மலாயா மக்கள் அரசியலைப்புச் சட்டம் 1947
மலாயாவின் விடுதலைப் போராட்டத்தில் அனைத்து இனங்களையும் பல்வகை பின்னணி கொண்ட மக்களையும் ஒன்றிணைக்கும் வலுவான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கியது. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அரசியலைப்புச் சட்டத்தை இடது சாரி இயக்கங்கள் பரிந்துரை செய்தன.
பின்னணி
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் மலாயாவில் தன்னாட்சிக்கான குரல்கள் எழத் தொடங்கின. இந்தோனேசிய விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த சூழலில் மலாயாவிலும் அத்தகைய குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின. மலாயா விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க தேசிய மலாயா மலாய்க்காரர்கள் கட்சி (Parti Kebangsaan Melayu Malaya (PKMM) தொடங்கப்பட்டது அதைத் தொடர்ந்து மலாயா ஜனநாயக சங்கம் Malayan Democratic Union (MDU) அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த மலாயாவை பிரித்தானியர்கள் மீண்டும் கைபற்றியிருந்தனர். போருக்குப் பிந்தைய அரசு நிர்வாகத்தைச் சீர்படுத்த மலாயன் யூனியன் எனும் அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தினர். இப்புதிய முறையின் கீழ் மலாயாவின் பெரும்பான்மை மக்களான மலாய்க்காரர்களின் தனித்துவமான அடையாளங்களான மலாய் அரசர்களின் ஆட்சியுரிமை குறைப்பு , மலாயாவுக்குக் குடியேறிய சீன, இந்திய மக்களுக்கான தானியங்கி குடியுரிமை ஆகியவை செயற்படுத்தப்படும் என்பதால் மலாய்க்காரர்கள் மலாயன் யூனியன் ஆட்சி முறையைக் கடுமையாக எதிர்த்தனர். அந்தப் போராட்டத்தின் விளைவாக தேசிய மலாய் மக்கள் அமைப்பு United Malays National Organisation (UMNO) தோற்றுவிக்கப்பட்டது. முதலில் தேசிய மலாயா மலாய் கட்சியும் அம்னோவும் இணைந்து மலாயன் யூனியனுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். தேசிய மலாய் கட்சி மலாயாவுக்கான முழுமையான விடுதலையைப் பெற போராடியதால் தங்களது போராட்டத்தைத் தனியாக முன்னெடுக்க முடிவெடுத்தனர். தேசிய மலாயா மலாய் கட்சியின் கொள்கையும் போராட்டமும் இடது சாரித்தன்மையில் அமைந்திருப்பதால், பிரித்தானியர்களுடன் அணுக்கப்போக்கைக் கடைபிடித்த அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டன் முன்வந்தது. அம்னோவுக்கும் காலனி அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவாக, மலாயன் யூனியன் ஆட்சி முறை மீட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக, மலாயா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்க இணக்கம் காணப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மலாயா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டமே பின்னர் மலேசியா விடுதலையடைவதற்கு முன்னால் ரெய்ட் ஆணையத்தால் திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட கூட்டரசு அரசியலைப்புச் சட்டத்துக்கு வழிகாட்டியாக அமைந்தது. அரசின் புதிய அரசியலைமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத தேசிய மலாய் சங்கம் தலைமையிலான இடதுசாரி அமைப்புகளான KRIS, PKMM, API, AWAS, PUTERA, Hizbul Muslimin, PAS, மற்றும் PRM ஆகியவை இணைந்து மக்கள் அரசியலைப்புச் சட்டம் என்னும் மாற்று சட்டத்தை வடிவமைத்தனர்.மலாயா மலாய் தேசிய அமைப்பு, மலாயா ஜனநாயக அமைப்பு மற்றும் மலாயாவின் அனைத்து இனங்களையும் பிரதிபலிக்கும் பல அரசியல் அமைப்புகளும் இணைந்து அகில மலாயா நடவடிக்கை கவுன்சில் எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இவ்வமைப்பினர் இணைந்து மக்கள் அரசியலைப்புச் சட்டம் எனும் ஒருங்கிணைந்த அரசமைப்புச் சட்டத்தைப் பரிந்துரை செய்தனர், மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல், பேச்சு சுதந்திரம், இயக்கங்கள் அமைக்கும் உரிமை, ஒற்றுமை ஆகியவற்றுக்கான திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தனர். காலனிய பிரித்தானிய அரசு மக்கள் அரசியலைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மலேசிய ஜனநாயக சங்கத்தைத் தலைமையேற்று நடத்திய தான் செங் லோக் சீன வணிக மண்டபத்தில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பில் மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தை அரசு ஏற்றுக் கொள்ள செய்ய கடையடைப்பு நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஹர்த்தால் போராட்டம்
மக்கள் அரசியலைமைப்புச் சட்டப் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ள 20 அக்டோபர் 1947 ஆம் நாளன்று நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் (ஹர்த்தால்) முன்னெடுத்தனர். நாடு தழுவிய நிலையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் பொதுப்போக்குவரத்தும் நிலைகுத்திய நிலையில் ஹர்த்தால் போராட்டம் பரவலாக மக்களாதரவைப் பெற்றது. All-Malaya Council of Joint Action (AMCJA) எனப்படும் ஐக்கிய மலாயா நடவடிக்கைக் குழுவுக்கான மக்களாதரவை முடக்கும் முயற்சியாக பதிவுச் சட்டத்தைக் கொண்டு சங்கங்களின் பதிவதிகாரி AMCJA வுக்கான பதிவை முடக்கினர். அம்முடக்க நடவடிக்கையால் மக்கள் அரசியலைப்புச் சட்டத்துக்கான போராட்டமும் முடங்கி போனது.
மக்கள் அரசியலைப்புச் சட்டம் பரிந்துரை செய்த பத்து சட்டத்திருத்தங்கள்
1. அனைத்து மக்களுக்கான குடியுரிமை
2. மலாயாவும் சிங்கப்பூரும் இணைக்கப்பட்டு ஒரே நாடாகப் பிரகடனம் செய்தல்.
3. தன்னாட்சி உரிமை பெற்ற கூட்டரசும் மாநில அரசும் தேர்வு செய்யப்படுதல்.
4. மலாய் அரசர்களுக்கான ஆட்சியுரிமையை மீட்டுத் தருதல்.
5. மலாய் மக்களின் பண்பாடு, இசுலாமிய சமயத்தை மலாய்க்காரர்களே கட்டுப்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தருதல்.
6. மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை மீட்டெடுத்தல்.
7. மலாயா தீபகற்பத்தின் அனைத்து மக்களும் மலாய்க்காரர்கள் என அழைக்கப்படல்.
8. சிவப்பும் வெள்ளையும் சேர்ந்த மலாயா கொடியை உருவாக்குதல்.
9. நாட்டின் தேசிய, அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழியை அறிவித்தல்.
10. நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டைத் தொடர்புபடுத்திய விவகாரங்களை காலனி அரசும், மலாயா அரசும் இணைந்து முடிவெடுத்தல்.
போராட்ட முடக்கம்
மலாயாவில் இயங்கிய இடதுசாரி குழுவினரின் போராட்டத்தை முடக்கக் காலனிய அரசு பல கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் விதிக்கத் தொடங்கியது. 1948 ஆம் ஆண்டு ஊரடங்கு/ சட்டத்தை நடைமுறைப்படுத்தி சீன, மலாய் இன இடதுசாரித் தலைவர்களைக் கைது செய்தது. 1948 ஆம் ஆண்டு ஏறக்குறைய 5326 அரசியல் கைதிகளை நாடு முழுவதும் கைது செய்து சிறையிலடைத்தது. 1948 ஆம் ஆண்டு தொடங்கி 1960 ஆம் ஆண்டு வரையிலான ஊரடங்கு சட்டம் நடைமுறை காலக்கட்டத்தில் 29,857 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசாத்துணை
- மக்கள் அரசியலமைப்புச் சட்டப் பரிந்துரைகளும் பின்னணியும்
- மலேசிய விடுதலைக்கு முந்தைய பத்தாண்டுகள் ஆவணப்படம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.