முருகன் ஓர் உழவன் (நாவல்)
முருகன் ஓர் உழவன் (1927 ) கா.சி.வெங்கடரமணி எழுதிய காந்திய நாவல். இது ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்டது. தமிழுக்கு 1928ல் கிருஷ்ணகுமாரி (கி.சாவித்ரி அம்மாள்) மொழியாக்கத்தில் வெளிவந்தது.
எழுத்து, பிரசுரம்
கா.சி.வெங்கடரமணி (காவேரிப்பூம்பட்டினம் சித்தாந்த வெங்கடரமணி) எழுதிய இந்நாவல் ஆங்கிலத்தில் Murugan the Tiller என்ற பேரில் 1927-ல் வெளிவந்தது. அதற்குமுன் வெங்கடரமணி Paper Boats (1921) On the Sand-Dunes (1923) என்னும் இருநூல்களை எழுதியிருந்தார். முருகன் ஓர் உழவன் அவருடைய முதல் நாவல்.
கதைச்சுருக்கம்
முருகன் ஓர் உழவன் தஞ்சை மாவட்டத்தில் ஆலவந்தி என்னும் சிற்றூரைக் களமாகக் கொண்டது. கேதாரி ராமச்சந்திரன் முருகன் என்னும் மூன்று நண்பர்களின் கதை இது. கேதாரியும் ராமச்சந்திரனும் தஞ்சை மாவட்டத்தின் வளமான கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் மாறி அன்னியப்படுகிறார்கள். ஆனால் காலம் மாறி, வேளாண்மை அழிந்துவிட்டமையால் கிராமத்திலேயே இருக்கும் முருகனும் அல்லல்படுகிறான். பதிப்புரையில் ‘உழுதுபயிருவோர்க்கு குடியினாலும் கெட்ட சேர்க்கையினாலும் வரும் கேடுகளையும் மிராசுதார்கள் சொந்த நிலத்தில் பயிரிட்டு பலனடைந்து சுகித்திராமல் நிலத்தை விற்று படித்து அற்பசம்பளத்திற்கு வேலைசெய்து பொருளீட்டுவதே புருஷார்த்தமென கருதி வஞ்சமும் பொய்யுமே சாதனங்களாக ஒழுகுபவர்கள் இழிவடைவதையும் அரசாங்கத்தார் தேசத்திலுள்ள கொடுந்தொழில்களுக்கு மூலகாரணமாக உள்ள செல்வத்தேக்கத்தால் வரும் செருக்கை நீக்க முயலாததனால் அவை விருத்தியடைவதையும் அத்தேக்கத்தையொழிப்பதனால் கொடுமை நீங்கி சீவர்கள் சாந்தமும் களிப்பும் அடைந்திருப்பார்கல் என்பதையும் ஆசிரிய முக்கியமாக விளக்கியிருக்கிறார்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இலக்கிய இடம்
முருகன் ஓர் உழவன் தமிழ்நாவலாகக் கருதப்படவில்லை. தமிழ் வாழ்க்கையைச் சொன்ன ஆங்கில நாவல்களில் ஒன்று இது. வேளாண்மையின் அழிவு. மூலதனத்தேக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய நாவல். காந்திய சமூகப்பார்வையுடன் காந்தியப் பொருளியல்பார்வையையும் முன்வைக்கிறது
உசாத்துணை