மீனாட்சிசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:17, 11 January 2022 by Mahendra (talk | contribs)

மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு) தமிழறிஞர், பழந்தமிழ் இலக்கியங்களைப் பயிற்றுவித்தவர், உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீன வித்வானாக பணியாற்றியவர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு இரண்டு வகையில் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பங்களிப்பாற்றினார். அன்று தமிழில் சைவ ஆலயங்களை புதுப்பிப்பது, அவற்றுக்கு தலபுராணங்கள் எழுதுவது ஆகிய செயல்கள் தீவிரமாக நிகழ்ந்தன. அவ்வியக்கத்தின் முதன்மையான ஆசிரியராகத் திகழ்ந்தவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை . அவர் நூற்றுக்கும் மேலான தலபுராண நூல்களை இயற்றினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மரபார்ந்த முறையில் தமிழ் கற்றவர்கள் பலர் நவீனக் கல்விமுறைக்குள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்களாக வந்தனர். அவர்களில் பலர் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் மாணவர்கள். சைவ ஆதீனம் சார்ந்து தமிழ் கற்பித்தமையாலும், இலக்கியம் இலக்கணம் இரண்டையும் முறையாகப் பயிற்றுவித்தமையாலும் அவருடைய மாணவர்களுக்கு நவீனக் கல்விமுறைக்குள் நுழைவதற்கான பயிற்சியும் தகுதியும் அமைந்தன. இவ்விரு வகையிலும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழியக்க முன்னோடியாக நினைவுகூரப்படுகிறார்.

வாழ்க்கையும் கல்வியும்

மீனாட்சிசுந்தரம்பிள்ளை திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815-இல் பங்குனி மாதம் துவாதசியன்று மகர லக்கினத்தில் வியாழக்கிழமையில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை -அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் மரபான குருகுல முறைப்படி தமிழ்க்கல்வி பயின்றார்.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் காலகட்டத்தில் சங்க இலக்கியங்கள், தமிழ்க்காப்பியங்கள் போன்றவை அறிஞர்களாலும் அறியப்படாமல் சுவடிகளில் மறைந்திருந்தன. திருக்குறள் போன்ற அறநூல்களும் புறச்சமய நூல்களாகக் கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன. மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் காலகட்டத்திற்குப்பிறகு உருவான தமிழியக்கத்தால்தான் அவை சுவடிகளில் இருந்து அச்சுவடிவம் கொண்டன. அவை அனைத்து அறிஞர்களாலும் பயிலப்பட்டன. மதச்சார்பற்ற இலக்கியக் கல்வியும் அப்போதுதான் தொடங்கியது.

ஆகவே மீனாட்சிசுந்தரம்பிள்ளை அக்காலத்தைய சைவத்தமிழ்க் கல்வியையே அடைந்தார். அது ஆசாரக்கோவை முதலிய ஒழுக்க நூல்களையும், நன்னூல், தண்டியலங்காரம் முதலிய இலக்கணநூல்களையும், கலம்பகங்கள் புராணங்கள் போன்ற சிற்றிலக்கியங்களையும், சைவத்திருமுறைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. மீனாட்சிசுந்தரம்பிள்ளை மாணவர்களுக்குக் கற்பித்ததும் இந்நூல்களையே.

இலக்கியப் பணிகள்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழிலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்களின் காலகட்டத்தின் இறுதியில் வாழ்ந்தவர். தமிழிலக்கிய மரபை அக்காலகட்டத்தில் மேலோங்கியிருந்த இலக்கியப் படைப்புகளின் இயல்புகளைக்கொண்டு சங்க இலக்கிய காலகட்டம் ,காப்பிய காலகட்டம், அறநூல் காலகட்டம், பக்தி இலக்கியக் காலகட்டம், புராணகாலகட்டம், சிற்றிலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என்று பொதுவாகப் பிரிப்பதுண்டு. சிற்றிலக்கியக் காலகட்டத்தில் திட்டவட்டமான வடிவ இலக்கணம் கொண்ட கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் மிகுதியாக வெளிவந்தன. அதற்கு முந்தைய புராணகாலகட்டத்தின் தொடர்ச்சியாக புராணங்களும் இயற்றப்பட்டன. அன்று உரைநடைஇலக்கியம் உருவாகவில்லை. நூல்களுக்கான விளக்கக்குறிப்புகள் மட்டுமே உரைநடையில் எழுதப்பட்டன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிற்றிலக்கியம், புராணம் என்னும் இரண்டு வகைமையில் மட்டுமே எழுதியிருக்கிறார். பிள்ளைதமிழ் வடிவில் பல நூல்களை இயற்றியமையால் ‘பிள்ளைதமிழுக்கோர் பிள்ளை’ என இவரை புகழ்ந்திருக்கிறார்கள். அவருடைய காலகட்டத்தில் சைவசமயம் புத்துயிர் கொண்டது. ஏராளமான சைவ ஆலயங்கள் பழுதுபார்க்கப்பட்டு குடமுழுக்காட்டு செய்யப்பட்டன. அந்த ஆலயங்களுக்கு தலபுராணங்கள் புதிதாக எழுதப்பட்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஊதியம் பெற்றுக்கொண்டு அந்த ஆலயங்கள் அமைந்த ஊர்களுக்குச் சென்று தங்கியிருந்து தலபுராணங்கள் எழுதியளிப்பதை தொழிலாகச் செய்துவந்தார் என அவருடைய மாணவர் உ.வே.சாமிநாதய்யர் அவரைப்பற்றி எழுதிய வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாக உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். இவரது படைப்புகள் 42-ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சாமிநாதய்யர். வெளியிட்டுள்ளார் இதுவரை 73 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. புராணங்கள் 22, சிறு காப்பியங்கள் 6, பிரபந்தங்கள் 45.

கல்விப் பணி

மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் காலகட்டத்தில் ஆங்கிலேயரால் இந்தியாவுக்கு நவீனக்கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகளும் கல்லூரிகளும் உருவாகியிருந்தன. ஆனால் தமிழ்க்கல்வி பெரும்பாலும் மரபான குருகுல முறைப்படித்தான் கற்பிக்கப்பட்டது. மாணவர்கள் ஆசிரியரின் இல்லத்திலேயே தங்கி, அவருக்கு பணிவிடை செய்து கற்றுக்கொள்ளும் முறை அது. ஆசிரியருக்கு மாணவர்கள் முடிந்தால் குருதட்சிணை எனப்படும் காணிக்கை அளிக்கலாம்.அரசர்களும், செல்வந்தர்களும், மடாதிபதிகளும் ஆசிரியர்களுக்குரிய நிதியுதவியை அளிப்பார்கள். மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு திருவாவடுதுறை ஆதீனம் நிதியுதவி அளித்தது. மாணவ்ர்கள் அவர் இல்லத்தில் தங்கி கல்வி கற்றனர். இச்சித்திரத்தை உ.வே.சாமிநாதய்யர் அவருடைய ‘என் சரித்திரம்’ என்னும் நூலிலும் ‘ திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்னும் நூலிலும் எழுதியிருக்கிறார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் இரண்டு வகையானவர்கள். இவருக்கு இணையான நிலையில் இருந்து இவரிடம் தமிழ் பயின்றவர்கள் ஒரு சாரார். அவரிடம் குருகுல முறைப்படி கல்வி பயின்றவர்கள் இன்னொரு சாரார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வல்லூர் தேவராசபிள்ளை, மழவை மகாலிங்கையர், பூவாளூர் தியாகராசச் செட்டியார் , இராமநாதபுரம் அழகிரி ராஜுப்பிள்ளை, ஆகியோர் முதல்வகையில் புகழ்பெற்றவர்கள். உ.வே.சாமிநாத ஐயர், சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியார், குலாம் காதர் நாவலர், சவுரிராயலு நாயக்கர், திருநெல்வேலி ஆரியங்காவுப் பிள்ளை, ஆகியோர் இரண்டாம் வகையினர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்ரமணிய தேசிகர் “அவர்கள் பெயரோடு நமது மடத்தின் பெயரும் விளங்குகிறது. அந்தப் புலவர்மணியின் ஆற்றல் இந்த மடத்தை எல்லோருக்கும் உரிய கல்விநிலையமாகச் செய்தது. வைதிக மதஸ்தர்களும் பிற மதஸ்தர்களும் பல்வகைச் சாதியினரும் தமிழ் நூல்களை தடையின்றிப் பாடம் சொல்லும் அவர்களை எண்ணி இங்கே வந்தனர். நமது மடத்த்க்கும் கௌரவத்தை அளித்தனர்.” என்று சொல்லியிருப்பது இவர் மதம், சாதி ஆகிய பாகுபாடுகள் இல்லாமல் தமிழ் கற்பித்தார் என்பதற்கான சான்றாகத் திகழ்கிறது.

இலக்கியப் பதிவு

திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சாமிநாதய்யர் எழுதினார். உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ நூலிலும் இவரைப்பற்றிய செய்திகள் உள்ளன

இலக்கியத்திறன்

மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் காலகட்டத்தில் தமிழ் உரைநடை இலக்கியம் உருவாகிக்கொண்டிருந்தது என்றாலும் அவர் மரபார்ந்த செய்யுள்நடையிலேயே எழுதினார். பழைய தமிழ்ச்சொற்களையும் வழக்கமான அணிகளையுமே பயன்படுத்தினார். புதுமைக் கூறுகள் அவற்றில் இல்லை. புதிய அணிகளோ சொல்லாட்சிகளோ அரிது. நவீனத்தமிழிலக்கியம் என்பது மக்கள் நேரடியாகப் படிப்பதற்குரியது. மரபிலக்கியம் தமிழஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உரியது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய நூல்கள் தமிழறிஞர் வட்டத்திற்கு மட்டும் உரியவை. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் செய்யுள்நடை சம்ஸ்கிருதச் சொற்கள் மேவியது. ’அரன் அடியார் கை கொடுக்கப் பட்டதன் பலம் ஒன்று அனந்தமாவது போல பல்பல கிளைத்து எழும்பொழுதே அட்டமெய்யுடையான் ஆலயத்து இடை ஆல் அரசு என முளைத்த பல் களையே’ என்னும் வரி ஓர் உதாரணம்.

 
காம தகன நினைத் தொழுதேன்
காலகால நினைத் தொழுதேன்
சோமசூட நினைத்தொழுதேன்
துணைவி விடாது வீற்றிருக்கும்
வாம பாக நினைத் தொழுதேன்
மதூக வனத்தாய் நினைத்தொழுதேன்
ஓம உருவ நினைத்தொழுதேன்..

என்பது போன்ற எளிய பாடல்களும் இவர் நூல்களில் உள்ளன.

அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்றவை அவருக்கு உகந்த நூல்வடிவங்கள். பெரும்பாலும் ஆசிரியப்பாவிலேயே எழுதியிருக்கிறார். ஆகவே அவரை கம்பனோடு அக்கால அறிஞர்கள் சிலர் ஒப்பிடுவதுண்டு. மழவை மகாலிங்கையர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி

தருமைவளர் குமரகுரு முனிவன் கல்வி சார்
பகழிக்கூத்தன் என தரணியோர் சொல்ல
இருவருமே நன்கு பிள்ளைத் தமிழைச் செய்ததற்கு
ஏற்றவர் என்றிடும் உரை வென்றதம்மா
அருமைபெறு காவை அகிலாண்டவல்லி அம்மை
மேன்மேல் படிப்பு நற்றமிழை ஆய்ந்த
சுருதி நெறி தவறாத குணன் மீனாட்சி சுந்தரமால்
அன்பினொடு சொல்லும்போதே

என்ற பாடலில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் பிள்ளைத்தமிழ் பாடும் திறன் குமரகுருபரருக்கும் கல்வித்திறன் பகழிக்கூத்தனுக்கும் நிகரானது என்று கூறுகிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சைவராயினும் வைணவ தெய்வங்களையும் பாடியிருக்கிறார்.

“எண்ணிய குடும்பலிங்க நாயகரை
இலங்கும் ஆராவமுதரை சீர்
நண்ணிய சைவர் யாவரும் கண்டு
நாடொறும் தந்தை தாய் என்றே
கண்ணிய சிறப்பில் போற்றிடுவாரேல்
கருது பல்போகமும் துய்த்துப்
புண்ணிய மிகுந்த பெரும் சிவலோகம்
புக்கு வாழ்ந்து அமர்வது சரதம்

என்று பாடியிருக்கிறார்.

மறைவு

மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876-இல் தமது 61-ஆவது வயதில் மறைந்தார்.

நூல்கள்

இவர் எழுதிய நூல்களில் சில:

  1. திருவாரூர்த் தியாகராசலீலை
  2. திருவானைக்காத் திருவந்தாதி
  3. திரிசிராமலை யமக அந்தாதி
  4. தில்லை யமக அந்தாதி
  5. துறைசை யமக அந்தாதி
  6. திருவேரகத்து யமக அந்தாதி
  7. திருக்குடந்தை திரிபந்தாதி
  8. சீர்காழிக் கோவை
  9. குளத்தூர்க்கோவை
  10. வியாசக்கோவை
  11. அகிலாண்டநாயகி மாலை
  12. அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்
  13. சிதம்பரேசர் மாலை
  14. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  15. திருநாகைக்காரோண புராணம்
  16. பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி
  17. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
  18. பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
  19. திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்
  20. ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
  21. வாட்போக்கிக் கலம்பகம்
  22. திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல்
  23. ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்
  24. அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்
  25. திருக்குறுக்கை புராணம்
  26. சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
  27. குசேலோபாக்கியானம்
  28. கோவிலூர் புராணம்
  29. சித்திரச் சத்திர புகழ்ச்சி மாலை
  30. திருமயிலைப்புராணம்
  31. கோமளவல்லி பிள்ளைத்தமிழ்
  32. திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்
  33. திருவிடைக்கழி குறவஞ்சி
  34. ஆற்றூர் புராணம்
  35. விளத்தொட்டி புராணம்
  36. வாளொளிப் புற்றூர் புராணம்
  37. திருக்குறுக்கை புராணம்
  38. திருஞானசம்பந்தர் பதிற்றுப்பத்து அந்தாதி
  39. மண்ணிப் படிக்கரை புராணம்
  40. ஸ்ரீ காசி ரகசியம்
  41. கன்னபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
  42. ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி பிள்ளைத்தமிழ்
  43. திருவாவடுதுறை யமக அந்தாதி
  44. மாயூர புராணம்
  45. தனியூர் புராணம்
  46. வீரவனப் புராணம்
  47. திருவிடைமருதூர் உலா
  48. சுப்ரமணிய தேசிகர் மாலை
  49. திருப்பெருந்துறை புராணம்
  50. அம்பர்ப்புராணம்
  51. ஆதி குமரகுருபரர் சரித்திரம்
  52. திருவரன்குளப் புராணம்
  53. மருதவாணர் புராணம்
  54. ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்
  55. கற்குடி மாலை
  56. எறும்பீச்சரம் வெண்பா அந்தாதி
  57. கீழைச் சிந்தாமணி
  58. தண்டபாணி பதிற்றுப்பத்து அந்தாதி

துணைநூல்கள்,சான்றுகள்

  • திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் -உ.வே.சாமிநாதய்யர்
  • ‘என் சரித்திரம்’ உ.வே.சாமிநாதய்யர்
  • சைவப் பெருவெளியில் காலம். இரா.இராஜசேகரன். நர்மதா வெளியீடு