first review completed

மாமண்டூர் கணிமான் குன்று

From Tamil Wiki
Revision as of 23:02, 14 July 2023 by Madhusaml (talk | contribs)
கணிமான்குன்று குகை, (புகைப்படம் பொன் கார்த்திகேயன்)

மாமண்டூர் கணிமான் குன்று வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) சமணத்தலங்களில் ஒன்று. இங்கு சமணக்குடைவரை உள்ளது.

இடம்

மாமண்டூர் வடஆர்க்காடு மாவட்டத்தில் செய்யாறு தாலுகாவைச் சார்ந்த சிற்றூர் காஞ்சிபுரத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. மாமண்டூரில் தெற்கு வடக்காகக் காணப்படும் மலைத்தொடரில் பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில்களும் உள்ளன. இந்தக் குடைவரைக் கோயில்களிருந்து ஒரு அரை கிலோமீட்ட்ர் வடக்கில் இயற்கையாக அமைந்த குகை ஒன்றுள்ளது. இரு பெரும் பாறைகளாலான இந்த குகையின் முகப்புப் பகுதியில் தண்ணீர் வடிவதற்கேற்றவாறு நீண்ட பள்ளமான அமைப்பு வெட்டப்பட்டிருக்கிறது

கல்வெட்டு

கணிமான் குன்று கல்வெட்டு, {புகைப்படம் பொன் கார்த்திகேயன்)

தண்ணீர் வடிவதற்கான வழிக்கு மேலாக உள்ள இடத்தில் நான்கு குறுகிய வரிகளாலான பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம் பின் வருமாறு:-

கணிமான்

தேனூர் தந்தகோன் குன்று

செய்தான் தச்சன் சிறு

....வன்

தேனூரைக் கைப்பற்றிய கணிமான்

என்ற சிற்றரசன் இங்கு குன்றினை (குகை) அமைக்க ஏற்பாடு செய்தான் எனவும், அதனை சிறுவன் என்ற தச்சன் நிறைவேற்றினான் எனவும் பொருள்படும்.இங்குள்ள கல்வெட்டு எழுத்துக்கள் நல்ல வரிவடிவம் பெற்றிருப்பதை அடிப்படையாகக்கொண்டு, இது கி. பி, 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

கல்வெட்டு குறிப்பிடும் கணிமான்

என்ற சிற்றரசன் 'தேனூர் தந்தகோன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இவன் தனது எதிரியைப் போரில் வென்று தேனூரைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தவன் என்பது புலனாகிறது. ஆனால் இந்த சிற்றசரன் எந்த அரச பரம்பரையைச் சார்ந்தவன் என்பது பற்றியும், அவனது வரலாறு பற்றியும் நமக்கு வேறெந்த செய்திகளும் தெரியவரவில்லை .

குகை

குகையைத் துறவியர் உறைவதற்கேற்றவாறு செய்த தச்சனின் பெயரில் ஓரிரு எழுத்துக்கள் மறைந்த போதிலும், இது 'சாளவன்’ என்னும் பெயரைக் குறிக்கிறது என்றும், இவன் சமண சமயத்தவன் என்றும் ஒரு கருத்து நிலவுகிற

அதாவது குகையினுள் மழை நீர் வடியாதவண்ணம் தச்சன் முகப்பிலுள்ள பள்ளமான பகுதியினை வெட்டியமைத்தான் என்பது தெரியவருகிறது.

இந்தக் குகையில் கற்படுக்கைகள் எவையும் இல்லை. கல்வெட்டில் சமண முனிவர் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் மாமண்டூரைப் போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மலைக் குகைகளில் சமண சமய அறவோர்கள் வாழ்ந்திருப்பதையும், ஆங்கு காலத்தால் முந்திய பிராமிக் கல்வெட்டுகள் இடம் பெற்றுருப்பதையும் கருத்திற்கொண்டு இக்குகைகளிலும் சமணத் துறவியர் உறைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த குகையில் கற்படுக்கைகள் வெட்டுவிக்கப்படாவிட்டாலும் குகையின் அடித்தளப் பகுதி ஓரளவு சமமாக இருப்பதால் துறவியர் தங்க ஏற்றதாக இருந்திருக்கிறது. அதனால் தான் படுக்கைகள் தோற்றவிக்கப்பட வேண்டிய அவசியம் எழவில்லை எனலாம். இதற்கு அருகில் பெரிய ஏரி ஒன்றும் உள்ளது பரந்த நிலப்பகுதியும், நீர் நிறைந்த ஏரியும், அதனை ஒட்டியமைந்த மலைத்தொடரும் ஆகிய இத்தகைய இயற்கையமைப்பினால் துறவியர் இங்கு தவமேற்கொண்டு அருளறம் பரப்ப ஏற்ற சூழ்நிலை இருந்திருக்கிறது . (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.