under review

மறைமலையடிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 164: Line 164:
செப்டம்பர் 15, 1950இல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.
செப்டம்பர் 15, 1950இல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.


== உசாத்துணை ==
== உசாத்துணைகள் ==
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* http://www.tamilvu.org/ta/courses-degree-p102-p1021-html-p1021551-24748
* http://www.tamilvu.org/ta/courses-degree-p102-p1021-html-p1021551-24748
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{ready for review}}
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]

Revision as of 12:22, 30 January 2022

மறைமலை அடிகள்

மறைமலையடிகள் (வேதாசலம்) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி என்னும் பன்முகங்களை உடையவர். சமயம், சமகால இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம் (வேதம்-மறை, அசலம்-மலை). நாகப்பட்டினம் அருகே காடம்பாடி கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் மகனாக ஜூலை 15, 1876இல் பிறந்தார். வேதாசலத்தின் தந்தை பத்து வயதில் மறைந்துவிட்டார்.

வேதாசலம் சிறுவயதில் அம்மாவிடமும், திண்ணைப் பள்ளி ஆசிரியர்களிடமும் படித்துவிட்டு நாகப்பட்டினம் வெஸ்லியன் மிஷன் பள்ளியில் படித்தார். நாராயணசாமிப் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியங்களையும் முத்துவீரைய இலக்கணம் எழுதிய முத்துவீரைய உபாத்தியாரிடம் தமிழ் இலக்கணமும் படித்தார். வேதாசலம், சிவஞானபோதத்தைச் சோமசுந்தர நாயகரிடம் படித்தார். இவர் 15 - 21 வயதுக்குள்ளேயே தொல்காப்பியம் சங்கப்பாடல், சித்தாந்த சாத்திரங்கள் போன்றவற்றை நெட்டுருச் செய்துவிட்டார் என்கிறார் இவரது வரலாற்றை எழுதிய மறை. திருநாவுக்கரசு. தனிமுயற்சியில் படித்த ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை உடையவர்.

தனிவாழ்க்கை

1893இல் சவுந்திரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். ஏழு மக்களில் மகள் நீலாம்பிகை அம்மையார்.

1893இல் மனோன்மணியம் நாடகம் வெளிவந்தபோது அதைப் படித்துவிட்டு இவர் எழுதிய கடிதம் பேரா. சுந்தரம்பிள்ளையுடன் அறிமுகமாகக் காரணமானது. இவர் சுந்தரம் பிள்ளையைக் காண திருவனந்தபுரத்திற்குச் சென்றிருக்கிறார். சுந்தரம் பிள்ளை தமிழாசிரியராகப் பணியாற்றும் தகுதியுடையவர் என்ற சிபாரிசுக் கடிதத்தை இவருக்குத் கொடுத்திருக்கிறார். 1896இல் திருவனந்தபுரம் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.

1893இல் திருவனந்தபுரத்தில் இருந்த சைவசித்தாந்த சபையில் சித்தாந்த பாடம் நடத்தினார். 1898 முதல் 1911 வரை 13 ஆண்டுகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். இக்காலங்களில் பரிதிமாற் கலைஞர் இக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அடிகளாரின் மாணவர்களில் செங்கல்வராய பிள்ளை, டி.கே.சி., சோமசுந்தரபாரதி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்.

1911லிருந்து சென்னை, பல்லாவரத்தில் தன்னை சமரச சன்மார்க்க குருபோதகராக அறிவித்துக்கொண்டார். சைவப் பணியை மக்கள் பணி என ஆக்கிக்கொண்டார். சுவாமி என்ற அடைமொழி இவருடன் சேர்ந்துகொண்டது. 1914இல் கொழும்பு சென்றபோது தனிக்கூட்டங்களில் பேசியதற்குக் கிடைத்த பணத்தில் பல்லாவரத்தில் ஒரு வீடு கட்டிக்கொண்டார். மறைமலையடிகள் உணவு உண்பதில் தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதே அறிவுத்தெளிவு பிறக்கும் என்பதைத் தினமும் பின்பற்றி எனிமா எடுத்துக்கொண்டவர்.

இலக்கியவாழ்க்கை

சைவசமயம் குறித்து 5 நூல்கள், 5 ஆராய்ச்சி நூல்கள், 6 அறிவியல் நூல்கள், 11 பழம் இலக்கியம் பற்றி பொதுவான கட்டுரைகள், 1 நாடகம், 1 மறுப்பு நூல், 2 நாவல் என 30 நூல்கள் இவரால் எழுதப்பட்டவை. ஆரியன் வந்த பின்பே சாதி வந்தது; தமிழரின் சமயம் சைவமே; இதுவே பழைய சமயம்; பிற்காலப் புராணங்களில் சில பொய்யானவை; அதனால் போலிச்சைவம் தோன்றியது என்னும் கருத்துகளை தன் நூலகளில் கூறுகிறார். முருகவேள் என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார்.

மறைமலை அடிகளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. மறைமலையடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் இவரது வரலாற்றை இவரது மகன் மறை. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார்.

நூல்கள்

அடிகள் 1935இல் தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர், 1957இல் மனித வசியம், 1921இல் யோக நித்திரை போன்ற அறிவியல் நூல்களை எழுதினார். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்ற நூலில் மனிதர்களின் உடல் நலம் பேணும் வழி, உணவுப்பழக்கம், புலால் வெறுப்பு, ஆண்பெண் சேர்க்கை ஆகியன பற்றிய செய்திகள் வருகின்றன. ஆவியுடன் உரையாடும் முறை பற்றிய ஆர்வம் மறைமலையடிகளுக்கு உண்டு. கிளாஸ்டன் துரை ஆவியுடன் உரையாடியதையும் இறந்தபின் மனிதர் நிலைபற்றியும் ஒரு நூலில் கூறுகிறார்.

நாவல்

மறைமலையடிகள் நாவலும் எழுதிப் பார்த்திருக்கிறார். குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இரண்டு நாவல்களுமே தழுவல்கள். தூய தமிழில் நீண்ட வாக்கியங்களில் அமைந்த இந்த நாவல்கள் வெளிவந்த காலத்திலேயே யதார்த்தம் அற்ற படைப்பு என்னும் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கின்றன. கோகிலாம்பாள் கடிதங்கள் கடித வடிவில் அமைந்த நாவல்.

மொழியாக்கம்

1907இல் இவர் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழி பெயர்த்தார். இதற்கு ஆராய்ச்சியுரையும் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கல்லூரிகள் பாடத்திட்டத்தில் இருந்திருக்கிறது. 1908இல் எடிசன் ஆங்கிலத்தில் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிகள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேள் என்னும் புனைபெயரில் இந்நூல் வந்தது. இதில் மறைமலையடிகளின் வாழ்க்கைக்குறிப்பும் விரிவான ஆங்கில முகவுரையும் உண்டு. இலங்கைப் பள்ளிகளில் இது பாடத்திட்டத்தில் இருந்தது.

உரைகள்

மறைமலையடிகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் பயணித்து பல தனிச் சொற்பொழிவுகள் செய்து சைவம் பரப்பினார். இதன் மூலம் பல இணையர்களைச் சந்தித்தார். 1906ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாஜம் சார்பாகச் சிதம்பரத்தில் நடந்த சைவ மாநாட்டிற்குக் கொழும்பு ராமநாதன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ”Theistic Aspect of Saiva Sidhanda” , ”ஹடயோக ராஜயோக பிராணாயாமம்” என்னும் தலைப்புகளில் மறைமலையடிகள் பேசினார். பின்னர் தொடர்ந்து நாகப்பட்டினம், திருச்சி, மதுரையில் சைவமாநாடுகளில் அடிகள் பங்கு கொண்டிருக்கிறார்.

1914ஆம் ஆண்டிலும் 1917ஆம் ஆண்டிலும் இவர் கொழும்பு சென்று இரவு பகலாகத் தனிக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். 1915இல் இமயமலை சென்றபோது அங்கே ஒரு கூட்டத்தில் சைவ சமயம், சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். 1921-22ஆம் ஆண்டுகளில் இவர் கொழும்பில் இருந்தபோது சைவசித்தாந்த வகுப்பும் நடத்தியிருக்கிறார்.

பதிப்பாளர்

1903இல் முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, 1906இல் பட்டினப்பாலை ஆராயச்சி நூல்களைத் தன் மாணவர்களின் உதவியுடன் பதிப்பித்திருக்கிறார். இவ்விரு நூல்களிலும் நச்சினார்க்கினியர் உரை வேறுபடும் இடம், பாடல்களின் அழகியல் கூறுகள் வருகின்றன. பட்டினப்பாலை முகவுரையில் குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி, எழுதப்பட்டதாய்க் குறிப்பு உள்ளது. ஆனால் அது வெளிவரவில்லை.

இதழாளர்

1902இல் அடிகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லாரியில் பணியாற்றியபோது மாணவர் நலனுக்காக ஞானசாகரம் என்னும் மாத இதழை நடத்தியிருக்கிறார். வ.உ.சி. இப்பத்திரிகைக்கு ஆண்டுச் சந்தா சேர்த்திருக்கிறார். இந்தப் பத்திரிகையில் வந்த கட்டுரைகளில் மாணிக்கவாசகர் காலம், தொல்காப்பியர் காலம், தமிழ்-வடமொழி பிறத்தல் பரிமேலழகர் உரை ஆராய்ச்சி ஆகியன குறிப்பிடத்தக்கவை.

ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளையின் ’சித்தாந்த தீபிகை’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பில் மறைமலையடிகள் இருந்தபோது 5 இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றிற்கு இந்தப் பத்திரிகைகளில் உரை எழுதினார். இந்த இதழில் குறிஞ்சிப்பாட்டு உரை வந்தது. 1911இல் பல்லாவரத்தில் இவர் வாழ்ந்தபோது ஞானசாகரம் என்ற அறிவுக்கடல் பத்திரிகையை நடத்தினர். 1915இல் கொழும்பு, இமயமலைச் சாரல் எனப் பல்வேறு இடங்களில் பயணித்தபோது அறிவுக்கடல் நின்றுவிட்டது. 1906-1908ஆம் ஆண்டுகளில் (The Oriental Mystic) என்ற பெயரில் சைவ சித்தாந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்தினார்.

நூல் நிலையம்

பல்லாவரம் வீட்டில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். 1914இல் இங்கு 4000 தமிழ், வடமொழி, ஆங்கில நூல்கள் இருந்தன. பின்னர் இது பெரிய நூல் நிலையமானது. தன் இறுதிக்காலத்தில் இவர் எழுதிய உயிலில் தன் நூல் நிலையத்தைப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். தன் புத்தகங்களின் ராயல்டி தொகை மக்களுக்கே என்றும் எழுதிவைத்தார். தன் நூல்களை அச்சிட அச்சகம் ஒன்றையும் நிறுவி இருந்தார்.

சைவசமயம்

மறைமலையடிகள் தமிழகத்திலும் இலங்கையிலும் சைவம் பரப்பப் பயணம் செய்தார். சமயம் தொடர்பாக இவர் எழுதிய 5 நூல்களில் திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் (1900) பாடல்கள் சங்கப் பாடல்களின் நடையை ஒத்தவை. திருப்பாதிரிப்புலியூர் சைவ மாநாட்டில் (1902) பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என்னும் தலைப்பிலும், திருச்சி சைவ மாநாட்டில் (1927) கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா என்ற தலைப்பிலும் (1929) பேசிய பேச்சுகள் புத்தகங்களாக வந்துள்ளன.

சாதி தொடர்பாக மறைமலையடிகள் 1923இல் எழுதிய "சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், வேளாளர் நாகரிகம் பண்டைத் தமிழர், ஆரியர், தமிழர் மதம் (1940) என்னும் நூல்களின் மையம் சைவசமயம் தான். பச்சையப்பர் கல்லூரியில் நடந்த தமிழர் மத மாநாட்டில் (1940) பேசிய பேச்சு தமிழர் மதம் என்னும் நூலாக வந்தது. மதம் என்ற சொல்லே மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின் தோன்றியது; தமிழர்கள் ஒளி வணக்கம் உடையவர்; காலைக் கதிரவன் முருகன்; மாலைக் கதிரொளி சிவன்; நீரின் நிலம் பார்வதி; சிவலிங்க வடிவம் நெருப்புக் குழி என்றெல்லாம் விரிவான களத்தை எழுப்பி தமிழர் மதமும் சாதியும் தொடர்பற்றவை என்ற கருத்தைப் பூடகமாக உணர்த்துகிறார். தனவைசியர் ஊழியர் நூலில் வந்த கட்டுரை வேளாளர் நாகரிகம் (1923). மறைமலையடிகள் 1921இல் யாழ்ப்பாணத்தில் இதே தலைப்பில் விரிவாகச் சொற்பொழிவாற்றியபோது யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளை பேச்சு முடிந்ததும் ரூ.200 அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். (பவுன் ரூ.13 விற்ற காலம் அது)

தமிழ் இலக்கியகாலம்

"மாணிக்கவாசகர் காலமும் வரலாறும்” என்ற நூல் இருபது ஆண்டுகளாக ஆராய்ந்த முடிவுகள் உள்ள நூலாகும். இந்த நூல் சைவசமயக் குரவரான மாணிக்க வாசகரின் காலத்தைப் கூறுவதற்காக எழுதப்பட்டது என்றாலும், தொல்காப்பியர் ஆழ்வார்கள், சேக்கிழார் எனப் பலரின் காலத்தையும் இந்நூல் கணிக்கிறது.

பாண்டியர் கல்வெட்டுகளில் கூறப்படும் வரகுணன் மணிவாசகர் கூறும் வரகுணன் அல்லன். இதனால் மணிவாசகர் காலத்தைப் பின்னுக்குக் கொண்டுசெல்கிறார் மறைமலையடிகள். இந்த நூலில் இராமன் கற்பனைப் பாத்திரம், விநாயகர்முருகன் போன்றோரின் பிறப்பு பற்றியவை கட்டுக்கதைகளே என்பன போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. ஒருவகையில் மொத்தத் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்றைக் கூறுவதற்கு இந்த நூலைப் பயன்படுத்தி இருக்கிறார் மறைமலையடிகள் என்றும் கூறலாம்.

பட்டியல்

உரைநடை

  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
  • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை: அறிதுயில் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
  • ஞானசாகரம் மாதிகை (1902)
  • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
  • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
  • முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
  • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
  • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
  • அறிவுரைக் கொத்து (1921)
  • அறிவுரைக் கோவை (1971)
  • உரைமணிக் கோவை (1972)
  • கருத்தோவியம் (1976)
  • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
  • சிறுவற்கான செந்தமிழ் (1934)
  • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
  • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
  • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
  • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
  • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
  • திருவாசக விரிவுரை (1940)
  • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
  • துகளறு போதம், உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1899)
  • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
  • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
  • சிவஞான போத ஆராய்ச்சி(1958)
  • இந்தி பொது மொழியா? (1937)
  • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
  • வேளாளர் நாகரிகம் (1923)
  • தமிழர் மதம் (1941)
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
  • வேளாளர் யாவர்
  • சைவ சமயம்
  • தமிழர் மதம்
  • அம்பலவாணர் கூத்து
  • தமிழ்த்தாய்
  • மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • மரணத்தின் பின் மனிதனின் நிலை
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
  • தென்புலத்தார் யார்?
  • தொலைவில் உணர்த்தல்
  • வளோன் நாகரிகம்

செய்யுள் நூல்கள்

  • திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
  • சோமசுந்தரக் காஞ்சி

ஆய்வு நூல்கள்

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி

மறைமலையடிகள் ஆங்கில நூல்கள்

  • Ancient and Modern Tamil Poets (1937)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • Tamilian and Aryan form of Marriage (1936)

நாடகம்

  • சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
  • குமுதவல்லி
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)

நாவல்

  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

இதழ்

  • அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)
  • THE OCEAN OF WISDOM (1935)

இலக்கிய இடம்

அடிகளின் ஆராய்ச்சி முடிவுகள் இவரது சமகாலத்திலும் பிற்காலத்திலும் இவரது பெரும்பாலானவை ஒப்புக்கொள்ளப் படவில்லை, தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவரை ஆய்வாளராக அடையாளம் காட்டவில்லை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சைவப்பற்று, தனித்தமிழில் உறுதி என்பதற்காக இவர் கொண்டாடப்படுகிறார்.

ஆய்வு முடிவுகள் மறுப்பு

பல்லவர்களின் காலத்துக்கு முன் தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை; ஆதிசங்கரருக்கு முன்பே மாயாவாதத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது; ராமாயணம் கற்பனையான காவியம்; பாரதம் யதார்த்தமானது; ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள்; வட்டெழுத்து 6000 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கிவருகிறது என்பது போன்ற இவரின் ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமான சான்றுகளுடன் மறுத்து எழுதிய ஆய்வுகள் வந்துவிட்டன.

வரலாற்றுப் பேராசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, சத்தியநாத அய்யர், பி.பி. ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்றோர் பல்லவர்களைப் பற்றிக் கூறிய முடிவுகளுக்கு மாறானது மறைமலையடிகளின் ஆய்வு. ஆழ்வார்களின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர். பல்லவருக்கு முந்திய காலத்தது என்று கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆழமான ஆய்வுக்குட்பட்டதைத் தமிழறிஞர் அறிவர். வட்டெழுத்து வடிவம் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற அடிகளின் கருத்து கூட விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

துறவு

பல்லாவரத்தில் இருந்தபோது காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார்.

இறுதிக்காலம்

செப்டம்பர் 15, 1950இல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.

உசாத்துணைகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.