மு. முத்துமாணிக்கம்

From Tamil Wiki
Revision as of 19:04, 30 May 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் மு. முத்துமாணிக்கம்

மு. முத்துமாணிக்கம் (பாத்தூறல் முத்துமாணிக்கம்; பாவலர் முத்துமாணிக்கம்; மு.மாணிக்க வேளாளர்) (செப்டம்பர் 19, 1928 - ஏப்ரல் 13, 2023) கவிஞர். தமிழகத்தில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்தார். மரபுக் கவிதைகளில் தேர்ந்தவர். பக்திப் பாடல்கள் பலவற்றை இயற்றினார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு.மாணிக்க வேளாளர் என்னும் இயற்பெயர் கொண்ட மு. முத்துமாணிக்கம், செப்டம்பர் 19, 1928 அன்று, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில், முத்துக்கருப்பன் - மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பெற்றோர் இறப்பால் மேகல்வி கற்கவில்லை.

மு. முத்துமாணிக்கம் (இள வயதுப் படம்)

தனி வாழ்க்கை

முத்துமாணிக்கம், 1953-ல், பணிநிமித்தம் சிங்கப்பூருக்குச் சென்றார். சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். மனைவி: ஜானகி. ஒரு மகன்; நான்கு மகள்கள்.  

முத்துமாணிக்கம் கவிதைகள்

இலக்கிய வாழ்க்கை

மு. முத்துமாணிக்கம் இளம் வயது முதலே கவிதைகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். 1955 முதலே சிறு சிறு கவிதைகளை எழுதினார். இவரது முதல் கவிதையை, கவிஞர் இக்குவனம் அவர்கள், தான் ஆசிரியராக இருந்த தமிழ் முரசு இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். மு. முத்துமாணிக்கம், கவிஞர் முத்தமிழன் அவர்களிடம் முறையாகத் தமிழ் இலக்கணம் கற்றார். மு. முத்துமாணிக்கத்தின் முதல் பக்திக் கவிதை, 1970-ல், கோயில் குடமுழுக்கு விழா மலருக்காக எழுதப்பட்டது. மரபுக் கவிதையில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் தொடர்ந்து  இறைவன் மீது பல்வேறு பாமாலை நூல்களை இயற்றினார். சிங்கப்பூர் ஆலயக் குடமுழுக்கு விழா மலர்களில் இவரது பக்திப் பாடல்கள் பல இடம்பெற்றன.

பல மேடை, வானொலி கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவிதை பாடினார். தமிழ் அமைப்புகள், சங்கங்கள் நடத்தும் விழாக்களுக்குத் தமிழ் வாழ்த்துப் பாடலை தானே இயற்றி மெட்டமைத்துப் பாடினார். மு. முத்துமாணிக்கம் எழுதிய முதல் நூல் பொன்வண்டு. தொடர்ந்து பல நூல்களை எழுதினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதினார்.

இசை வாழ்க்கை

மு. முத்துமாணிக்கம், பண்டிட் இராமலிங்கத்திடம் முறையாக இசை கற்றார். நவராத்திரி விழாக்களில் கோயில்களில் கச்சேரி செய்தார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் பக்திப் பாடல்களைப் பாடினார். சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் மு. முத்துமாணிக்கம் பக்திக் கச்சேரி செய்துள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களித்தார்.  கிருபானந்தவாரியார், மதுரை ஆதீனம், தமிழ்முரசு ஆசிரியர் பெ. சிதம்பரம், பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன், மு. தங்கராசன் உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டார்.

விருதுகள்

  • பாத்தூறல் பட்டம்
  • முத்திரைப் பாவரசு பட்டம்
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருது
  • சிங்கப்பூர் கவிமலை அமைப்பு வழங்கிய கணையாழி விருது

பொறுப்புகள்

  • சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் கல்விக்குழுச் செயலாளர்
  • சிங்கப்பூர் தமிழர் சங்கக் கல்விக்குழுச் செயலாளர்
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர்
  • சிங்கப்பூர் இந்து சபை உறுப்பினர்
  • சிங்கை தமிழர் சீர்த்திருத்தச் சங்க உறுப்பினர்

மறைவு

மு. முத்துமாணிக்கம், வயது மூப்பால், சிங்கப்பூரில், ஏப்ரல் 13, 2023 அன்று, தனது 95 ஆம் வயதில்  காலமானார்.

இலக்கிய இடம்

மு. முத்துமாணிக்கம், தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டு இயங்கினார். சிறுவர்களுக்காகவும், பெரியோர்களுக்காகவும் இவர் எழுதிய கவிதைகள் சக கவிஞர்களின் வரவேற்பைப் பெற்றன. மரபுக்கவிதைகளையே அதிகம் எழுதினார். சிங்கப்பூரின் சிறப்புக்களைப் பல கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் மூத்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராக பாத்தூறல் முத்துமாணிக்கம் மதிக்கப்படுகிறார்.

வணக்கம் சிங்கப்பூர் - கவிதை நூல்

நூல்கள்

சிறார் நூல்
  • தேன்சிட்டு
கவிதை நூல்கள்
  • பொன்வண்டு
  • முத்துமாணிக்கம் கவிதைகள்
  • வண்ணத் தமிழுக்கு வாழ்த்துப்பா நூறு!
  • வணக்கம் சிங்கப்பூர்
  • தமிழ்வாழ்த்துச் சதகம்
  • பொன்மொழிப் பூக்கள்
ஆன்மிகக் கவிதை நூல்கள்
  • இந்து சமயக் கவிமலர்கள்
  • சிங்கப்பூர்த் தெய்வங்களின் பக்திப் பாடல்கள்
  • தெய்வத் தமிழ் இசை விருந்து
  • துர்க்கை அம்மன் போற்றிப் பாடல்கள்
  • காவடிப் பாடல்கள்
  • இஸ்லாமிய கீதங்கள்
  • இயேசு கிறிஸ்து பாமாலை
ஒலி நாடா
  • தெய்வத் தமிழ் இசைமாலை

உசாத்துணை