பொன்னீலன்

From Tamil Wiki
Revision as of 19:26, 31 January 2022 by Jeyamohan (talk | contribs)
பொன்னீலன்

பொன்னீலன் ( 1940) தமிழில் நாவல்களும் கதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வை கொண்டவர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். முற்போக்கு இலக்கியம் மற்றும் சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டு நூல்களையும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

பொன்னீலனின் இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்சலன். கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகேயுள்ள மணிகட்டிப் பொட்டல் என்ற கிராமத்தில் 15 டிசம்பர் 1940ல் சிவ. பொன்னீலவடிவு - அழகிய நாயகி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். அழகியநாயகி அம்மாள் தன் முதுமைக்காலத்தில் எழுதிய கவலை என்னும் தன்வரலாறு ம் புகழ்பெற்றது. பொன்னீலனின் வீட்டுப்பெயர் சபாபதி. மணிகட்டிப்பொட்டலிலும் நாகர்கோயிலிலும் படிப்பை முடித்த பொன்னீலன் எம்.ஏ., எம்.எட் பட்டம்பெற்றவர்.

தனிவாழ்க்கை

பொன்னீலன் மனைவியுடன் 80 ஆவது அகவைநிறைவு விழாவில்

பொன்னீலன் 1967-ஆம் ஆண்டு உமாதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், கல்வித்துறை உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் என முப்பத்தேழு ஆண்டுகள் கல்விப்பணியாற்றியுள்ளார்.

இலக்கியவாழ்க்கை

பொன்னீலன்

பொன்னீலன் கோயில்பட்டியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கோட்பாட்டாளர்களில் ஒருவரான நா.வானமாமலையின் மாணவரானார். அவர் நடத்திய ஆராய்ச்சி என்னும் ஆய்வுவட்டத்தில் செயல்பட்டார். ஆராய்ச்சி இதழில் கட்டுரைகள் எழுதினார். ஆசிரியர் சங்க செயல்பாடுகளில் ஈடுபட்டார். நெல்லையில் இருந்த நாட்களில் இலக்கிய விமர்சகரும் தாமரை இதழின் ஆசிரியருமான தி. க. சிவசங்கரன் அறிமுகமானார்.அவர் பொன்னீலனை சிறுகதைகள் எழுதும்படி தூண்டினார். 1976ல் வெளிவந்த 'கரிசல்' என்ற நாவல் பொன்னீலனுக்கு இலக்கியக்கவனம் பெற்றுத்தந்தது. சோஷலிச யதார்த்தவாதம் என முற்போக்கு இலக்கிய இயக்கத்தவர் முன்வைத்த அழகியல் பார்வையின் உதாரணமாக அந்நாவல் கருதப்பட்டது. பொன்னீலனின் முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளிவந்தது.

பொன்னீலன்இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய முகமான கலை இலக்கிய பெருமன்றத்தில் செயல்பட்டாலும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. கட்சியை விமர்சனம் செய்தும் எழுதிவந்தார். கட்சி நெருக்கடி நிலையை ஆதரித்ததைக் கண்டித்து 1992 ல் 'புதிய தரிசனங்கள்' என்ற இரண்டு பாக நாவலை எழுதினார்.. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் இந்நாவலுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. குமரிமாவட்டத்தின் மதக்கலவரங்களின் வேர்களைத் தேடும் நாவலான மறுபக்கம் இவருடைய இன்னொரு முக்கியமான படைப்பு.

ப.ஜீவானந்தம் மீது பெரும் ஈடுபாடு கொண்ட பொன்னீலன் அவரை தன் இலக்கிய முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் கொண்டவர். இலக்கியத்தை தன்னிச்சையான அழகியல் செயல்பாடாகவும் அதேசமயம் அரசியல் உள்ளடக்கம் கொண்டதாகவும் அணுகுகிறார். இலக்கியம் முன்வைக்கும் அரசியல் ஏதேனும் செயல்திட்டத்தின் பகுதியாக அன்றி இலட்சியவாதமாக அமையவேண்டுமென்று கருதுகிறார்.

படைப்புகள்

புதினங்கள்
  • கரிசல்
  • கொள்ளைக்காரர்கள்
  • புதிய தரிசனங்கள்
  • தேடல்
  • மறுபக்கம்
  • பிச்சிப் பூ
  • புதிய மொட்டுகள்
  • ஊற்றில் மலர்ந்தது
சிறுகதைகள்
  • இடம் மாறிவந்த வேர்கள்
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
  • உறவுகள்
  • புல்லின் குழந்தைகள்
  • அன்புள்ள
  • நித்யமானது
  • சக்தித்தாண்டவம் (தொகுப்பாளர் அழகு நீலா)
  • பொட்டல் கதைகள்
  • அத்தானிக் கதைகள்
கட்டுரைகள்
  • புவி எங்கும் சாந்தி நிலவுக ( 10.09. 85 முதல் 02. 10.85 வரையிலான சமாதான யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு)
  • தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும்
  • முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
  • சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்
  • சாதி மதங்களைப் பாரோம்
  • தாய்மொழிக் கல்வி
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு
  • தெற்கிலிருந்து ( வாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
  • தமிழ் நாவல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
  • ஜீவா என்றொரு மானுடன்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி
  • வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி
  • ஒரு ஜீவநதி
  • தொ. மு. சி, ரகுநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தொகுத்தவை
  • ஜீவாவின் சிந்தனைகள்
  • ப. ஜீவானந்தம் நூல் திரட்டு

உசாத்துணை