பொதிகை நிகண்டு
பொதிகை நிகண்டு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல்.
ஆசிரியர்
சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிநாதக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுவாமிநாதம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்.
சுவாமிநாதக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியன் இயற்றிய பூவைப் புராணம் என்ற நூலை கொல்லம் 985-ல் (பொ.யு. 1810) அரங்கேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சுவாமிநாதக் கவிராயரின் காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.
பெயர்க்காரணம்
சுவாமிநாதக் கவிராயர் பொதிகை மலைக்கருகில் வசித்ததால் நிகண்டிற்கு இந்தப் பெயரைச் சூட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பதிப்பு
1931-ம் ஆண்டு எஸ். வையாபுரிப் பிள்ளை தனக்குக் கிடைத்த ஓலைப் பிரதிகளை ஒப்புநோக்கி, பொதிகை நிகண்டைப் பதிப்பித்தார்.
நூல் அமைப்பு
பொதிகை நிகண்டு இரு பகுதிகளாக, விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 500 சூத்திரங்களும், நூற்பாவால் இயற்றப்பட்ட 2228 சூத்திரங்களும் கொண்டு 14,500 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.
முதல் பகுதி ஒரு விலங்கு அல்லது பொருளுக்குரிய பல சொற்களைக் கூறுகிறது. இரண்டாம் பகுதி ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களைக் கூறுகிறது.
முதல் பகுதி
- தெய்வப் பெயர் தொகுதி
- மக்கட் பெயர் தொகுதி
- விலங்கின் பெயர்த் தொகுதி
- மரப் பெயர்த் தொகுதி
- இடப் பெயர்த் தொகுதி
- இயற்கை செயற்கை பலபொருள் பெயர்த் தொகுதி
- பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
- ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
- செயல் பற்றிய பெயர்த் தொகுதி
- ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி
- தகரம் முதல் ழகரவெதுகை 8 எதுகைகள்
இரண்டாம் பகுதி
அகர வருக்கம் முதல் வகர வருக்கம் வரை
பாடல் நடை
இறை வணக்கம்
பொன்பூத்த வெள்ளிப் பொருப்பனும னோன்மணியு
மூன்பூத்த வேழ முகத்தானே - யின்பூச்ச
பூவணியல் போலப் பொதிகை நிகண்டைப்பாடப்
பாவணிய லீய்ந்து காப்பான்.
விலங்கு பெயர்த் தொகுதி (பல சொல் ஒரு பொருள்)
மாப்புலி சராளியறி மாவயப்போத் தறுகு
மடங்கல்கே சறிரசா யுதமிருச ராசன்
சோப்பின்விலம் சரசுகண்டீ ரவமாளி சீயம்
சோளரியை முகன்பஞ்சா னனம்பூட்கை வயமா
இப்பொதிசேர் முடங்குளையே ஒயப்புலி மூலேமும்
சங்கப்பே ராம்பூட்கை வாளமே யாளி
காப்பறுகும் யானையா ளிப்பேோரங் சாட்டாக்
கவையமா வாமாவென் றியம்பினர் வல்லவரே.
(இப்பாடலில் சிங்கத்தையும், யானையையும் குறிக்கும் பல சொற்கள் குறிப்பிடப்பட்டன)
இரண்டாம் பகுதி (ஒரு சொல் பல பொருள்)
அத்தஞ்சொற் பொருளும் காமெத்த நாளும்
அருநெறியும் பொன்னும் பாதியுங் கரமும்
கண்ணா டியுமெனக் கழற லாகும்.
(அத்தம் என்ற சொல் அஸ்தம் என்ற நட்சத்திரம், கை, தங்கம், சொல்லின் பொருள், ஆண்டு, காடு,அருமை மிக்க வழி,கண்ணாடி,கரிசலாங்கண்ணி என்று பல பொருட்களைக் குறிக்கும்)
உசாத்துணை
✅Finalised Page