மலேசியத் தமிழர் கலைமன்றம்

From Tamil Wiki
Revision as of 19:19, 26 October 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "மலேசியத் தமிழ் கலைமன்றம் மலேசியாவில் ஆகப்பழமையான நாடக மன்றம் ஆகும்.  மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை  நாடக வடிவில் நிலைக்கச் செய்வதே மலேசியத் தமிழர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மலேசியத் தமிழ் கலைமன்றம் மலேசியாவில் ஆகப்பழமையான நாடக மன்றம் ஆகும்.  மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை  நாடக வடிவில் நிலைக்கச் செய்வதே மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் நோக்கமாகும்.

முழக்கம்

முத்தமிழ் முழங்கும் நற்கலை வாழி

வரலாறு

மலேசிய தமிழர் கலைமன்றம் 1960ல் அந்தோனிசாமி, குகினன், ஹமீது, கே. எஸ். மணியம், வெங்கடாசலம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப் பெயர் 'கூட்டரசு மலாய் மாநிலங்கள் தமிழர் கலைமன்றம்' என்பதாகும். மலேசிய தமிழர் கலைமன்றம் என்ற பெயர் 1965 ல் வழங்கப்பட்டது.

இக்கலைமன்றத்தின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 6, 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தஆழி அருள்தாசன் கலைமன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். கலைமன்றம் சங்கம் 1420 என்ற பதிவு எண்ணுடன் அதிகாரப்பூர்வ பதிவு கண்டது. மாநில ரீதியில் மட்டுமே பதிவு பெற்றிருந்த இக்கலைமன்றம் தேசிய ரீதியில் பதிவு காணவேண்டும்  என்ற நோக்கத்தில் 2016ல் மறுபதிவு கண்டது. அதன்வழி இரண்டு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. முதல் மாற்றம் கலைமன்றம் PPM-011-10-0702016 என்ற புதிய பதிவு எண்ணைப் பெற்றது. இரண்டாவது மாற்றம் கலைமன்றத்தின் செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 14இல் இருந்து 21ஆக மாறியது.

நோக்கங்கள்

தமிழர் பண்பாட்டை அனைவரும் அறியச் செய்யும் வகையில் தமிழர் கலைகளான நாடகம், மேடை படைப்புகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுப்பது.

கலை, இசை, நடனம் ஆகியவற்றை ஊக்குவிப்பதும் மக்களை மகிழ்விப்பதற்காக நிகழ்ச்சிகள் நடத்துவதும்.

தொண்டு நிறுவனங்களுக்கும் தொண்டு நோக்கங்களுக்கும் உதவும் பொருட்டு மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது.

மேற்கூறிய நோக்கங்கள் நிறைவேறும் பொருட்டு மன்றம் முடிவு செய்யும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

உறுப்பியம்

மலேசிய தமிழர் கலைமன்றத்தில் மலேசியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து தமிழர்களும் உறுப்பியம் பெறலாம். ‘தமிழர்’ என இங்கு சொல்லப்படுவது இந்திய நாட்டைப் பூர்வீகமாகவோ தாயகமாகவோ கொண்ட அனைவரையும் குறிக்கும். இவர்களைத் தவிர்த்து, தமிழ் மொழியில் பேசுபவர்களும் தமிழர் கலைகளின்பால்  ஆர்வம் கொண்டுள்ளவர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

கலைமன்றத் தலைவர்கள் வரிசை

திரு ஆழி அருள்தாசன்                    1960 - 1977

திரு P ஷண்முகநாதன் (பி எஸ் நாதன்)              1977 - 1987

திரு ஆர் எஸ் கந்தசாமி                     1987 - 1989  

திரு P ஷண்முகநாதன் (பி எஸ் நாதன்)            1989 - 2007

திரு எம் பாலகிருஷ்ணன்                2007 - 2009

திரு எம் ஏ கண்ணன்                     2009 - 2010

திரு எம் கிருஷ்ணன் (காப்பார் கிருஷ்ணன்)         2010 - 2011

டாக்டர் எம் சுப்ரமணியம் (எம் எஸ் மணியம்)         2011  தொடங்கி இன்று வரை

முழுநீள நாடகங்கள்

1960 – யார் குற்றவாளி? – குற்றப் புலனாய்வு கதை. எதிர்பாராத நபர்கள் கூட குற்றம் செய்யக்கூடும் என்ற செய்தியை வழங்கிய நாடகம். எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1962 – மின்னொளி – காதல் கதை. இதில் முக்கியமான கதாபாத்திரம் ஓர் கலைஞன். பேரும் புகழும் அடைய ஒரு கலைஞன் அனுபவிக்கக் கூடிய சிரமங்களை இந்நாடகம் சித்திரித்தது. ஏழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1963 – நினைவுச் சின்னம் – நாட்டுப்பற்று பற்றிய கதை. இநாட்டுத் தமிழர்களிடையே நிலவும் நட்டுப் பற்றை எடுத்துக் காட்டும் நாடகம். இந்நாடகத்தின் வெற்றி மலேசிய தமிழர் கலைமன்றத்தின் நாடகங்கள் என்றால் நிச்சயமாகத் தனித்துவம் மிக்க சிறப்பு இருக்கும் என்ற பெயரை ஈட்டித் தந்தது. எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1964 – வாடாமலர் – காதலுக்கு அழிவில்லை என்றும் மறுபிறவி வரை தொடருமென்றும் எடுத்துக் கூறிய கதை. குடும்ப உறவுகளுக்கும் இந்நாடகம் முக்கியத்துவம் வழங்கியது. ஒரே காட்சியில் இரண்டு குழந்தைகள் பாலர் பருவம் அடைந்து பின் வயோதிகராவதைச் சித்திரித்தது இந்நாடகம். அக்காட்சி அமைக்கப்பட்ட நுட்பம் நாடக ஆர்வலர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1965 – உயிரோவியம் – காதலும் மர்மமும் நிறைந்த கதை. ஒரு ஓவியனின் வாழ்க்கையில் நடப்பவற்றைச் சித்திரிக்கும் நாடகம். இரண்டு மாடி வீட்டின் உட்புறத்தை காட்டும் காட்சியமைப்பும் ஒரு பூங்காவில் அருவி ஒன்று தற்றூபமாக நீரைக் கொட்டும் காட்சியமைப்பும் இந்நாடகத்தின் சிறப்பு அம்ட்சங்கள். நாடக ஆர்வலர்களின் கோரிக்கையின் பேரில் இந்நாடகம் சிங்கப்பூரின் விக்டோரியா அரங்கைல் மேடை ஏறியது. எழுத்துமியக்கமும் ஆழி அருள்தாசன்.

1966 – ஒரே குரல் – கூடா உறவைப் பற்றி கூறும் மர்மம் நிறைந்த கதை. ஒரு தந்தை தன் மகளுடன் தகாத உறவு கொண்டிருப்பதைச் சித்திரிக்கும் நாடகம். காட்சி மாற்றம் இல்லாமல் ஒரே காட்சியமப்பில் அமைந்த நாடமானாலும் சிறிதும் சலிப்புத் தட்டாமல் கதையோட்டம் அமைந்திருந்ததால் அதன் விறுவிறுப்புக்காகப் பாராட்டு பெற்ற நாடகம். எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1970 – நள்ளிரவில் – தொடர் கொலைகளைப் பற்றிய குற்றப் புலனாய்வுக் கதை. தனக்கு துரோகம் இழைக்கும் மனைவியைக் கொலை செய்யும் ஒரு கணவன் அதனால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு இரவும் நள்ளிரவில் ஒரு கொலை செய்வதைச் சித்திரிக்கும் நாடகம். எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன்.

1972 – கடாரம் – வரலாறும் கற்பனையும் கலந்த கலைமன்றத்தின் முதல் நாடகம். இந்நாடகம் கலைமன்றத்துக்கு இறவா புகழை ஈட்டித் தந்ததோடு மட்டுமின்றி இன்று வரை நாடக் ஆர்வலர்கள் மனங்களில் நிலைத்திருக்கிறது. சோழ அரசன் தம் பரிவாரங்களுடன் இப்போது நாம் கெடா என்றழைக்கும் கடார மண்ணில் இறங்கியதையும் அதனைத் தொடர்ந்து நடைபெறுபவற்றையும் சித்திரிக்கும் கதை.  தமிழர்களும் மலாய்க்காரர்களும் கதாமாந்தர்களாக இருந்ததால் நாடகத்தில் தமிழ்மொழியும் மலாய்மொழியும் பப்பட்டன். அது மட்டுமின்றி இந்நாடக்ம் முழுக்க முழுக்க மலாய்மொழியில் இரண்டு நாள்களும் தமிழ்மொழியில் எட்டு நாள்களும் அரங்கேறியது. கோலாலும்பூரைத் தவிர்த்து இந்நாடகம் பினாங்கிலும் சிங்கப்பூரிலும் மேடை ஏறியது. மொத்தத்தில் இந்நாடகம் 25 முறை அரங்கேற்ரம் கண்டது. இம்மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்நாடகம் 1974இல் தமிழகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனுடன் உயிரோவியம் நாடகமும் தமிழகத்தில் அரங்கேறியது. இந்தப் பெருமைகளைத் தவிர்த்து முற்றன் முதலில் டிராமாஸ்கோப் அல்லது அகன்ற மேடை நாடகமாக அரங்கேறிய பெருமையும் கடாரம் நாடகத்துக்கு உண்டு. இந்நாடகத்தில் கப்பல் ஒன்று கடலில் தீப்பிடித்து எரிவதும் இருண்ட குகைக் காட்சியும் சிறப்பான காட்சியமைப்புகளாக இருந்தன. எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன். இந்நாடகமே ஆழி அருள்தாசன் கடைசியாக இயக்கிய நாடகம்.

1978 – முல்லைத் தேர் – தமிழ் இல்லக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இது ஆழி அருள்தாசன் அவர்களால் மேடை படைப்புக்கு ஏற்ற வகையில் எடுத்தாளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த நாடகம் அரங்கேற்ரம் காணும் முன்பே 1976இல் ஆழி அருள்தாசன் இயற்கை எய்தினார். அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து நாடகத்தை இயக்கும் பொறுப்பை மூத்த நடிகரும் மன்றத்தின் உருவாக்கத்துக்குப் பொறுப்பான ஐவரில் ஒருவரான ஜோ அந்தோணிசாமி ஏற்றுக் கொண்டார். முல்லைத் தேர் நாடக ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

1983 – மின்னொலி – 1962இல் முதல் அரங்கேற்ரத்தைக் கண்ட நாடகம் ஜோ அந்தோனிசாமியின் இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.

1984 – இருளிலே மோகனம் – ஆழி அருள்தாசனின் ஈடுபாடு இல்லாமல் மலேசிய தமிழர் கலைமன்றம் அரங்கேற்றிய முதல் நாடகம். இந்நாடகம் அதன் காட்சியமப்புகளுக்காகப் பாராட்டுகள் பெற்றது. எழுத்தும் இயக்கமும் எம் ஏ கண்ணன்.

1984 – அக்கினிப் பாதை – காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட படைப்பு. எழுத்து மயில் கிருஷ்ணமூர்த்தி. இயக்கம் ஜோ அந்தோணிசாமி.

1986 – கடாரம் – 1972இல் முதல் அரஙேற்ரத்தைக் கண்டு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகம் ஜோ அந்தோனிசாமி அவர்களின் இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.

1988 – திருமுடி – பண்டை தமிழ் இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட கதை. வரலாற்றுக்குள் கற்பனையை இழையோடவிட்டு மேடைக்கு ஏற்ற வகையில் இதை எழுதியவர் ஜி எஸ் மணியம். மன்றத்தின் தொடக்ககால உறுப்பினரான எம் எஸ் மணியம் இந்நாடகத்தை இயக்கினார்.

1996 – தெய்வத்தின் தீர்ப்பு - பண்டை தமிழ் இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட கதை. வரலாற்றுக்குள் கற்பனையை இழையோடவிட்டு மேடைக்கு ஏற்ற வகையில் இதை எழுதி இயக்கியவர் ஜி எஸ் மணியம்.

2007 – வள்ளித் திருமணம் – இதிகாசத்தை ஆதாரமாகக் கொண்ட கதை. இதை மேடைக்கு ஏற்ற வகையில் எழுதி இயக்கியவர் ஜி எஸ் மணியம்.

2017 – பொன்னியின் செல்வன் – சோழர் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதை. கல்கி இதழுக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட இந்த பொன்னியின் செல்வன் கதை பிறகு ஐந்து பகுதிகளாக நூல் வெளியீடு கண்டது. எது உண்மை வரலாறு எது இணைக்கப்பட்டக் கற்பனைக் கதை என்று பிரித்துக் கூற முடியாத அளவுக்கு பொருத்தமான வகையில் கதாமாந்தர்கள் உலா வரும் இக்கதை காலத்தைக் கடந்து நிற்கும் அற்புதமான வரலாற்ருக் கற்பனைக் காவியம். இதனை மேடைக்கு ஏற்ற மூன்று மணி நேர படைப்பாக எழுதியவர் விஸ்வர்நாதன். நாடகத்தை இயக்கியது எம் எஸ் மணியம், விஸ்வர்நாதன் இணையர். நாடக ஆர்வலர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்நாடகம் அதன் முதல் அரங்கேற்றத்தை பெட்டாலிங் ஜெயாவில் கண்டது. அதன் பிறகு பஹாங் மாநிலத்தில் மெந்தாக்காப் நகரிலும் கெடா மாநிலத்தின் கூலிம் நகரிலும் அரங்கேறியது.

குறு நாடகங்கள்

1988 – தீபச்சுடர் – எழுத்து ஜி எஸ் மணியம். இயக்கம் எம் எஸ் மணியம்.

1989 – பெரியாழ்வார் – எழுத்து ஜி எஸ் மணியம். இயக்கம் எம் எஸ் மணியம்.

2011 – மனு நீதிச் சோழன் – எழுத்து ரெ ஷண்முகம். இயக்கம் விஸ்வர்நாதன்.

2011 – வீரபாகு – வெள்ளித் திரையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயக்கம் எம் எஸ் மணியம்.

2012 – புரட்சிக் கவிஞன் – எழுத்து ஜி எஸ் மணியம். இயக்கம் எம் எஸ் மணியம்.

2014 – துரோணர் – எழுத்து ஜி எஸ் மணியம். இயக்கம் எம் எஸ் மணியம்.

மேடைக் கலைநிகழ்ச்சி

1981 – கிராமியக் கலை இரவு – பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட கலைநிகழ்ச்சி.