முத்தமிழ் படிப்பகம் (மலேசியா)

From Tamil Wiki
Revision as of 21:33, 26 August 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "முத்தமிழ் படிப்பகம், மலாயாவில் தமிழ்மொழி நிலைத்து உயரவும் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளரவும் 1958 ஏப்ரல் 14ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தத் தமிழ் நூலகம் மூலம் தமிழ் நூல்களை வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முத்தமிழ் படிப்பகம், மலாயாவில் தமிழ்மொழி நிலைத்து உயரவும் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளரவும் 1958 ஏப்ரல் 14ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தத் தமிழ் நூலகம் மூலம் தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டது. மொழியை அடிப்படையாகக் கொண்ட விழாக்கள், போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன. ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவாக இப்படிப்பகம் துணை நின்றது.

தோற்றம்

முத்தமிழ் படிப்பகம், 1958 ஏப்ரல் 14ல்  காலை மணி 9க்கு ஈப்போ சாலையின் 2 3/4 மைலில் அமைந்துள்ள ஒரு சிறிய கட்டடத்தில் 19 பேர் முயற்சியில் தொடங்கப்பட்டது. முத்தமிழ் படிப்பகம் எனும் பெயரை மா. சொக்கலிங்கம் அவர்கள் பரிந்துரை செய்தார். அன்று உருவாக்கப்பட்ட அமைப்புக்குழுவின் கீழ் தலைவராக பெ.ஜெயராமன், துணைத்தலைவராக வி. சந்திரன், கௌரவ செயலாளராக ஆ. பெரியசாமி, கௌரவ பொருளாளராக ஞா.பாலமுத்து,  நூல்கள் பொறுப்பாளராக  கு. சுப்பிரமணியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  செயலவை உறுப்பினர்களாக செ. ஆறுமுகம், கு. சுப்பிரமணியம், செ. சச்சிதானந்தன், சா. கிருஷ்ணன், க. கருப்பையா, ம. சொக்கலிங்கம், தொ.பரதன் ஆகியோர் உறுப்பியம் பெற்ற சூழலில் கணக்காய்வாளராக ரா. சின்னையாவும் ஆலோசகராக ஜி. குமாரசாமியும் தேர்வு பெற்றனர்.

முதல் பொதுக்கூட்டம்

1959 ஆகஸ்ட்டு 28இல் ஜி. குமாரசாமி அவர்களின் தலைமையில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் இவ்வியக்கத்தின் நிரந்தர செயற்குழு தலைவராக பெ.ஜெயராமன், துணைத்தலைவராக வி. சந்திரன், கௌரவ செயலாளராக ஆ. பெரியசாமி, பொருளாளராக உ. சுப்பையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நா. கருப்பையா நூல்களின் பொறுப்பாளராகவும் சின்னையா கணக்காய்வாளராகவும்  கு. சுப்பிரமணியம் செ. சச்சிதானந்தன், சா. கிருஷ்ணன் ஆகியோர் செயலவை உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசாங்க வயது வரம்பிற்கிணங்க தலைவரும் துணைத்தலைவரும் இல்லாததால் அவர்கள் செயற்குழுவில் இருந்து விலக நேரிட்டது. கு. சண்முக சுந்தரம் தலைவராகவும் ர. கோபால் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். உ. சுப்பையா தலைமையில் சொற்பயிற்சி பகுதியொன்று உருவானது. இப்பயிற்சி குழுவில் எழுத்தாளர் சை. பீர்முகம்மது இடம்பெற்றிருந்தார். அதுபோல டிசம்பர் 4, 1959ல் பெ. ஜெபராமன் தலைமையில் கலைப்பகுதியொன்றும் அமைக்கப்பட்டது.

நிதி சேர்ப்பு

முத்தமிழ் படிப்பகத்திற்குச் சொந்தக் கட்டடம் வாங்க அதன் உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். தீபாவளி திருநாளில் உண்டியல் ஏந்துதல், தைப்பூசத் திருநாளில் உண்டியல் ஏந்துதல் என பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்தனர். மேலும் தமிழகக் குழுவினரி இசைக்கச்சேரிகளை நடத்தியும் 'சிவகங்கைச் சீமை' திரைப்படத்தை திரையிட்டும் பணம் சேர்த்தனர். லாட்டரி குலுக்கு நடத்துவது பல்வேறு சொற்ப்பொழிவுகள் மூலம் படிப்பகத்தைப் பிரபலப்படுத்தி உறுப்பினர்களை அதிகரிப்பது என ஓயாமல் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

  • கட்டடம்

ஈப்போ சாலையின் 2 3/4 மைலில் அமைந்திருந்த முத்தமிழ் கட்டடத்தின் மாதாந்திர வாடகை 22 ரிங்கிட் 50 காசு. அப்போது இந்தப் படிப்பகத்தில் அங்கத்தினர்களாக இருந்த 19 பேரிடமிருந்து மாதம் 2 ரிங்கிட் வசூழிக்கப்பட்டது. அப்போது இந்தப் படிப்பகத்தில் 50 நூல்கள் மட்டுமே இருந்தன. 1959 நவம்பர் 20 ஆம் திகதி 371, ஈப்போ சாலை என்ற முகவரிக்கு மாற்றம் கண்டது. அக்கட்டடத்தின் மாத வாடகை 25 ரிங்கிட். தொடர்ந்து, 65 ஜாலான் செந்தூல் எனும் முகவரியில் உள்ள கட்டடத்தை  இந்தப் படிப்பகம் 48,250 ரிங்கிட்டுக்கு வாங்கியவுடன் 1971 ஜூன் 27 ஆம் திகதி முதல் தன் சொந்தக் கட்டடத்தில் இயங்கத்தொடங்கியது. 1989 முதல் குளிர்சாதன வசதியும் 1993 முதல் கணினி வழி செயல்பாடுகளுமாக இந்த படிப்பகம் இயங்கி வருகிறது.

நூல்கள்

1959இல் மு. மனோகரன் என்பவரால் 283 நூல்களை நன்கொடையாகப் பெற்ற இப்படிப்பகம் 2022ல் 25000 மேற்பட்ட தமிழ் நூல்களுடன் இயங்கி வருகிறது.

உசாத்துணை

  • முத்தமிழ் படிப்பகம், ஆண்டு மலர் 2015