முத்துத்தாண்டவர்

From Tamil Wiki
Revision as of 21:10, 9 February 2022 by Subhasrees (talk | contribs) (முத்துத்தாண்டவர் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முத்துத்தாண்டவர் (1525-1600)  சீர்காழியிலே வாழ்ந்து கர்நாடக இசையில் பல கீர்த்தனைகள் இயற்றிப் பாடிய இசை முன்னோடி. கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625). முத்துத்தாண்டவர் தமிழில் பாடல்கள் இயற்றியவர்.

பிறப்பு, இளமை

தாண்டவர் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வேளாளர் குடும்பத்தில் 1525ல் பிறந்தார். தில்லை ஆண்டவரின் பெயராகிய தாண்டவர் என்னும் பெயரை பெற்றோர் இவருக்கு வைத்தனர். பெற்றோர் பெயர் தெரியவில்லை. மரபான வழியில் தமிழும் இசையும் பயின்றிருந்தார்.

இவரது பாடல்களின் பதிப்புகளில் ஆரம்பம் முதல் இவரது வரலாறு குறிப்பிடப்பட்டு வருகிறது. இது தவிர அவர் பாடல்களின் கருப்பொருள் சார்ந்து பல தொன்மங்களும் வழக்கத்தில் உள்ளன.

தொன்மங்கள்

தாண்டவரை இளமையில் என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. அது தொழுநோய் என்று அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அந்நிலையில் சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் நட்பு அவருக்கு ஏற்பட்டது. சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை போக்கியது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்க மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நோயுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது.

ஒரு நாள், சீர்காழி கோயிலில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து விழித்த தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கி வேண்டினார். இசைவேளாளர் ஆகையால் மரபு வழி கற்ற தேவாரப் பாடல்களைப் பாடினார்.

அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் எழுதுமாறு சொன்னாள். தனக்கு பாட்டேதும் எழுதத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்க வரியாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மறைந்துவிட்டாள் அச்சிறுமி.

முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தன. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். இப்பாடல் பல்லவி, அனுபல்லவியுடன் மூன்று நீண்ட சரணங்கள் கொண்டது. தாண்டவருக்கு நல்ல குரல் வளமும் இருந்தது. இப்பாடல் அக்கோவிலை விரிவாக வர்ணிக்கும் சரணம் கொண்டது.

பூலோக கைலாயகிரி சிதம்பரம் அல்லால்

புவனத்தில் வேறுமுண்டோ

சாலோக சாமீப சாரூப சாயுச்சிய

சபைவாணர் ஆனந்தத் தாண்டவம் புரிவதால்

அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் அவரது நோய் தீர்ந்தது.

ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார் முத்துத்தாண்டவர். நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது.

ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் உடலை விட்டு நீங்கியது.

ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்தார்.

“காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாடினார்.

இசைப் பணி

முத்துத்தாண்டவர் தமிழிசை வரலாற்றில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து இசைப்பாடல்(கீர்த்தனை/கிருதி) வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தைச் சேர்ந்தவர். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அனுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (முப்பிரிவு) முறையை, தாளத்துக்குப் பொருத்தி அவ்வடிவத்தை முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவர்.

அதன் பிறகு இதுவே கீர்த்தனைகளின் வடிவமாகியது. அதனால் கீர்த்தனை மரபின் முன்னோடி. இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். தன் பாடல்களில் சமயச் செய்திகளையும், தல வரலாற்று செய்திகளையும், புராணச் செய்திகளையும் அமைத்துப் பாடியிருக்கிறார்.  

இவரின் பல பாடல்கள் பதம் என்கிற வகையினைச் சாரும். பதம் என்னும் வகைப் பாடல்கள் பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படுபவை. அந்தக் காலகட்டத்தில் சிருங்கார ரசமும், பக்தியும் இதுபோன்ற பதங்களின் பாடுபொருட்களாக இருந்தன.  அவற்றை  உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.

இதுவரை முத்துத்தாண்டவருடைய 60 கீர்த்தனங்கள் கிடைத்து அச்சிடப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 25 ராகங்களும் 7 தாளங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் மேளகர்த்தா ராகங்கள் குறைவாகவும் ஜன்ய ராகங்களே அதிகமாகவும் இருக்கின்றன. கல்யாணி, ஆனந்த பைரவி, நாதநாமக்கிரியை ஆகிய ராகங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அதிகம் பயன்பாட்டில் இல்லாத பரீஸ் (பரசு), கர்நாடக சாரங்கா, கௌளிபந்து, நாகவராளி, மங்கலகௌசிகை ஆகிய ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.