முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை (1820-1889) இலங்கைத் தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர். ஆங்கில-தமிழ் அகராதியை உருவாக்கியவர்.
பிறப்பு, கல்வி
இவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சங்குவேலி என்னும் கிராமத்தில் 1820-ல் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். தனது பன்னிரெண்டாம் வயதில் கிறிஸ்தவ மிஷனால் வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவந்த செமினரியில் சேர்ந்து கல்வி கற்றார். ஒரு இந்துவான இவர் செமினரி நிபந்தனைகளுக்கு அமைய வில்லியம் நெவின்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர வடமொழியையும் கற்றார். கணிதத்தில் புலமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றிய நெவின்ஸ் செல்வதுரை இவரது மகன். வில்லியம் நெவின்ஸ் அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என அறியப்பட்டவர்.
தனிவாழ்க்கை
1840-ல் கல்வியை நிறைவு செய்துகொண்ட இவர் செமினரியிலேயே பணியில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அங்கே மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1855-ல் வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்ட பின் தமிழ் நாட்டுக்குச் சென்றார். 1860-ல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினார்.
கல்விப்பணி
இவர் 19-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் ஈடுபட்டவர். சிதம்பரப்பிள்ளையவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை 1890-ல் அக்காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வந்த சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பாடசாலை பின்னர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எனப் பெயர் பெற்றது. 1860-ல் யாழ்ப்பாணத்தின் முதல் பாடசாலையும், ஆங்கிலப் பாடசாலையுமான மத்திய கல்லூரியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றார். 26 ஆண்டுகாலப் பணிக்குப் பின் 1886-ல் ஓய்வு பெற்றார். 1887-ல் மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்த கட்டிடமொன்றில் சுதேச நகர உயர் பாடசாலை The Native Town High School என்ற பெயரில் பாடசாலையொன்றை உருவாக்கினார். 1889-ல் இப்பாடசாலையை வழக்கறிஞராக இருந்த நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்றார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல தன்னிலைச் செய்யுள்களை இயற்றினார். வைத்தியர் சாமுவேல் பிஸ்க் கிறீனின் மொழிபெயர்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தவர். 1855-ல் வின்ஸ்லோ அகராதி எனப் பெயர்பெற்ற தமிழ் அகராதி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வின்ஸ்லோ என்பவருக்கு உதவியாக இருந்தார். அவருடன் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றினார். தமிழில் தர்க்கவியலை மொழிபெயர்த்து 1850-ல் நியாய இலக்கணம் - Elements of Logic எனும் பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார்.
மறைவு
1889-ல் சிதம்பரப்பிள்ளை காலமானார்.
நூல் பட்டியல்
- நியாய இலக்கணம்
- தமிழ் வியாகரணம்
- ஆங்கிலத் தமிழ் அகராதி 536 பக்கங்கள், 1858
- இலக்கிய சங்கிரகம்
உசாத்துணை
[[]]
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.