போந்தைப் பசலையார்
போந்தைப் பசலையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கிய தொகுப்பில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
போந்தைப் பசலையார் என்னும் பெயரிலுள்ள போந்தை என்பதின் பொருள் பனங்குருத்து. அதனைப் போல பிரிவாற்றாமையினால் பசலையுண்ணப்பட்டவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் இவருக்கு போந்தைப் பசலையார் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
போந்தைப் பசலையார் இயற்றியதாக சங்கத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூறுவின் 110- வது பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. புகார்த் தெய்வத்தை நோக்கிப் பெண்கள் சூள் உரைக்கும் வழக்கம் இப்பாடலுள் காணப்படுகின்றது . காதலன் செயலெல்லாம் தன் கண்ணுள்ளேயே நிற்கின்றதென்று கூறும் காதலியின் மனோபாவம் சுவையுடையதாக உள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
அகநானூறு 110
- நெய்தல் திணை
- தலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
- இந்தப் பாடல் ஒரு நிகழ்வின் தொடர் போல அமைந்துள்ளது.
- மாலைபோன்று நெருங்கிய தோழியரோடு , கடவிலே ஒருங்கு சேர்ந்து விளையாடியும் , கடற்கானவிலே சிற்றில் இழைத்தும் . சிறுசோறு ஆக்கிக்குவித்தும் வருந்திய களைப்புத் தீர, அவர்கள் இளைப்பாறி இருந்தார்கள்
- ஒருவன் அவர்களருகே வந்தான். "பெரிய மென்மையான மூங்கில்போலும் தோள்களையும், மடப்பத்தையும் உடையதல்ல பெண்களே. பசுலும் ஒளியிழந்தது . மிகவும் தளர்ச்சி உடையேன் . மெல்லிய இலைப்பரப்பிலே நீங்கள் இடும் விருந்தினை யானும் உண்டு , கல்லென்ற ஆரவாரமுடைய இந்தச் சிறுகுடியிலே தங்கிச் சென்றால் என்னவோ ? என்றும் சொன்னான் .
- அவனைக் கண்டு , தலைகவிழ்ந்த முகத்தினர்களாக ஒருவர் முதுகுப்பின் மற்றொருவராக ஒளிந்துகொண்டு, இழும் என்னும் மெல்லிய குரலிலே, "இவை நுமக்கு உரியன அல்ல ; இழிந்த கொழுமீனாலாகிய உணவு" என்றார்கள்
- "நீண்ட கொடிகள் அசைந்து பறக்கும் நாவாய்கள் தோன்றுகின்றன . அவற்றைக் காண்போமா ? ' என்று கூறி, அவர்களது சிற்றிலைக் காலாற் சிதைத்துவிட்டு, அங்கு நில்லாது ஓடிப் பெயர்ந்தவன், பலருள்ளும் , இவளையே குறிப்பிட்டுப் பார்க்கும் பார்வையோடு, '"நல்ல நுதலினையுடையவளே ! யான் போகின்றேன்"என்று இவள் நெஞ்சம் அழிந்திடக் கூறினான் .
- இவளும், " நீ போவாயாக" என்று கூறியபோதும் .இவளை நோக்கியவனாகத் , தனது தேரின் கொடுஞ்சியினைப் பற்றிக் கொண்டவனாக , அவனும் நின்றான். இன்றும் இவள் கண்ணுள் அவன் அன்று நின்ற நிலை நிற்பது போலிருக்கிறது
- "இதனை அன்னை அறியினும் அறிவாளாக ! அலர் கூறும் வாயினரான இம் மெல்லிய சேரியினர் கேட்பினும் கேட்பாராக ! ' இஃதன்றிப் பிறிதொன்றும் இல்லாததனை நீ அறியுமாறு கூறிக் , கொடுஞ்சுழிகள் மேவிய புகாரிடத்துள்ள தெய்வத்தை நோக்கி, நினக்குக் கடிய சூளும் யான் செய்து தருவேன்" என தோழி கூறுகிறாள்
பாடல் நடை
அகநானூறு 110
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து,
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே
உசாத்துணை
மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்