக்கு முந்தையது. தமிழ்நாவல்களின் காலவரிசைப்படி அவற்றை அட்டவணையிட்ட தொடக்ககால ஆய்வாளர்கள் இந்நாவலை வரலாற்று ஆவணமாக கருதிவிட்டனர், நாவல் என கொள்ளவில்லை. ஆகவே கமலாம்பாள் சரித்திரம் மூன்றாவது நாவலாக கருதப்படுகிறது. பிரதாபமுதலியார் சரித்திரம் ( 1879) அசன்பே சரித்திரம் (1885) சுகுணசுந்தரி (1887)பிரேமகலாவத்யம் ( 1893) மோகனாங்கி ( 1895)கமலாம்பாள் சரித்திரம் (1896) பத்மாவதி சரித்திரம் (1898 ) என வகைப்படுத்துவதே சரி என சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறார்கள். இந்நாவல் பெரும்பாலான ஆரம்பகால இலக்கிய வரலாற்றாசிரியர்களின் கண்களுக்குப் படவே இல்லை.

மோகனாங்கிக்கு முன்பு வெளிவந்த அசன்பே சரித்திரம், சுகுணசுந்தரி ஆகியவை வரலாற்றை வெறுமே அரசகுடியினரின் பின்னணி என்னும் அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். வரலாற்றுச் செய்திகளை புனைவாக ஆக்கிய முதல் நாவல் மோகனாங்கிதான்.'தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியுள்ளார்’ என்று கமில் ஸ்வலபிள் (Kamil Zvelebil ) The First Six Novels in Tamil என்னும் கட்டுரையில் சொல்கிறார்.

உசாத்துணை

தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம்- கிறிஸ்தவ இலக்கிய சங்கம்

http://sathiyathevan.blogspot.com/2019/11/blog-post.html

https://archive.is/PJN8Q

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராஜன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.