under review

முன்ஷி அப்துல்லா

From Tamil Wiki
Revision as of 19:21, 22 February 2023 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb அப்துல்லா முன்ஷி (1796 -1854) என மலாய் மொழி இலக்கியத்துறையில் பிரபலமாக அறியப்படும் அப்துல்லா அப்துல் காதிர் மலாக்கா மாநிலத்தில் அரபு தமிழ் கலப்பினத்தில் பிறந்த மூத்த  மலாய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
000.jpg

அப்துல்லா முன்ஷி (1796 -1854) என மலாய் மொழி இலக்கியத்துறையில் பிரபலமாக அறியப்படும் அப்துல்லா அப்துல் காதிர் மலாக்கா மாநிலத்தில் அரபு தமிழ் கலப்பினத்தில் பிறந்த மூத்த  மலாய் இலக்கியவாதியாவார். பன்மொழி ஆற்றல் பெற்ற  அப்துல்லா ‘முன்ஷி’ எனும் சிறப்பு பட்டம் பெற்றவர். இவர் நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.

பிறப்பு, கல்வி

முன்ஷி அப்துல்லா ஆகஸ்ட் மாதம் 1796-ல், மலாக்கா மாநிலத்திலுள்ள  பண்டார் ஹீலீர், கம்போங் பாலியில் (தற்போது கம்போங் கெதேக் என அழைக்கப்படுகிறது) பிறந்தார். இவரது இயற்பெயர் அப்துல்லா பின் அப்துல் காதர். இவர் அரபு - தமிழ் - மலாய் இனக் கலப்பு கொண்ட ஜாவி பெரனாக்கான் கலப்பின வழித்தோன்றலாகும். அவரது தந்தை அப்துல் காதர் மேற்கத்திய காலனித்துவ அதிகாரிகளுக்கு மலாய் - அரபு மொழி பயிற்றுவிப்பாளராக இருந்தார். முன்ஷி அப்துல்லா ஐந்து உடன்பிறப்புகளில் இளையவராவார். அவரது நான்கு சகோதரர்களும் அவர் இளமையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக்கொள்வதற்காக அவரது ஊரின் வழக்கப்படி பல வளர்ப்பு பெற்றோர்களால் அவர் கவனித்துக் கொள்ளப்பட்டார். முன்ஷி அப்துல்லா தன் இளமையில் மலாக்காவில், டத்தோ’ சுலைமான் டத்தோ’ அஸ்துர் போன்ற ஆசிரியர்களின் உதவியில் மலாய் மொழியில்  தேர்ச்சி பெற்றார்.

முன்ஷி அப்துல்லா புதிய அறிவை ஈட்டிக்கொள்வதில் பெரும் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்தார். சிறுவயது முதலே, ‘Al-Quran’ மற்றும் இஸ்லாமிய மதப் போதனைகளை அதிகமாகக் கற்றுத் தேர்ந்ததால், தன்னுடைய 11ஆவது வயதிலே மலாக்காவிலிருந்த இஸ்லாமிய வீரர்களுக்கு மதப் பாடங்களைக் கற்பித்தார். இதன் காரணத்தாலே இவருக்கு ‘முன்ஷி’ எனும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், முன்ஷி அப்துல்லா மொழித் துறை மற்றும் மொழியியல் ஆகிய அம்சங்களில் தனது அறிவை விரிவுபடுத்தினார். மலாய் மொழி மட்டுமின்றி தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றார். கிழக்கிந்திய குழுமம் சீன, கிறிஸ்தவ மற்றும் மலாய் இனத்தவர்களுக்கு ஆங்கிலம் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்க ஆங்கிலோ-சீன கல்லூரியை நிறுவியபோது, ​​அப்துல்லா அக்கல்வி மையத்தில் பங்கேற்றார்.

தனி வாழ்க்கை

கல்வி
முன்ஷி அப்துல்லாவின் வீடு, மலாக்கா

முன்ஷி அப்துல்லா கல்வியறிவும் அறிவுத்தேடலும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர். முன்ஷி அப்துல்லாவின் பரம்பரையானது ஷேக் அப்துல் காதிர் (Syeikh Abdul Kadir) எனும் இளம் யேமன் அரேபியரிடமிருந்து தொடங்குகிறது. அவர் அரபு நாட்டிலிருந்து தென்னிந்தியாவின் நாகூர் வரை பயணம் செய்து, அவ்வூர் பெண்ணைத் திருமணம் செய்து அவ்வூரிலே குடியேறினார். அத்தம்பதியர் வழியே முன்ஷி அப்துல்லாவின் தாத்தா, முஹம்மது இப்ராஹிம் பிறந்தார்.  இவ்வாறாகத் தொடங்கப்பட்ட பயணப் பாரம்பரியமானது, முன்ஷி அப்துல்லாவின் தந்தையால் மலாக்கா மாநிலம் வரையிலும் நீடித்து, பின்னர் முன்ஷி அப்துல்லாவாலும் தொடரப்பட்டது.

முன்ஷி அப்துல்லாவின் தந்தை வெளியூரில் தொழில் செய்து வந்ததால், முன்ஷி ​​அப்துல்லாவும் அவரது தாயும் அவரது பாட்டி பெரி ஆச்சியுடன் (Peri Achi) வசித்து வந்தனர். கம்போங் பாலியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் குரான் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்கும் பள்ளியில் பெரி ஆச்சி தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்ததால், அவரது பேரானான முன்ஷி அப்துல்லா சிறுவயது முதலே குரான் மற்றும் இஸ்லாமிய போதனைகளின் மீது அளவுகடந்த ஆர்வத்தைக் கொண்டார். அவ்வளர்ப்பு முறையின் விளைவாக முன்ஷி அப்துல்லா புத்திசாலியாகவும் படைப்பாற்றல் மிக்கவராகவும் வளர்ந்தார். 11 வயதிலேயே அவரது அளவுகடந்த புத்திசாலித்தனத்தினாலும், அறிவாற்றலினாலும் மலாக்காவிலுள்ள முஸ்லீம் வீரர்களுக்கு மதப் பாடங்களைக் கற்பிக்க இவருக்கு வாய்ப்பு கிட்டியது.

ஸ்டம்போர்ட் ரஃபல்ஸ் (Stamford Raffles) Melaka வந்தபோது, முன்ஷி ​​அப்துல்லாவை அவரது எழுத்தராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் நியமித்தார். முன்ஷி அப்துல்லாவின் கடின உழைப்பாலும் ஆளுமையாலும் ஸ்டம்போர்ட் ரஃபல்ஸ்க்கு அவர்  மீது மரியாதையும் நல்ல அபிமானமும் ஏற்பட்டது. இதனால், அவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். முன்ஷி அப்துல்லா மலாக்காவில் பணிசெய்ய வந்த பல ஆங்கில உயரதிகாரிகளுக்கு பிரத்யேக மலாய் மொழி ஆசிரியராக இருந்தார்.  ரஃபல்ஸ் பெத்தாவிக்குச் சென்ற பிறகு அவர்களது நட்பு தடைபட்டது. முன்ஷி அப்துல்லாவின் 27 வயதில் மில்னே (Milne) என்ற ஆங்கில பாதிரியாருக்கு மலாய் மொழியைக் கற்றுக் கொடுத்ததோடு, அவரிடமிருந்து ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். மற்றொரு மேற்கத்திய குடியேற்றரான டாக்டர் மாரிசன் சீன மொழியை அறிந்தவர் என்பதைத் தெரிந்துகொண்ட முன்ஷி அப்துல்லா, அவரோடும் நட்பு கொண்டு அம்மொழியையும் ஓரளவு கற்றுக்கொண்டார்.

திருமணம்

முன்ஷி அப்துல்லாவுக்குத் தன்னுடைய 34 வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பாதியார் மில்னே இறந்த பிறகு, ஆங்கிலோ-சீனக் கல்லூரியின் முதல்வர் பதவியை தாம்சன் ஏற்றார்.  தாம்சன் தன் மனைவியை இங்கிலாந்துக்கு அனுப்பும் பொருட்டு அவருடன் சென்ற சிறிது காலம்  முன்ஷி அப்துல்லா அக்கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.  

தொழில்

பின்னர், முன்ஷி அப்துல்லா தொழில் காரணமாகச் சிங்கப்பூருக்குச் சென்றார். மலாக்காவில் அவரது குழந்தைகளையும் மனைவியையும் விட்டுச் சென்ற முன்ஷி அப்துல்லா ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தனது குடும்பத்தைக் காண வருவார். சிங்கப்பூரில், ரஃபல்ஸின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கப்பூரின் சட்டங்களை எழுதுவதற்கு முன்ஷி அப்துல்லா பொறுப்பேற்றார். ரஃபல்ஸ் இங்கிலாந்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பழைய மலாய் இலக்கியப் புத்தகங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றைச் சேகரிக்கும் பணியும் முன்ஷி அப்துல்லாவிற்கு வழங்கப்பட்டது. மேலும், இவர் சிங்கப்பூரிலிருந்த ஆங்கில வணிகர்களுக்கு மலாய் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, முன்ஷி அப்துல்லா மலாக்காவுக்குத் திரும்பி, ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் பணிபுரிந்த ஹஃஹேஸ் (Hughes), ஃபாதர் எவன்ஸ் (Father Evans) மற்றும் நியூபோல்ட் (Newbold) ஆகியோருக்கு மலாய் மொழியைக் கற்பித்தார்.

இதற்கிடையில், நியூபோல்ட் சீன பழக்கவழக்கங்கள் மற்றும் ஜக்குன் சமூகம் பற்றி ஆராயவும், அவற்றை ஆங்கிலத்தில் எழுதவும் முன்ஷி அப்துல்லாவிற்கு அறிவுறுத்தினார். இப்பணியின் காரணமாக முன்ஷி அப்துல்லா குனுங் பஞ்சுருக்குச் (Gunung Pancur) சென்று அங்குள்ள ஜக்குன் சமூகத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்தார். அவர் டைபாய்டு காய்ச்சலால் தாக்கப்பட்டபோது, ​​மீண்டும்​ மலாக்காவிற்குத் திரும்பினார். இத்தொற்றுக் காய்ச்சலினால் அவரது மனைவி 1840இல் இறந்தார். அந்த நிகழ்வால் வருத்தமடைந்த முன்ஷி அப்துல்லா, மலாக்காவிலுள்ள தனது வீட்டை விற்றுவிட்டுச் சிங்கப்பூரில் தொடர்ந்து வாழ்ந்தார்.

மரணம்

முன்ஷி அப்துல்லா தனது 58வது வயதில் மக்காவுக்குச் செல்லும் வழியில் 1854இல் இறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

முன்ஷி அப்துல்லா தனது முதல் படைப்பை 1830இல் ‘ஷாயிர் சிங்கபுரா தெர்பாக்கார்’ (Syair Singapura Terbakar) என்ற தலைப்பில் படைத்தார். இப்படைப்பில் முன்ஷி அப்துல்லா சிங்கப்பூரில் தாம் எதிர்நோக்கிய தீ விபத்து தொடர்பான அனுபவங்களைக் கவிதைத் தொகுப்பாகப் படைத்தார்.

பின்னர், 1835ஆம் ஆண்டில், முன்ஷி அப்துல்லா ‘பஞ்சதந்திரம்’  என்ற தமிழ் மூல நூலை 'ஹிகாயத் பஞ்ச தந்தரன் (Hikayat Panca Tanderan) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பு பணிக்கு  அப்துல்லாவின் நண்பர் தம்பி முத்து பிரதாபர் என்பவர் உதவினார்.  இந்நூலின் உள்ளடக்கம்,  அப்துல்லா இப்னு அல்-முக்காஃபா என்னும் பெர்சிய கல்வியாளரால் எழுதப்பட்டு மலாயில் மொழி பெயர்க்கப்பட்ட  ஹிக்கயாத் கலிலா டான் டாமினா' (Hikayat Kalilah dan Daminah) என்ற  சிரியா மொழி மூலநூலை ஒத்திருந்தது. ஆனால்  முன்ஷி அப்துல்லாவின் மொழி பெயர்ப்பு பஞ்சதந்திர கதைகளின் மூல மொழியான சமஸ்கிருத கதைகளையும் தமிழ் வடிவத்தையும் அதிகம் சார்ந்திருந்ததால் அது  தனிச் சிறப்பு பெற்றது.

இவரின் மற்றுமொரு மொழிபெயர்ப்புப் படைப்பானது, 'பெர்ஹிம்புனான் சௌடாகார்-சௌடாகார்' (Perhimpunan Saudagar-saudagar) ஆகும். பின்னர், அவர் தனது மகள் சிதி லேலாவின் மரணத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக ‘இதயத்தின் மருத்துவம்’ எனப் பொருள்படும் 'தேவா உல்-குலுன்' (Dewa ul-Kulun) என்ற பாடலை இயற்றினார்.

மலாய் தலைவர்கள் மீதான விமர்சனத்தின் கூறுகள், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் பொருட்டு நிறைய படைப்புகளை முன்ஷி அப்துல்லா உருவாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, முன்ஷி அப்துல்லா தன்னுடைய 42ஆவது வயதில் நோர்த் (North) எனும் ஆங்கிலேய அதிகாரியுடன் பணிபுரிந்தபோது, ​​ பகாங், தெரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களுக்குச் சென்ற பயணத்தின் கதைகளை 'கிசா  பெலாயாரான் அப்துல்லா’ (Kisah Pelayaran Abdullah ke Kelantan) எனும் நூலில் பதிவு செய்துள்ளார். மலாய் மன்னர்களுக்கு வெளிப்படையான அறிவுரைகளை வழங்கும் வகையிலும், மலாய் மன்னர் முறைக்கும் பிரிட்டிஷ் காலனித்துவ முறைக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை அவதானிப்பு ஒப்பீடு செய்யும் வகையிலும் அந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. 1840ஆம் ஆண்டில், முன்ஷி அப்துல்லா 'சிசோஸ்டிஸ்' (Sisostis) என்ற கப்பலின் கதையை எழுதினார்.

அதனைத்தொடர்ந்து, 'ஹிகாயத் அப்துல்லா'வை (Hikayat Abdullah) மே 3, 1843இல் முன்ஷி அப்துல்லா எழுதி முடித்தார். இருப்பினும், அவர் இறந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அவரது மக்கா பயணத்தின் கதையானது 'கிசா பெலாயாரான் அப்துல்லா கெ ஜூடா' (Kisah Pelayaran Abdullah ke Judah) எனும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், முன்ஷி அப்துல்லாவின் மரணத்தின் காரணத்தால் அப்புத்தகம் எழுதி முடிக்கமுடியாமல் போனது. இருப்பினும், இப்புத்தகம் 1920இல் ஜகார்த்தாவின் பாலாய் புஸ்டகாவில் வெளியிடப்பட்டது.

மலாக்கா சுல்தான்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட செஜராஹ் மெலாயு மூல நூலை அடிப்படையாகக் கொண்டு, 1821, ஜான் லேடனின் ராஃபிள்ஸ் MS எண்.18 இன் ஆங்கில மொழிபெயர்ப்பு முதலில் லண்டனில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்ஷி அப்துல்லா 1831 இல் செஜராஹ் மெலாயு திருத்தப்பட்ட மலாய் மொழி பதிப்பை  சிங்கப்பூரில் வெளியிட்டார்.

முன்ஷி அப்துல்லா, மலாய் இலக்கண விதிகளையும் சொற்களஞ்சியத்தையும் சீர் செய்ய பெரிதும் முயன்றார். மலாய் மொழியில் முறையான இலக்கண நூல் இல்லாத குறையைப் பல இடங்களில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலக்கியப்  பங்களிப்பு

0000க்.jpg

முன்ஷி அப்துல்லாவின் முதன்மைப் படைப்புகளாக அவரின் ஹிக்காயத் அப்துல்லா( Hikayat Abdullah),  கெசா பெலாயாரான் அப்துல்லா கெ கிளாந்தான்(Kisah Pelayaran Abdullah ke Kelantan) ஆகியவை அமைந்துள்ளன.  ஹிக்காயத் அப்துல்லா, முன்ஷி அப்துல்லாவின் சுயவரலாற்று நூல். அது நவீன கால சுயவரலாற்றுத் தன்மையுடன் நேர்த்தியான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.  கெசாஹ் பெலாயாரான் அப்துல்லா கெ கிளாந்தான் (Kisah Pelayaran Abdullah ke Kelantan)  என்பது, கிளாந்தான், தெரங்கானு, பஹாங் ஆகிய கிழக்கு மாநிலங்களுக்கு முன்ஷி அப்துல்லா தன் அலுவல் காரணமாக செய்த பயணத்தின் போது பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகும்.  மேலும், 'கிசா பெலாயாரான் அப்துல்லா கெ ஜூடா' (Kisah Pelayaran Abdullah ke Judah) எனும் புத்தகமும் அவரின் மெக்கா பயண அனுபவ பதிவுகளைக் கொண்ட நூல்களாகும்.

முன்ஷி அப்துல்லா தனது படைப்புகளில் சமரசமற்ற சமூக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  நிலவுடைமை சமூகத்தால் பொது மக்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் சுல்தான்கள் அல்லது நிலபிரபுக்களின் பிற்போக்கு மிக்க நிர்வாக முறையையும் பகடியாக சித்தரித்துள்ளார்.  மலாய் மக்களின் சோம்பேறித்தனம், பெண்களை நம்பி ஊதாரிகளாக வாழும் ஆண்கள் அறிவுத்தெளிவற்ற சமய ஆசிரியர்கள்,  சாமானியர்களை அடிமைப்படுத்தி சுக வாழ்வு வாழும் நில பிரபுக்கள் என பல்வேறு விமர்சனங்களை அவரது பயண நூல்கள் கொண்டுள்ளன.

பொதுவாக மலாய் இலக்கியத்தில் சுல்தான்களையும்  அரண்மனையையும் வெளிப்படையாக விமர்சிக்கும் போக்கு இருக்காது. முன்ஷி அப்துல்லாவின் படைப்புகள் அதற்கு எதிராகவே அமைகின்றன.  மேலும், மரபான மலாய் இலக்கியங்கள் போல இதிகாச நடையில் எழுதும் பாணியைத் தவிர்த்து செய்தி நடையிலேயே முன்ஷி அப்துல்லா எழுதினார். அவர் கற்பனையும் புராணக் கூறுகளும் இல்லாத இயல்புவாத பாணியையே கையாண்டு தனது படைப்புகளை எழுதியுள்ளார். பிறமொழி அறிவும் உலக இலக்கிய வாசிப்பும் அமையப்பெற்ற முன்ஷி அப்துல்லாவின் படைப்புகள் முழுதும் சமூக நோக்கு கொண்டவையாக அமைந்துள்ளதே அதன் தனிச் சிறப்பு. இதன் காரணமாகவே இலக்கிய ஆய்வாளர்கள் முன்ஷி அப்துல்லாவை நவீன மலாய் இலக்கியத் தந்தை என்று போற்றுகின்றனர்.  

அவர் பொதுவாக மலாய் மொழி இலக்கியத் துறையில் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார். குறிப்பாக அந்த நேரத்தில் மலாய் மொழி படைப்பிலக்கியத்தில் பத்திரிகையின் பயன்பாடு மற்றும் மலாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அணுகுமுறையைக் கணிசமாக மாற்றினார். இளம் வயது முதலே அவருக்கிருந்த ஞானத்திற்காகவே ‘கல்வியாளர்’ அல்லது ‘ஆசிரியர்’ என்று பொருள்படும் 'முன்ஷி' என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

விமர்சனங்கள்

முன்ஷி அப்துல்லாவின் படைப்புகள் மீது பிற்கால தேசியவாதிகள் இரண்டு வகையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்

முன்ஷி அப்துல்லா ஆங்கிலேய காலனித்துவ சார்பு கருத்து கொண்டவர். எனவே அவர் மலாய் ஆட்சி முறையையும் மலாய் மக்களின் வாழ்க்கை முறையையும் ‘ஆங்கிலேயர் கண்கொண்டு’ விமர்சித்தார். அவரின் கருத்துக்கள் ஆங்கில அதிகாரிகளின் காலனியவாத கருத்துகளோடு ஒத்துப் போயின. பிரிட்டிஷ் ஆட்சி முறையையும் அவர்கள் கொண்டுவந்த கல்வி முறை, பண்பாடு ஆகியவற்றோடு ஒப்பிட்டே முன்ஷி அப்துல்லா தன் சமூக விமர்சனத்தை முன் வைத்ததால் அவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகவும் விரும்பியதோடு அவரை நவீன மலாய் இலக்கியத் தந்தை என்று சிறப்பித்தனர். மேலும், முன்ஷி அப்துல்லா, கிருஸ்துவ பாதிரியார்கள் பைபிலை மலாய் மொழியில் மொழிபெயர்க்க மொழி ஆலோசகராக இருந்து உதவியதும் ஆங்கிலேயர்களின் அபிமானத்தைப் பெற ஒரு காரணம் என விமர்சிக்கப்படுகின்றது.   முன்ஷி அப்துல்லாவை  முகப்பாக நிறுத்தி மலாய் இலக்கியத்தை பழைய இலக்கியம், நவீன இலக்கியம் என்றும் பிரித்துக் காட்டுவது ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி அடையாளத்தைத் தக்கவைக்கச் செய்யப்பட்ட சதியாகும்.   

முன்ஷி அப்துல்லா மேட்டுக்குடியில் பிறந்து வளர்ந்தவர். அவரின் குடும்பப் பின்னணி கல்வியறிவும் ஆங்கில அதிகாரிகளின் அணுக்கமும் கொண்டது. ஆகவே முன்ஷி அப்துல்லா சாமானிய மலாய் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளாதவராக இருந்துள்ளார். சுல்தான்கள் அல்லது நிலப்பிரபுக்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு வேலை செய்து வாழும் முறையைப் பற்றிய போதுமான தெளிவு இல்லாத நிலையில் அவர் அவர்களின் வாழ்க்கையை ‘சோம்பலும் தன் ஊக்கமும் அற்றது’ என விமர்சித்துள்ளார்.

நினைவுச் சின்னங்கள்

2019இல் சிங்கப்பூரின் 200ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் போது தான் தொக் செங் (Tan Tock Seng), நாரைனா பிள்ளை (Naraina Pillai) மற்றும் சங் நிலா உத்தாமா (Sang Nila Utama) ஆகியோரின் சிற்பங்களை ஆற்றங்கரையில் நிறுவி நினைவுகூரப்பட்ட உள்ளூர் நபர்களுள் முன்ஷி அப்துல்லாவும் ஒருவராவார்.

முன்ஷி அப்துல்லாவின் பெயர் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள பல இடங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது.

  • ஜாலான் முன்ஷி அப்துல்லா, கோலாலம்பூர்.
  • ஜாலான் முன்ஷி அப்துல்லா, மலாக்கா.
  • முன்ஷி அப்துல்லா அவென்யூ & முன்ஷி அப்துல்லா வால்க், சிங்கப்பூர்.
  • ஜாலான் முன்ஷி அப்துல்லா, பினாங்கு.

படைப்புகள்

  • Hikayat Kalilah Wa Daminah (1835)  
  • Kitab Adat Segala Raja-raja Melayu Dalam Segala Negeri (1837)
  • Dawai-Kulub (1838)
  • Kisah Pelayaran Abdullah bin Abdul Kadir Munsyi dari Singapura Sampai ke Kelantan (1838)
  • Ceretera/Cerita Kapal Asap (1843)
  • Bahwa Ini Hikayat Binatang (1846)
  • Syair Singapura Terbakar (1847)
  • Syair Kampung Gelam Terbakar (1847)
  • Malay Poem on New Year’s Day (1848)
  • Hikayat Abdullah (1849)
  • Ceretera Haji Sabar ‘Ali (1851)
  • Kisah Pelayaran Abdullah bin Abdul Kadir Munsyi dari Singapura Sampai ke Mekkah (1858-9)

உசாத்துணை 


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.