under review

மனோன்மணீயம்

From Tamil Wiki
Revision as of 22:05, 6 April 2023 by Madhusaml (talk | contribs) (Stage updated)
மனோன்மணீயம்

மனோன்மணீயம் (1891) (மனோன்மணியம்) பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய கவிதை நாடகம். தமிழில் பாடநூலாக நெடுங்காலமாக இருந்து வருகிறது. தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலான ’நீராரும் கடலுடுத்த’ இந்த நாடகத்தில் உள்ளது.

எழுத்து, வெளியீடு

மனோன்மணீயம் நாடகம் பெ.சுந்தரம் பிள்ளையால் அவர் திருவனந்தபுரத்தில் இருந்த காலத்தில் 1879ல் தொடங்கி 12 ஆண்டுக்காலம் எழுதப்பட்டு 1891 மார்ச் மாதம் வெளியாகியது. அதன்பின் எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலை 1922 ல் கே.என். சிவராஜ பிள்ளையின் ஆய்வுரையுடன் பதிப்பித்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி முதல்வராக இருந்த ஹார்விக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

எழுத்து நோக்கம்

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை இந்நாடகத்தை வடமொழி நாடகவியலை ஒட்டியும் ஐரோப்பிய நாடகவியலை தொடர்ந்தும் தமிழில் எழுதுவதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். தமிழில் செய்யுளில் நாடகங்கள் இல்லை என்பதை கருத்தில்கொண்டு இதை புனைவதாகச் சொல்கிறார். இந்தியாவில் ஆங்கிலமொழிக் கல்வி அறிமுகமானபின் அதே பாடத்திட்டத்தை அடியொற்றி தமிழ்மொழிக்கல்வியும் உருவாக்கப்பட்டது. ஆங்கில மொழிக்கல்வியில் ஷேக்ஸ்பியர் முதலியோரின் நாடகங்கள் முதன்மைப் பாடமாக இருந்தன. அதேபோல தமிழுக்கும் பயில்வதற்கான நாடகங்களின் தேவை உணரப்பட்டது. அதை தொடர்ந்து தமிழில் ஏராளமான செய்யுள்நாடகங்கள் இயற்றப்பட்டன. மனோன்மணீயம் அதில் முதல் முயற்சி

மூலம்

லிட்டன் பிரபு (Edward George Earle Lytton Bulwer-Lytton) ஆங்கிலத்தில் எழுதிய The secret way, a Lost tale of Miletus என்னும் கதைக்கவிதையை தழுவி எழுதப்பட்டது மனோன்மணீயம் நாடகம். சம்ஸ்கிருத நாடக வழக்கப்படி கதைமாந்தர்களுக்கு அவர்களின் குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டன. இந்நூலில் உள்ள கிளைக்கதையான சிவகாமி சரிதம் ஆலிவர் கோல்ட்ஸ்மித் ( Oliver Goldsmith ) எழுதிய (The Hermit ) என்னும் நீள்கவிதையை தழுவியது. மனோன்மணீயம் நாடகம் சென்னை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டபோது உ.வே.சாமிநாதய்யர். அந்த நாடகத்தில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி சுந்தரம்பிள்ளைக்குக் கடிதம் எழுத அவர் அதை திருத்தியுயள்ளார்.

நாடக அமைப்பு

பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இந்நாடகம் அமைந்துள்ளது. ஆசிரியத் தாழிசை, வெண்பா, கலித்துறை, வெண் செந்துறை, கொச்சகக்கலிப்பா, மருட்பா ஆகிய செய்யுள்வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4502 அடிகளில் இந்நாடகம் அமைந்துள்ளது.

மனோன்மணீயம் முகம், பிரதிமுகம், கருப்பம், துய்த்தல், வினை என்னும் ஐந்து அங்கங்களிலாக இருபது களங்கள்கொண்டது. முதல் அங்கம், ஐந்து களங்களும்,இரண்டாம் அங்கம், மூன்று களங்களும், மூன்றாம் அங்கம், நான்கு களங்களும், நான்காம் அங்கம், ஐந்து களங்களும், ஐந்தாம் அங்கம் மூன்று களங்களும் கொண்டுள்ளது.

கதைச்சுருக்கம்

மதுரை மன்னன் ஜீவகவழுதி தன் கொடிய அமைச்சன் குடிலனின் சூழ்ச்சியால் தன் தலைநகரத்தை மதுரையில் இருந்து நெல்லையம்பதிக்கு மாற்றுவதை அரசகுரு சுந்தர முனிவர். எதிர்க்கிறார். வேறுவழியில்லாமல் தனக்கென்று ஒரு அறை மட்டும் பெற்றுக் கொண்டு அதன் திறவுகோலைத் தன் வசம் வைத்துக் கொள்கிறார்.மன்னன் மகள் மனோன்மணி சிவபக்தை. அவள் தோழி வாணி, நடராசன் என்னும் கவிஞனைக் காதலிக்கிறாள். மனோன்மணி துறவை நாடியிருப்பவள், அவள் வளர்த்த புன்னைமரம் பூக்கிறது. கனவில் அவள் ஒருவனை காதலிப்பதாகக் காண்கிறாள்.அவள் காதல்கொண்டு நலிவடைகையில் சுந்தர முனிவர் சேரநாட்டு மன்னன் புருடோத்தமன் மனோன்மணிக்குத் தகுந்த துணைவன் என்கிறார்.வாணியின் தந்தை சகடர் ஜீவகனிடம் தன் மகள் வாணிக்கு குடிலன் மகன் பலதேவனுனை திருமணம் செய்ய எண்னியதாகவும் அவள் நடராசன் என்பவனைக் காதல் செய்வதாகவும், நடராசன் ஒரு வீணன் என்றும் ,தன் மகள் திருமணம் செய்ய மன்னவன் உதவவேண்டும் என்றும் கோருகிறான். வாணியிடம் மன்னனே அழைத்து அறிவுரை சொன்னபோதிலும் வாணி மறுத்துவிடுகிறாள்.

குடிலன் தன் மகன் பலதேவனை சேரநாட்டு அரசன் புருடோத்தமனிடம் மனோன்மணியை மணம் பேசும்பொருட்டு அனுப்புகிறான். அந்த ஓலையில் சேரன் ஆட்சிசெய்து வரும் நஞ்செய்நாடு உண்மையில் பாண்டியனுக்குரியது என்றும், மனோன்மணியை மணந்தால் அதை சேரனுக்கே தந்துவிடுவதாகவும் குடிலன் எழுதியிருக்கிறான். சேரன் சீற்றம்கொண்டு பாண்டியனை வெல்வான் என்றும், சேரனிடம் பேசி பாண்டியநாட்டுக்கு அரசனாக தன்னை நியமனம் செய்துகொள்ளலாம் என்பதும் குடிலனின் திட்டம். எண்ணியதுபோலவே அனந்தை நகரை ஆட்சிசெய்யும் சேரமன்னன் சீற்றம் கொள்கிறான். பாண்டியன் மன்னிப்பு கேட்கும் விதமாக வேப்பம் பூ மாலையும், ஒரு குடம் தாமிர பரணி நீரும் தர வேண்டும் என்றும் இல்லையேல். நெல்லை நோக்கி படை எடுத்து வருவதாக சொல்லி அனுப்புகிறான். படைத்தலைவன் நாராயணன் குடிலனின் சூழ்ச்சியை மன்னனிடம் சொன்னாலும் மன்னன் அதை செவிகொள்ளாமல் நாராயணனை கோட்டைக்காவலுக்கு நியமிக்கிறான். போர்க்களத்தில் ஜீவகனை கொல்ல முயற்சி செய்யப்பட நாராயணன் வந்து மன்னனைக் காக்கிறான். காயமடைந்த மன்னன் மயக்கம் போய் விழித்ததும் குடிலன் அவனிடம் நாராயணன் மன்னனைக் கொல்ல முயன்றதாகச் சொல்ல நாராயணனுக்கு மரண தண்டனை என்று மன்னன் ஆணையிடுகிறான்.

போரில் பாண்டியநாடு தோல்வியுற ஜீவகன் தப்பும் வழி அறியாமல் தவிக்கிறான். சுந்தர முனிவர் தன் அறைவழியாக ஒரு சுரங்கப்பாதை இருப்பதைச் சொல்லி அதன் வழியாக தப்பலாம் என்கிறார். அதை மன்னன் குடிலனிடம் சொல்ல அவன் மணம் முடிக்காமல் இளவரசியை அப்படி கூட்டிச்செல்வது தவறு என்று சொல்லி அவளை பலதேவனுக்கு மணமுடிக்கலாம் என்கிறான். குடிலனோ, மணமுடியாத பெண் இந்நேரத்தில் செல்வது தகாது என்றும், அவளுக்கு மணமுடித்துப் பின்னர் அழைத்துச் செல்லலாம் என்றும் சொல்கிறான். மனோன்மணி தந்தையின் சொல்லை ஏற்பதாகவும், பதிலுக்கு நடராஜனுக்கு வாணியை மணம் முடிக்கவேண்டும் என்றும், நாராயணனை விடுதலை செய்யவேண்டும் என்றும் கோருகிறாள். வாணியோ பலதேவனை மனோன்மணி மணம் புரிந்தால், தானும் நடராசனும் மணம்செய்யப் போவதில்லை என்று சொல்கிறாள்.

குடிலன் சுரங்கத்தின் வழியாக சென்று மறு எல்லையில் இருந்த புருடோத்தமநை காண்கிறான். குடிலனின் வஞ்சகத்தை உடனே புரிந்துகொண்ட புருடோத்தமன் குடிலனைக் கைது செய்து சுரங்கப் பாதை வழியே வருகிறான். அங்கே மனோன்மணியை காண்கிறான். தான் கனவில் கண்ட காதலி அவளே என அவனும் தான் கனவில் கண்ட காதலன் அவனே என அவளும் உணர்கிறார்கள். புருடோத்தமன் மனோன்மணியை மணக்கிறான். குடிலனின் சதியை ஜீவகன் தெரிந்துகொள்கிறான்.

தத்துவ உள்ளடக்கம்

மனோன்மணீயம் நாடகம் சுந்தரம் பிள்ளையின் சைவசித்தாந்த கொள்கைகளை உருவகரீதியாக முன்வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் கற்றறிந்த "பரமாத்துவிதம்" என்னும் சித்தாந்தந்தை உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார் என்று கூறப்படுவதுண்டு

ஏற்பு

இந்நாடகநூல் வெளிவந்ததுமே 1892 செப்டெம்பர் மாதம் மெட்ராஸ் கிறிஸ்டியந் காலேஜ் மாகஸீனில் பி.ஆர். ராஜம் ஐயர் இதை மிகவும் பாராட்டி ஒரு மதிப்புரை எழுதினார். 1893லேயே இது சென்னை பல்கலையில் பாடநூலாக வைக்கப்பட்டது. திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்த சேஷையர் 1893ல் மனோன்மணீயத்திற்கு விரிவான ஓர் ஆய்வுரையை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.ஜி.யூ.போப் 'இண்டியன் மேகஸீன் ஆண்ட் ரிவ்யூ' இதழில் இந்நூலுக்கு ஒரு விரிவான ஆய்வுரையை எழுதினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்நாட்டின் அரசுப்பாடலாக உள்ள தமிழ்த்தாய் வாழ்த்து ’நீராரும் கடலுடுத்த’ இந்த நாடகத்தில் உள்ள பாடல்

மேடையேற்றம்

மனோன்மணீயத்தை மேடையேற்ற விரும்பிய சுந்தரம் பிள்ளை அதை பம்மல் சம்பந்த முதலியாரிடம் அளித்ததாகவும், அவர் இந்நாடகம் படிப்பதற்குரியதே ஒழிய நடிப்பதற்குரியது அல்ல என்று சொன்னதாகவும் பதிவுசெய்கிறார். (சம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்கள் படனகாவ்யம், திருஷ்ட காவ்யம் என இருவகை. படனம் படிப்பதற்கும் திருஷ்டம் பார்ப்பதற்கும் உரியது). மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையின் காலகட்டத்தில் மேடையேறவில்லை. பின்னர் இதைச் சில மாற்றங்களுடன் சண்முகசுந்தர முதலியார் நாடகமாக மேடையேற்றினார் என்று ஏ.என்.பெருமாள் குறிப்பிடுகிறார்.

திரைப்படம்

மனோன்மணீயம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் பி.யூ.சின்னப்பா நடிக்க 7 நவம்பர் 1942ல் திரைப்படமாக வெளிவந்தது.

இலக்கிய இடம்

தமிழில் நவீனப்புனைவுகள் உருவாகி வந்த காலகட்டத்தில் தழுவல்கள் வழியாக செய்யுள்நாடகம் தமிழுக்கு அறிமுகமாகியது. அக்காலத்தைய செய்யுள் நாடக நூல்களில் ஒன்று மனோன்மணீயம். ஏறத்தாழ சமகாலத்தைய நாடகம் என மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரான டி.இலட்சுமண பிள்ளை எழுதிய வீலநாடகத்தைச் சொல்லலாம், அதுவும் தழுவல் நாடகமே. பின்னர் தமிழில் உருவான ஏராளமான செய்யுள்நாடக நூல்களின் முன்னுதாரணம் இந்நாடகம். கவிச்சுவை, ஓசையழகு ஆகியவை குறைவான பண்டிதநடை கொண்ட படைப்பாயினும் தொடக்கப்புள்ளி என்னும் வகையில் முக்கியமான ஆக்கம். "தமிழும் ஆங்கிலமும் கலந்து பெற்ற அரும்பெறல் மகவு' என்று இந்நாடகத்தை எஸ்.வையாபுரிப்பிள்ளை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page