under review

மலேசிய ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 16:41, 2 November 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம் மலேசியாவின் பழமையான நாகம்மன் ஆலயங்களுள் ஒன்று. இக்கோவில் கோலாம்பூரில் அமைந்துள்ளது. == ஆலய அமைவிடம் == கோலாலம்பூர் மாநிலத்திலுள்ள பங்சார்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Naga 03.jpg

ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம் மலேசியாவின் பழமையான நாகம்மன் ஆலயங்களுள் ஒன்று. இக்கோவில் கோலாம்பூரில் அமைந்துள்ளது.

ஆலய அமைவிடம்

கோலாலம்பூர் மாநிலத்திலுள்ள பங்சார் நகரின் தொடர்வண்டி நிலையத்திற்குப் பின்னால் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஜாலான் லெங்கோ அப்துல்லாவில் நுழைந்து இந்த ஆலயத்தை அடையலாம்.

வரலாறு

1945 – ஆம் ஆண்டு பாம்பு புற்று ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை பாம்பாட்டிச் சித்தர் ஒருவர் கண்டுபிடித்தார் என்ற கருத்து உள்ளது. இதுவே நாகேஸ்வரி அம்மன் கோவிலின் இடமானது. இந்த பாம்பு புற்றின் அருகே குடியானவர்கள் நாகேஸ்வரி அம்மனுக்கு கோவில் எழுப்பினர். பின்னாளில் அவ்விடத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் திட்டத்தால் ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டமிருந்தது. ரயில் தண்டவாளம் உருவாக்க முடியாமல் தொடர்ந்து பழுதானதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.  நாகேஸ்வரி அம்மனுக்கு சாந்தி பூஜை நிகழ்த்தினர். பூஜையின் முடிவில் அங்கிருந்து காளீஸ்வரி என்ற பெண்ணிற்கு சாமி கொண்டு ஆடினாள். அவள் நாகேஸ்வரி அம்மன் பழைய கோவிலில் குடியிருப்பாள் என அருள் வாக்கு கொடுத்ததால், காலை வேளை பூஜைகள் பழைய கோவிலிலும், அந்திக்கு பின்பான பூஜைகள் புதிய கோவிலிலும் நடைபெறுகிறது. 1977-ஆம் ஆண்டு நகர மேம்பாட்டு வாரியம் நிலம் வழங்கி தனியாக புதிய கோவில் கட்டவும் ஏற்பாடு செய்தது.

ஆலயத்திலுள்ளத் தெய்வங்கள்

நாகேஸ்வரி அம்மன்

ஆலயத்தின் பிரதான தெய்வமான நாகேஸ்வர் அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். ஐந்து தலை நாகம் குடைப்பிடிக்க, வலது கரத்தில் கத்தியும் இடது கரத்தில் கபாலமும் தாங்கி அரை பத்மாசன நிலையில் நாகேஸ்வரி அமர்ந்துள்ளாள். வலது பின்புறக் கையில் உடுக்கையும், இடது பின்புறக் கையில் சூலமும் தாங்கிப் பிடித்துள்ளாள். கீரிடத்திற்கு பின்னால் அக்கினி ஜுவாலையும் அமைக்கப்பெற்றுள்ளது. யாளி வாகனம் கொண்டு இவள் அருள் பாலிக்கிறாள்.

பாம்புப் புற்று
Naga 04.jpg

நாகேஸ்வரி அம்மனின் புது ஆலயத்திற்கு நடுவில் இந்தப் பாம்புப் புற்று அமைந்துள்ளது. நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பிரதான சின்னம் இதுவாகும். இந்தப் புற்றில் இரண்டு நாகங்கள் வசிப்பதாகக் நம்பிக்கை உள்ளது. அதை எடுத்துக்காட்டும் விதமான புற்றிற்கு முன்பு இரட்டை நாகங்கள் சேர்ந்தாற்போல் உள்ள சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நாகங்கள் இரவிலேயே வெளிவருபவை என்றும், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இவை புற்றுக்குள் மறைந்தே இருக்கும் என்ற நம்பிக்கையும் ஊர் மக்களிடம் உள்ளது.

ரேணுகா பரமேஸ்வரி
Naga 01.jpg

பாம்பு புற்றிற்கு முன்பு ரேணுகா அம்மனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெறும் முகச்சிலையாக அமைக்கப்பட்டுள்ளாள். இவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைப்பிடித்துள்ளது. கிரீடத்திற்கு பின்னால் அக்கினி ஜுவாலைத் தாங்கியுள்ளாள்.

ஏனையத் தெய்வங்கள்

நாற்கரங்களோடு துர்க்கை இந்த ஆலயத்தில் அமைக்கப்பெற்றுள்ளாள். மகிடன் தலைமேல் நின்றுள்ளது போன்று இவள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரிக்கு வலது மற்றும் இடது புறங்களில் முருகனும் பிள்ளையாரும் அமைக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு சிலை உள்ளது. நவக்கிரகச் சன்னதி தனியே வைக்கப்பட்டுள்ளது. மதுரைவீரனுக்கும் காளிக்கும் சிலை வைத்துள்ளனர். நாகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தொன்மம்

ஆலயத்தை ஒரு வெள்ளை நாகம் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ஒரு முறை இந்த ஆலயத்தைக் கொள்ளையடிக்க சிலர் முயன்றுள்ளனர். அவர்கள் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் கருவறைக்கு முன்பு வெள்ளை நாகம் ஒன்று தோன்றி அவர்களைப் பார்த்துக் கோபமாகச் சீறியுள்ளது. அப்பொழுது திருட வந்தவர்கள் ஓட முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் உடல்கள் செயலற்றுப் போயுள்ளன. பின்னர், அத்திருடர்களின் மனைவிமார்கள் அம்மனுக்குப் பூசை வைத்து மன்னிப்புக் கோரியுள்ளனர். அதற்கு பிறகு, அவர்களின் உடல் நலமடைந்ததாக இக்கோவிலைப் பற்றிய தொன்மக் கதை உள்ளது.

ஆலயப் பூசைகள்

ஆலயத்தில் நாள்தோறும் நித்தியப் பூசைகள் நடக்கின்றன. அதுமட்டுமல்லாது, நாக தோஷம் நீங்க இந்த ஆலயத்தில் சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. தங்களுடைய ஜாதகத்தில் 'ராகு' மற்றும் 'கேது' ஆகிய கிரகங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் சிறப்புப் பூசையில் கலந்து கொள்கின்றனர். அதோடு, 27 வாரங்களுக்குச் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்தாற்போல் ஆலயத்திற்கு வந்து பக்தர்கள் அம்மனிடத்தில் வேண்டுதல் வைக்கின்றனர்.

ஆலயத் திருவிழா

ஆலயத்தின் திருவிழா வருடா வருடம் ஆடி மாதம் நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்குத் திருவிழா செய்கிறார்கள். அன்றைய தினத்தில் தீமிதி உற்சவமும் ஆலயத்தில் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள் 48 நாட்களுக்கு விரதமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்

  • Batumalai, K.(2009 January 26). Sri Nageswary Amman Temple, Bangsar (Kuala Lumpur). Mystic Temples Of Malaysia. http://mysticaltemplesofmalaysia.blogspot.com/2009/01/sri-sakti-nageswari-amman temple.html?view=magazine
  • Monogaran, P.(2013 March 24). Sri Nageswari Amman Temple, Bangsar. Malaysian Temples Let history remember the temples of Malaysia. Awareness begins here!. http://www.malaysiantemples.com/2013/03/sri-nageswari-amman-temple-bangsar.html



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.